“சோசியல் மீடியா ஒரு தலைமுறை Zombie-க்களை உருவாக்கி கொண்டிருக்கிறோம்!” – அண்ணாமலை பரபரப்பு கருத்து
சோசியல் மீடியா பயன்பாடு குறித்து பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை தெரிவித்துள்ள கருத்து தற்போது கவனம் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் குழந்தைகளின் சோசியல் மீடியா பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிலும் மாணவர்களுக்கு கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் மட்டுமே சோசியல் மீடியா கிடைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். பாஜகவில் இருந்து விலகியுள்ள அண்ணாமலை தற்போது ‘We The Leaders’ என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இதன் மூலம் பல்வேறு மாவட்டங்களில் மரக்கன்றுகள் நடும் பணிகளிலும், கல்லூரி மாணவர்களிடையே உரையாற்றும் நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, சோசியல் மீடியா இன்று மிகப்பெரிய ஆபத்தாக மாறியுள்ளதாக தெரிவித்தார். மெட்டா உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்களின் வருமானத்தில் இந்தியாவின் பங்களிப்பு மிகப்பெரியது என்றும், நாட்டின் அதிக மக்கள் தொகை காரணமாக மிகப்பெரிய பயனர் சந்தையாக இந்தியா இருப்பதாகவும் அவர் கூறினார். சோசியல் மீடியா நிறுவனங்களின் அல்காரிதம்கள் மூலம் மக்கள் அதற்கு அடிமையாகி வருவதாக குறிப்பிட்ட அவர், தங்களுக்கு பிடித்த விஷயங்களை தொடர்ந்து பயனர்களின் செல்போன்களில் காட்டுவதன் மூலம் அவர்களின் கவனத்தை சோசியல் மீடியா கைப்பற்றுவதாக விமர்சித்தார். ஹோட்டல், விமானம், பேருந்து, நடைப்பயிற்சி என எங்கு சென்றாலும் மக்கள் கையில் செல்போனுடன் இருப்பதாகவும், இதன் மூலம் “ஒரு தலைமுறை Zombie-க்களை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்” என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், மாணவர்களுக்கு சோசியல் மீடியா கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் மட்டுமே கிடைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நிறுவனங்களுக்காக இந்திய பயனாளிகள் ஒரு பரிசோதனைப் பொருளாக மாறக்கூடாது என்றும் அவர் கூறினார். குழந்தைகளின் சோசியல் மீடியா பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் நடவடிக்கை எடுத்திருப்பதை சுட்டிக்காட்டிய அண்ணாமலை, இந்தியாவிலும் இதுபோன்ற நடவடிக்கைகள் குறித்து தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என்றார். “வளர்ந்து வரும் நாடான இந்தியாவிலும் சோசியல் மீடியா பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகள் கொண்டுவர வேண்டும். இது என்னுடைய தொடர் கோரிக்கை” என்று அவர் தெரிவித்தார். இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே சோசியல் மீடியா பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அண்ணாமலையின் இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமூக ஊடகங்களின் பயன்பாடு ஒரு தலைமுறை 'ஜோம்பிகளை' உருவாக்கி வருவதாக அண்ணாமலை கவலை தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் குழந்தைகளின் சமூக ஊடக பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இந்தியாவிலும் மாணவர்களுக்கு கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் மட்டுமே சமூக ஊடகங்கள் கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
பாஜகவிலிருந்து விலகிய அண்ணாமலை, தற்போது 'We The Leaders' என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் மூலம் அவர் பல்வேறு மாவட்டங்களில் மரக்கன்றுகள் நடும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.