PulseNews
தொழில்நுட்பம்

இமாலய பனிச்சரிவை முன்கூட்டியே கணித்த நிசார்: நாசா - இஸ்ரோவின் அசாத்திய சாதனை; விண்வெளியில் இருந்து துல்லிய எச்சரிக்கை

நேபாளம்-திபெத் இமாலய பகுதியில் 2026-ம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான பனி மற்றும் பாறைச் சரிவுக்கு முந்தைய வாரங்களில், அப்பகுதியில் ஏற்பட்ட நில அதிர்வு மற்றும் நில உருக்குலைவு குறித்த துல்லியமான ஆதாரங்களை நாசா-இஸ்ரோவின் கூட்டுத் திட்டமான 'நிசார்' செயற்கைக் கோள் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் பேரழிவை ஏற்படுத்தும் மலைச்சரிவுகளை முன்கூட்டியே கண்டறிவதில் விண்வெளி அடிப்படையிலான ரேடார் தொழில்நுட்பம் எவ்வாறு உதவக்கூடும் என்பதற்கான முக்கியச் சான்று கிடைத்துள்ளது. சாங்'ஆன் பல்கலைக்கழகத்தின் (Chang'an University) முனைவர் பட்ட ஆய்வாளர் ஜென்ஜியாங் லியு (Zenjiang Liu) பகிர்ந்துள்ள இந்த ஆய்வில், சிந்தடிக் அப்பேச்சர் ரேடார் பிக்சல்-ஆஃப்செட் டிராக்கிங் (SAR pixel-offset tracking) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இதன் மூலம், பனி பாறை அடுக்குகள் உடைந்த அதே குறிப்பிட்ட இடத்தில் நிலப்பரப்பு தொடர்ந்து நகர்ந்து வந்தது கண்டறியப்பட்டுள்ளது. சரிவு ஏற்படுவதற்கு முன் செங்குத்தான மலைச்சரிவு கடுமையான உருக்குலைவுக்கு உள்ளாகியிருந்ததும், நிலையற்ற பாறை மற்றும் பனிப்பகுதிகளில் அதிகளவிலான அழுத்தம் (Stress) உருவானதும் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. குறிப்பாக, பனிச்சரிவு ஏற்பட்ட மூலப் பகுதியில் பல மீட்டர்கள் அளவுக்கு நிலப்பரப்பு நகர்ந்துள்ளது ரேடார் அளவீடுகளில் பதிவாகியுள்ளது. முப்பரிமாணக் காட்சிகளின் (3D Visualisations) மூலம், இந்த நில நகர்வு சுற்றியுள்ள பிற பகுதிகளில் பரவாமல், மேல்நோக்கிய செங்குத்தான சரிவுப் பகுதியில் மட்டுமே தீவிரமாகக் குவிந்திருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகைய குறிப்பிட்ட இடத்திலான நகர்வு, பெரும் சரிவுகளுக்கு முந்தைய எச்சரிக்கை சமிக்ஞையாகக் கருதப்படலாம் என்பதை இது காட்டுகிறது. 2026-ம் ஆண்டில் நிகழ்ந்த இந்தப் பனிப்பாறைச் சரிவு, ஆற்றின் கீழ்நிலைப் பகுதிகளில் பெரும் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தி, நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளை கடுமையாக பாதித்தது. இமயமலையின் உச்சியில் ஏற்படும் சரிவு, பனி, பாறை மற்றும் இடிபாடுகளுடன் ஆற்றுப் பள்ளத்தாக்குகளில் கலந்து, தொலைதூரத்தில் உள்ள குடியிருப்புகளுக்கும் பெருவெள்ள அச்சுறுத்தலை உருவாக்கும் அபாயத்தை இந்நிகழ்வு வெளிப்படுத்தியது. வழக்கமான ஆப்டிகல் செயற்கைக்கோள்களைப் போல் அல்லாமல், ரேடார் அமைப்புகள் மேக மூட்டங்களைத் தாண்டியும், பகல் வெளிச்சம் இல்லாத இரவிலும் நிலப்பரப்பைப் படம் பிடிக்கும் திறன் கொண்டவை. அடர்ந்த மேகமூட்டமும் கடுமையான நிலப்பரப்பும் நிறைந்த தொலை தூர இமாலயப் பகுதிகளைக் கண்காணிக்க இத்தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. வெவ்வேறு காலகட்டங்களில் எடுக்கப்பட்ட ரேடார் படங்களை ஒப்பிட்டு, தரையில் ஏற்படும் மாற்றங்களைக் கணக்கிடும் முறையில், பனிச்சரிவுக்கு முந்தைய வாரங்களில் கணிசமான நில நகர்வு நிகழ்ந்தது துல்லியமாகக் கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய தொழில்நுட்பத் திறன்கள் எதிர்காலத்தில் ஆபத்து நிறைந்த மலைப் பகுதிகளுக்கு புதிய அளவிலான முன்னெச்சரிக்கை அமைப்புகளை உருவாக்க உதவும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எனினும், நில உருக்குலைவு ஏற்படுவதாலேயே அனைத்து மலைச் சரிவுகளும் சரிந்துவிடும் என்று அர்த்தமல்ல. ஒரு குறிப்பிட்ட சரிவு உடனடி ஆபத்தை ஏற்படுத்துமா என்பதைத் தீர்மானிக்க தொடர்ச்சியான கண்காணிப்பு, புவியியல் ஆய்வுகள் மற்றும் கள ஆய்வு அவசியமாகும். அதேவேளையில், ஆபத்து நிறைந்த மலைப்பகுதிகளை முறையாகக் கண்காணிக்க வேண்டியதன் அவசியத்தை இந்த ஆய்வு வலுப்படுத்தியுள்ளது. இத்தகைய செயற்கைக்கோள் தரவுகளைத் தொடர்ந்து சேகரித்து, வெளிப்படையாகப் பகிரவும், எல்லை தாண்டிய ஆபத்துகளைக் கையாள நாடுகளுக்கு இடையே தகவல் பரிமாற்றம் செய்யவும் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். ஒரு பெரும் பேரழிவு ஏற்படுவதற்கு முன்பே, விண்வெளியில் இருந்தபடி மலையடுக்கின் அழுத்தத்தைக் கண்டறிந்து, அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்கப் போதுமான அவகாசத்தை 'நிசார்' செயற்கைக்கோள் அமைப்புகள் வழங்க முடியும் என்பதற்கு இந்த ஆய்வு ஒரு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
இமாலய பனிச்சரிவை முன்கூட்டியே கணித்த நிசார்: நாசா - இஸ்ரோவின் அசாத்திய சாதனை; விண்வெளியில் இருந்து துல்லிய எச்சரிக்கை
PulseNews சுருக்கம்

நேபாளம் மற்றும் திபெத் இடையிலான இமாலயப் பகுதியில் 2026-ம் ஆண்டு நிகழ்ந்த கடுமையான பனி மற்றும் பாறைச் சரிவுக்கு முந்தைய வாரங்களில், அப்பகுதியில் ஏற்பட்ட நில அதிர்வு மற்றும் நில உருக்குலைவுகளை நாசா மற்றும் இஸ்ரோவின் கூட்டுத் திட்டமான 'நிசார்' செயற்கைக்கோள் துல்லியமாகப் பதிவு செய்துள்ளது.

இந்தத் தரவுகள் மூலம், பேரழிவை ஏற்படுத்தும் மலைச்சரிவுகளை முன்கூட்டியே கண்டறிவதில் விண்வெளி சார்ந்த ரேடார் தொழில்நுட்பம் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதற்கு முக்கியச் சான்று கிடைத்துள்ளது. சாங்'ஆன் பல்கலைக்கழகத்தின் ஆய்வின் அடிப்படையில் இந்தத் தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology