சோனியா காந்தியின் புத்தகம்: மோடி, ஆர்.எஸ்.எஸ், சீனா ஆக்கிரமிப்பு பகுதிகளை நீக்க அழுத்தம் - காங்கிரஸ் பகீர் குற்றச்சாட்டு
Written by: Manoj C.G, Asad Rehman சோனியா காந்தியின் சுயசரிதை நூலில் இருந்து பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் மோடி ஆட்சியில் இந்திய எல்லைப் பகுதிகளைச் சீனா ஆக்கிரமித்தது தொடர்பான பகுதிகளை நீக்குமாறு பெங்குயின் இந்தியா நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக மூத்த காங்கிரஸ் தலைவர்கள் வெள்ளிக்கிழமை குற்றம் சாட்டியுள்ளனர். சோனியா காந்தியின் ‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆப் லவ்’ (Belonging: a Journey of Love) என்ற சுயசரிதை நூலை இந்தியாவில் வெளியிடப்போவதில்லை என ‘பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா’ (Penguin Random House India) நிறுவனம் முடிவு செய்துள்ளதாக ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் செய்தி வெளியிட்ட மறுதினமே இக்குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புத்தகத்தின் கையெழுத்து பிரதியில் குறிப்பிட்ட சில திருத்தங்கள், நீக்கங்கள் செய்ய பதிப்பகம் விரும்பியதாகவும், ஆனால் சோனியா அதற்கு மறுத்துவிட்டதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பெங்குயின் ரேண்டம் ஹவுஸின் ஒரு பிரிவான அமெரிக்காவைச் சேர்ந்த 'ஆல்ஃபிரட் ஏ நாஃப்' (Alfred A Knopf) பதிப்பகம் மூலம் நவம்பர் 10 அன்று இந்நூல் வெளியிடப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக்கெலாட் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில், பதிப்பகம் திருத்தவோ அல்லது நீக்கவோ விரும்பிய முக்கிய விஷயங்கள் சீனா, மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ் பற்றியவைதான். இது முழுக்க முழுக்க அரசின் தலையீட்டால் நிகழ்ந்துள்ளது. தனிநபரின் கருத்து சுதந்திரத்தை அவர்கள் நசுக்கப் பார்க்கிறார்கள். சோனியா காந்தி ஒரு மாபெரும் தலைவர்; எதிர்க்கட்சித் தலைவராகவும், தேசிய ஆலோசனைக் குழுவின் (NAC) தலைவராகவும் இருந்தவர். அவர் உண்மைகளை எழுதுகிறார்; எந்தக் கதையையும் எழுதவில்லை. இது அவரது வாழ்க்கை மற்றும் அனுபவங்கள் பற்றியது. உண்மைகளை எப்படி மறுக்கவோ அல்லது தணிக்கை செய்யவோ முடியும்? என்று கேள்வி எழுப்பினார். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா, இந்தியாவில் இந்நூலைத் தாங்கள் வெளியிடவில்லை என்பதை ஒப்புக்கொண்டுள்ளது. எழுத்தாளர் தலையங்க மாற்றங்களை நிராகரித்த காரணத்தால்தான் பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா இந்நூலை வெளியிட வேண்டாம் என முடிவெடுத்தது என்ற கூற்று உண்மையான சூழல் பிரதிபலிக்கவில்லை. ஒரு பதிப்பகமாக உண்மைகளைச் சரிபார்ப்பதும் (fact check), நூலின் நலன் கருதி எழுத்தாளர்களுக்குப் பரிந்துரைகளை வழங்குவதும் எங்களது உரிமையும் கடமையுமாகும். இது பதிப்புத் துறையின் இயல்பான நடைமுறை. பேச்சுவார்த்தை முழுவதும் இந்நூலை வெளியிட நாங்கள் ஆர்வமாகவும் தயாராகவும் இருந்தோம். எழுத்தாளருடனான ரகசியக் கலந்துரையாடல்கள் குறித்து இதற்கு மேல் நாங்கள் கருத்துத் தெரிவிக்க மாட்டோம் என்றது. முன்னதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அசோக் கெலாட், உலகம் முழுவதும் வெளியாகும் புத்தகம் இந்தியாவில் மட்டும் வெளியாக முடியாமல் போவதற்கு என்ன காரணம் அல்லது என்ன அழுத்தம் இருக்கிறது? சோனியா காந்தியின் வாழ்க்கை தியாகத்திற்கும் அர்ப்பணிப்பிற்கும் ஓர் எடுத்துக்காட்டு. அவர் நாட்டுக்கு ஆற்றிய சேவை முன்மாதிரியானது எனக் குறிப்பிட்டிருந்தார். மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்தும் இச்சம்பவம் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார். சோனியா காந்தி போன்ற ஒரு மூத்த தலைவர் என்ன எழுத வேண்டும், என்ன எழுதக் கூடாது என்பதைப் பதிப்பகம் தீர்மானிக்குமா? பதிப்பகம் தனது சொந்த விருப்பத்தின் பேரில் இதைச் சொல்கிறதா அல்லது வேறு யாருடைய அழுத்தமாவது அதன் பின்னணியில் உள்ளதா என்ற கேள்வியும் எழுகிறது. இதற்கு முன்னரும் சந்தேகத்திற்கிடமான சூழல்களில் சில முக்கியப் புத்தகங்களின் வெளியீடு தடுக்கப்பட்டுள்ளது. கருத்துச் சுதந்திரத்திற்கு விடுக்கப்படும் கடுமையான அச்சுறுத்தலாகவே இந்த போக்கை நான் பார்க்கிறேன். சோனியா காந்தியின் சுயசரிதை விரைவில் வெளியாக வேண்டும் என்று அவர் பதிவிட்டுள்ளார். இந்தியாவில் பெங்குயின் நிறுவனம் விலகியதைத் தொடர்ந்து, பல இந்தியப் பதிப்பகங்கள் இப்புத்தகத்தை வெளியிடப் போட்டியிட்டு வருகின்றன. இதில் 'ஹார்பர்காலின்ஸ்' (HarperCollins) பதிப்பகம் இந்நூலை இந்தியாவில் அச்சிட்டு விநியோகிப்பதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்யும் தருவாயில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சோனியா காந்தியின் ‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆப் லவ்’ என்ற சுயசரிதை நூலில் இடம்பெற்றுள்ள சில முக்கிய பகுதிகளை நீக்க அழுத்தம் கொடுக்கப்பட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மற்றும் மோடியின் ஆட்சிக்காலத்தில் இந்திய எல்லைப் பகுதிகளை சீனா ஆக்கிரமித்தது தொடர்பான விவரங்களை நீக்க பெங்குயின் இந்தியா நிறுவனத்திற்கு நெருக்கடி அளிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த அழுத்தங்களின் காரணமாகவே, சோனியா காந்தியின் இந்த சுயசரிதை புத்தகம் இந்தியாவில் வெளியிடப்படாது என்று பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்த தகவல்களை மனோஜ் சி.ஜி மற்றும் ஆசாத் ரஹ்மான் ஆகியோர் பதிவு செய்துள்ளனர்.