“சசிகலாவை முதல்வராக்குங்கள் என முதலில் சொன்னதே அவர் தான்” - அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு!
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி குடமுழுக்கு விழா மிகவும் கோலகலமாக நடைபெறவுள்ளது. இந்த விழாவிற்கான திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், மதுரை மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இன்று (29-08-26) கோயிலில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “குடமுழுக்கு விழாவில் அதிகமாக கூட்டம் இருக்கும். அந்த இடத்தில் முதல்வர் விஜய் இன்னும் கூட்டம் அதிகம் ஆகும். அவர் வருவதாக இதுவரை எந்தவிதமான திட்டமிடலும் இல்லை” என்று கூறினார். இதையடுத்து பிரதமர் ஆவதற்கு முதல்வர் விஜய் மூன்றாவது இடத்தில் உள்ளதாக இந்தியா டுடே எடுத்த கருத்து கணிப்பு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “இந்தியா முழுவதும் ஒட்டுமொத்த மக்களும் ஒரு சில விஷயங்களை ஆசைப்படுவார்கள். இதை இப்போது பேச வேண்டிய விஷயமில்லை” என்று கூறினார். காங்கிரஸ் இல்லையென்றால் தவெக கதையை அமித்ஷா முடித்திருப்பார் என மாணிக்கம் தாகூர் கூறியதற்கு கேள்வி எழுப்புகையில், “தவெக, எங்களுடைய நிலைப்பாட்டில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். யாரிடமும் நாங்கள் சமரசமாக போவதில்லை. யாருக்கும் பயந்தோ, யாருக்கும் சமரசம் செய்தோ அரசியல் செய்யமாட்டோம்” என்று கூறினார். இதையடுத்து முதல்வர் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வைத்த விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “அவருடைய இருப்பை காட்டிக் கொள்வதற்காக ஏதாவது பேசிட்டு இருக்கிறார். அவர் பேசுவது யாருக்காவது புரியுதா? இன்னைக்கு ஒன்றை பேசுகிறார், நாளைக்கு ஒன்றை பேசுகிறார். இன்னும் 6 மாதத்தில் எடப்பாடி பழனிசாமி தேவையில்லை, நானே பொதுச் செயலாளராக இருந்திருக்கிறேன் என்று சொல்வார். அந்த கட்சியை முதலில் இருந்தே கெடுத்ததே அவர் தான். ஓ.பன்னீர்செல்வத்தை மாற்றிவிட்டு சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என்று முதலில் சொன்னதே அவர் தான். அங்கிருந்து ஆரம்பித்து இந்த கட்சியை கெடுத்து இந்த நிலைமைக்கு கொண்டு வந்ததில் 80% ஆர்.பி.உதயகுமாரின் பங்கு இருக்கிறது” என்று கூறினார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள குடமுழுக்கு விழாவிற்கான திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை ஆய்வு செய்ய அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இன்று நேரில் சென்றனர்.
ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், சசிகலாவை முதலமைச்சராக்க வேண்டும் என்று முதலில் கூறியதே அவர்தான் என்று தெரிவித்துள்ளார். குடமுழுக்கு விழா முன்னேற்பாடுகள் குறித்தும் அவர் அங்கு விளக்கம் அளித்தார்.