மின்சார இணைப்புக்காக இனி அலைய வேண்டாம்...! - ஜி.பி.எஸ். மூலம் புதிய நடைமுறை நாளை முதல் அமல்...!
தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் சார்பில் அனைத்து தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வைப் பொறியாளர்களுக்கும் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதில், இணையதளம் வாயிலாக புதிய மின்சார இணைப்புக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு முக்கியமான மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,"இணையதளம் மூலம் மின்சார இணைப்புக்கு விண்ணப்பிக்கும்போது, தேவையான ஆவணங்களுடன் மின்சார இணைப்பு வழங்கப்பட வேண்டிய இடத்தின் ஜி.பி.எஸ். இருப்பிடக் குறியீட்டையும் விண்ணப்பதாரரே பதிவு செய்ய வேண்டும். இனி ஆவணங்களின் அச்சு நகல்களை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. விண்ணப்பதாரர் பதிவு செய்யும் ஜி.பி.எஸ். தகவல்கள், புவியிட அமைப்பு வரைபடங்களுக்கான ஜி.ஐ.எஸ். செயலி மூலம் துல்லியமாக சரிபார்க்கப்படும். விண்ணப்பத்தில் பதிவு செய்யப்பட்ட இருப்பிடத் தகவல்கள் சரியாக இருப்பது உறுதி செய்யப்பட்டால், நேரடியாக கள ஆய்வு மேற்கொள்ளாமல் விண்ணப்பம் அடுத்தகட்ட பரிசீலனைக்கு அனுப்பப்படும்.விண்ணப்பதாரர் அளித்த ஜி.பி.எஸ். இருப்பிடத் தகவல்கள் சரிபார்ப்பில் தோல்வியடைந்தால், வழக்கமாக மேற்கொள்ளப்படும் கள ஆய்வு நடைமுறை தொடரும்.ஜி.பி.எஸ். சரிபார்ப்பு நிறைவடைந்ததும், மின்சார இணைப்புக்கான மதிப்பீடு தயாரிக்கப்படும். அதன் பின்னர் இணைப்பு வழங்கும் பணியின்போது, மீட்டர் பொருத்தப்பட உள்ள இடத்தின் உண்மையான ஜி.பி.எஸ். இருப்பிடத் தகவலும் பதிவு செய்யப்பட்டு மீண்டும் சரிபார்க்கப்படும்.இந்தச் சரிபார்ப்பு முடிந்த பிறகு மீட்டர் தொடர்பான விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, மின்சார இணைப்பு வழங்கப்படும்.மின்சார இணைப்புக்காக விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்பத்தின் தற்போதைய நிலை மற்றும் அதில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் குறித்து உடனுக்குடன் அறிந்து கொள்ளும் வகையில் தகவல் தெரிவிக்கப்படும். இதற்காக குறுஞ்செய்தி, மின்னஞ்சல் அல்லது அறிவிப்பு வாயிலாக விண்ணப்பதாரர்களுக்கு தகவல்கள் அனுப்பப்படும்.இந்தப் புதிய நடைமுறை நாளை வெள்ளிக்கிழமை முதல் இணையதளத்தில் நடைமுறைக்கு வருகிறது. இருப்பினும், இது ஏற்கனவே வழங்கப்பட்ட மின்சார இணைப்புகளுக்கு பொருந்தாது என்றும், நாளை முதல் பதிவு செய்யப்படும் புதிய விண்ணப்பங்களுக்கு மட்டுமே இந்த நடைமுறை பொருந்தும் என்றும் தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.

புதிய மின் இணைப்பு கோரி இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும் நடைமுறையில் தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இதன்படி, விண்ணப்பதாரர்கள் தங்களின் ஆவணங்களுடன் அந்த இடத்தின் ஜி.பி.எஸ். (GPS) இருப்பிடக் குறியீட்டையும் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த புதிய நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது. இது தொடர்பாக அனைத்து தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வைப் பொறியாளர்களுக்கு மின்சார வாரியம் சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.