PulseNews
தொழில்நுட்பம்

96% மறையும் நிலவு... வானில் தோன்றப்போகும் ரத்த நிலா: இந்தியாவில் தெரியுமா?

2026 ஆக.27 அன்று நிகழவுள்ள மிக முக்கிய பகுதி சந்திர கிரகணத்தின்போது நிலவின் 96 சதவீதம் பூமியின் நிழலால் மறைக்கப்பட உள்ளது. இந்த கிரகணம் பகல் நேரத்தில் நிகழ்வதால் இந்தியாவில் இதனைப் பார்க்க முடியாது. இந்நிகழ்வின்போது சூரியனின் சிறிய அளவிலான ஒளி மட்டுமே நிலவின் மீது படுவதால், அதன் மேற்பரப்பு செம்மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கும். இச்சந்திர கிரகணம் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆப்ரிக்கா ஆகிய பகுதிகளில் தெளிவாகத் தெரியும். நிலவு பூமியின் வெளிப்புற நிழலுக்குள் நுழையும் போது, கிழக்கு நேரப்படி (ET) இரவு 9:23 மணிக்கு கிரகணம் தொடங்குகிறது. சந்திர கிரகணத்தின் நேரங்கள் (ET நேரப்படி) பகுதி கிரகணம் தொடக்கம் இரவு 10:33 மணி (பூமியின் அடர்ந்த 'அம்ப்ரா' நிழல் நிலவின் மேற்பரப்பில் பரவத் தொடங்கும்). உச்சக்கட்டம் (Peak) நள்ளிரவு 12:12 மணி (நிலவின் 96.2% பகுதி பூமியின் நிழலில் மறைந்திருக்கும்). பகுதி கிரகணம் முடிவு அதிகாலை 1:51 மணி, முழு கிரகண நிகழ்வு முடிவு (Penumbral End) அதிகாலை 3:01 மணி. இந்த ஒட்டுமொத்த கிரகண நிகழ்வும் சுமார் 5 மணி நேரம் நீடிக்கும். வட மற்றும் தென் அமெரிக்க மக்களுக்கு இந்த சந்திர கிரகணம் மிகத் தெளிவாகக் காட்சி தரும். ஐரோப்பிய மக்கள் ஆக.28 அதிகாலை வேளையில் இக்கிரகணத்தைக் காணலாம். பகுதி கிரகணம் நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே அங்கு நிலவு மறையத் தொடங்கும். லண்டன் வாசிகள் பிரிட்டிஷ் கோடை நேரப்படி (BST) அதிகாலை 5:12 மணிக்கு இதன் உச்சக்கட்டக் காட்சியைக் காண முடியும். ஆப்பிரிக்கா: ஆப்ரிக்காவில் எகிப்து நாட்டில் இதன் உச்சக்கட்டத்தின்போது நிலவின் 93% மறைந்திருக்கும். உள்ளூர் நேரப்படி அதிகாலை 4:24 மணிக்குத் தொடங்கி, 5:34 மணிக்கு பகுதி கிரகணம் ஏற்படும். தலைநகர் கெய்ரோவில் சூரிய உதயத்தின் போது காலை 6:29 மணியளவில் உச்சக்கட்ட கிரகணத்தைக் காணலாம். கிரகணம் நிகழும் இந்த இரவில் சனி கிரகம் நிலவுக்கு மிக அருகில் காணப்படும். அதேபோல், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு தென்மேற்கு திசையில் சுக்கிரன் (வெள்ளி) கிரகம் அதிகப் பிரகாசத்துடன் ஒளிர்வதைக் காண முடியும். பூமியின் வளிமண்டலம் சூரிய ஒளியை வடிகட்டி வளைப்பதே நிலவு சிவப்பு நிறமாகத் தோன்றுவதற்குக் காரணம் ஆகும். நீண்ட அலைநீளம் (Longest wavelength) கொண்ட சிவப்பு நிற ஒளியை மட்டுமே பூமியின் வளிமண்டலம் தன் வழியே கடக்க விடுகிறது. இந்த ஒளி நிலவை நோக்கி ஒளிவிலகல் அடைவதால், நிலவு துருப்பிடித்த ஆரஞ்சு நிறத்தில் (Rusty orange glow) ஒளிர்கிறது. இந்தியாவில் இந்த கிரகணம் பகல் நேரத்தில் நிகழ்வதால் இந்திய மக்களால் இதனைப் பார்க்க இயலாது. இந்திய நேரப்படி (IST) ஆகஸ்ட் 28 அன்று சூரிய உதயத்திற்குப் பிறகு காலை 6:53 மணிக்குத் தொடங்கி, மதியம் 12:32 மணி வரை இந்த கிரகணம் நீடிக்கும்.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
96% மறையும் நிலவு... வானில் தோன்றப்போகும் ரத்த நிலா: இந்தியாவில் தெரியுமா?
PulseNews சுருக்கம்

ஆகஸ்ட் 27, 2026 அன்று நடைபெறவுள்ள பகுதி சந்திர கிரகணத்தின் போது, நிலவின் 96 சதவீத பகுதி பூமியின் நிழலால் மறைக்கப்பட உள்ளது. இந்த நிகழ்வின் போது சூரிய ஒளி மிகக் குறைந்த அளவே நிலவின் மீது விழுவதால், அதன் மேற்பரப்பு செம்மஞ்சள் நிறத்தில் ரத்த நிலா போன்று காட்சியளிக்கும்.

இந்த சந்திர கிரகணம் பகல் நேரத்தில் நிகழ்வதால், இந்தியாவில் இதைக் காண முடியாது. வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் மட்டுமே இந்த வான் அதிசயம் தெளிவாகத் தெரியும்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology