சென்னை ஓ.எம்.ஆர்., ரேடியல் சாலையில் புதிய மாற்றம்: மெட்ரோ, பேருந்து, நடைபாதை வசதிகள் ஒருங்கிணைப்பு
சென்னையின் முக்கிய சாலைகளான பழைய மகாபலிபுரம் சாலை (ஓஎம்ஆர்) மற்றும் பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலை ஆகியவை புதிய தோற்றம் பெற உள்ளன. சாலை, பேருந்து, மெட்ரோ ரயில், சைக்கிள் மற்றும் நடைபயண வசதிகளை ஒருங்கிணைத்து, இந்த சாலைகளை சிறந்த நகர்ப்புற போக்குவரத்து வழித்தடங்களாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை (டிபிஆர்) தயாரிக்க சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (CUMTA) ஒப்பந்தப்புள்ளியை வெளியிட்டுள்ளது. திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்ட பிறகு, பணிகளை நெடுஞ்சாலைத்துறை மேற்கொள்ளும். இந்தத் திட்டத்தில் மொத்தம் 32.4 கி.மீ. சாலைகள் மேம்படுத்தப்பட உள்ளன. இதில், மத்திய கைலாஷ் முதல் கேளம்பாக்கம் வரையிலான 25 கி.மீ. ஓஎம்ஆர் சாலையும், பல்லாவரம் பாலம் முதல் துரைப்பாக்கம் சந்திப்பு வரையிலான 7.4 கி.மீ. ரேடியல் சாலையும் அடங்கும். மெட்ரோ ரயிலுடன் இணைப்பு ஓஎம்ஆர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் மெட்ரோ ரயில் இணைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது. எதிர்காலத்தில் அமைய உள்ள மெட்ரோ ரயில் பாதைகள் மற்றும் நிலையங்களை கருத்தில் கொண்டு சாலைகள் வடிவமைக்கப்படும். மெட்ரோ நிலையங்களில் இருந்து பேருந்துகள், ஆட்டோ உள்ளிட்ட பிற பொதுப் போக்குவரத்து வசதிகள், சைக்கிள் மற்றும் நடைபாதைகளுக்கு மக்கள் எளிதாக மாறிச் செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. மெட்ரோ நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகள் பல்வேறு போக்குவரத்து வசதிகள் சந்திக்கும் மையங்களாக மாற்றப்படும். இதற்காக பாதுகாப்பான நடைபாதைகள், பேருந்து இணைப்புகள், சைக்கிள் பாதைகள் மற்றும் கடைசி கட்டப் பயணத்துக்கான வசதிகள் ஏற்படுத்தப்படும். ஓஎம்ஆர் மெட்ரோ ஒருங்கிணைப்பு பணிகளை விரைவாக மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக சிஎம்யூடிஏ உறுப்பினர் செயலாளர் ஐ. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மெட்ரோ ரயில் பணிகளுடன் சாலை மேம்பாட்டுப் பணிகளையும் ஒருங்கிணைத்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி பணிகள் நடந்தால், அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் விரிவான திட்ட அறிக்கை தயாராகும். அதன்பிறகு 2027 ஜூன் மாதத்தில் பணிகளுக்கான ஒப்பந்தம் வழங்கப்படலாம். பணிகள் சுமார் ஓராண்டில் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேருந்துகளுக்கு தனிப்பாதை ஓஎம்ஆர் மற்றும் பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலை மேம்பாட்டில் பொதுப் போக்குவரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது. பேருந்துகளுக்கான தனிப்பாதைகள், குறிப்பிட்ட நேரங்களில் பேருந்துகளுக்கு மட்டும் முன்னுரிமை வழங்கும் பாதைகள், முறையாக அமைக்கப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்ட வசதிகள் திட்டத்தில் இடம்பெறும். பல்லாவரம்-துரைப்பாக்கம் சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு ஏற்ப, குறிப்பிட்ட நேரங்களில் பேருந்துகளுக்கு மட்டும் தனிப்பாதை அமைக்கப்படலாம். இதை கண்காணிக்க டிஜிட்டல் தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படலாம். தேவையான இடங்களில் பேருந்துகளுக்கான தனிப்பாதைகள் தடுப்புகளுடன் அமைக்கப்படும். இந்தப் பணிகள் குறித்து மாநகர போக்குவரத்துக் கழகம் மற்றும் போக்குவரத்துத் துறையுடன் சிஎம்யூடிஏ ஆலோசனை நடத்தும். நகரில் பேருந்து விரைவு போக்குவரத்து திட்டம் மற்றும் தனிப்பேருந்து பாதைகள் அமைக்கும் திட்டங்களுடன் இந்தப் பணிகள் ஒருங்கிணைக்கப்படும். பல்லாவரம்-துரைப்பாக்கம் சாலையில் பேருந்து விரைவு போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்துவதற்குத் தேவையான அளவுக்கு சாலை அகலமாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நடைபாதை, சைக்கிள் வசதிகளுக்கு முக்கியத்துவம் இந்தத் திட்டம் சாலையை வெறுமனே அகலப்படுத்தும் பணியாக இருக்காது. சாலையின் இருபுறமும் ஒரே மாதிரியான சாலை அமைப்பு, பசுமைத் தடுப்புகள், சேவைச் சாலைகள், பாதுகாப்பான சந்திப்புகள் மற்றும் போக்குவரத்து வேகத்தைக் கட்டுப்படுத்தும் வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. மேலும், பாதசாரிகள் சாலையை பாதுகாப்பாகக் கடக்க நடைபாதைகள், சாலையின் நடுவில் பாதுகாப்புத் தீவுகள், சைக்கிள் பாதைகள் உள்ளிட்ட வசதிகள் உருவாக்கப்படும். தேவையான இடங்களில் மேம்பால நடைபாதைகள், ஸ்கைவாக் போன்ற வசதிகளும் அமைக்கப்படும். மின்சாரம், குடிநீர் குழாய்கள் நிலத்தடியில் சாலையோரத்தில் இருக்கும் மின்சாரம், தொலைத்தொடர்பு, குடிநீர், எரிவாயு மற்றும் கழிவுநீர் குழாய்கள் உள்ளிட்ட அனைத்து பயன்பாட்டு கட்டமைப்புகளையும் திட்டமிட்டு நிலத்தடியில் அமைப்பதற்கான வாய்ப்புகளும் ஆய்வு செய்யப்படும். மழைநீர் வடிகால் வசதிகள் மேம்படுத்தப்படுவதுடன், மழைநீரை நிலத்துக்குள் செலுத்தும் ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளன. சாலையோரங்களில் மரங்கள், பசுமைப் பகுதிகள், நிழலான நடைபாதைகள் மற்றும் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்படும். பெண்கள், குழந்தைகள், முதியோருக்கு பாதுகாப்பு சாலை பாதுகாப்புக்கும் இந்தத் திட்டத்தில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பாதுகாப்பான சாலை சந்திப்புகள், தெருவிளக்குகள், போக்குவரத்து அறிவிப்புப் பலகைகள் மற்றும் பாதசாரிகள் கடக்கும் இடங்கள் அமைக்கப்படும். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதாகவும் பாதுகாப்பாகவும் பயன்படுத்தும் வகையில் நடைபாதைகள் மற்றும் பிற வசதிகள் வடிவமைக்கப்படும். இதன் மூலம் ஓஎம்ஆர் மற்றும் பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலை ஆகியவை வெறும் வாகனப் போக்குவரத்துக்கான சாலைகளாக இல்லாமல், மெட்ரோ, பேருந்து, சைக்கிள் மற்றும் நடைபயணத்தை ஒருங்கிணைக்கும் நவீன நகர்ப்புற போக்குவரத்து வழித்தடங்களாக மாற்றப்பட உள்ளன செய்தி ஆதாரம்: தி டிடி நெக்ஸ்ட்

சென்னையின் முக்கிய சாலைகளான பழைய மகாபலிபுரம் சாலை (ஓஎம்ஆர்) மற்றும் பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலை ஆகியவற்றை மேம்படுத்தும் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. இச்சாலைகளை நவீன நகர்ப்புற போக்குவரத்து வழித்தடங்களாக மாற்றும் வகையில், பேருந்து, மெட்ரோ ரயில், சைக்கிள் மற்றும் நடைபாதை வசதிகளை ஒருங்கிணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை (டிபிஆர்) தயாரிப்பதற்கான ஒப்பந்தப்புள்ளியை சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (CUMTA) வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை தயாரான பிறகு, நெடுஞ்சாலைத் துறையின் மூலம் அடுத்தகட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.