PulseNews
தொழில்நுட்பம்

சட்டப் பேரவையில் விதி எண் 110இன் கீழ் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் விஜய்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செமிகண்டெக்டர் மற்றும் மின்னணுவியல் உற்பத்தி பூங்கா, கோயம்புத்தூரில் டிஜிட்டல் நிதி மையம் மற்றும் திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் பல்முனை சரக்குப் போக்குவரத்து மையம் அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-இன் கீழ், தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அறிவிப்புகளை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் ஆற்றிய உரையில், “தமிழ்நாட்டில் செமிகண்டெக்டர் துறையில் அதிக அளவு முதலீட்டினை ஈர்க்கவும், இத்துறையில் நமது மாநிலத்தின் பங்கினை கணிசமான அளவு உயர்த்திடவும், காஞ்சிபுரம் மாவட்டம், மதுர மங்கலத்தில் குறைக்கடத்தி மற்றும் மின்னணுவியல் உற்பத்திப் பூங்கா (Semiconductor & Electronics Manufacturing Park) 175 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிப்காட் நிறுவனம் மூலம் அமைக்கப்படும். இப்பூங்காவில், குறைக்கடத்தி துறையில் புதிய தொழிற்சாலைகள் அமைப்பதற்கு ஏதுவாக உலகத்தரம் வாய்ந்த, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R & D Research and Development) வசதிகள் ஏற்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் இத்துறையில் சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் வரை முதலீடுகள் ஈர்க்கப்படும். மேலும், சுமார் 5,000 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும். நிதித் தொழில்நுட்ப (FinTech) புதுமைகளுடன் டிஜிட்டல் நிதிச் சேவைகளை உருவாக்கும் நோக்கில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மூலம் கோயம்புத்தூரில் டிஜிட்டல் நிதி மையம் பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும். உலகத் தரத்திலான வசதிகள், அலுவலக இடங்கள், புத்தொழில் நிறுவனங்கள், நவீன ஆய்வகங்கள், பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு போன்ற அதிநவீன வசதிகள் இம்மையத்தில் இடம்பெறும். இதன்மூலம், கோயம்புத்தூர் மாவட்டத்தில், நிதி மற்றும் நிதிநுட்பத் துறையில் உலகளாவிய முதலீடுகளை ஈர்க்கவும், நவீன தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கவும். உயர்தர வேலைவாய்ப்புகளை ருவாக்கவும் இத்திட்டத்தில் வழிவகை செய்யப்படும். 2026-27-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டில் முக்கிய இடங்களில் பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்காக்கள், துறைமுகங்கள் அமைத்து முதலீட்டை ஈர்க்க அரசு முயற்சிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மற்றும் அதன் அருகில் அமைந்துள்ள மாவட்டப் பகுதிகளில் முக்கிய உற்பத்தித் தொழிற்சாலைகள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அதிகளவில் உள்ளதால், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மூலம் ஆய்வு மேற்கொண்டு, திட்ட அறிக்கை தயார்செய்து அதன் அடிப்படையில் பல்முனை திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் சரக்கு போக்குவரத்து மையம் ஒன்று அமைக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

Nakkheeran15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
சட்டப் பேரவையில் விதி எண் 110இன் கீழ் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் விஜய்!
PulseNews சுருக்கம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி எண் 110-இன் கீழ் முதல்வர் ச.ஜோசப் விஜய் பல்வேறு முக்கிய திட்டங்களை அறிவித்துள்ளார். இதன்படி, காஞ்சிபுரத்தில் செமிகண்டெக்டர் மற்றும் மின்னணுவியல் உற்பத்தி பூங்கா, கோயம்புத்தூரில் டிஜிட்டல் நிதி மையம் மற்றும் திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் பல்முனை சரக்குப் போக்குவரத்து மையம் ஆகியவை அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் செமிகண்டெக்டர் துறையில் முதலீடுகளை ஈர்ப்பதன் மூலமும், இத்துறையில் மாநிலத்தின் பங்களிப்பை அதிகரிப்பதன் மூலமும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக முதல்வர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology