மின் இணைப்பு பெற இனி கள ஆய்வு தேவையில்லை; தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் புதிய நடைமுறை
தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் புதிய மின் இணைப்பு பெறுவோருக்கான நடைமுறைகளை மேலும் எளிமையாக்கும் வகையில் ஒரு புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. இனி ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போதே, மின் இணைப்பு கோரும் இடத்தின் ஜி.பி.எஸ் இருப்பிடக் குறியீடுகளை விண்ணப்பதாரர்களே பதிவு செய்ய வேண்டும். ஜி.ஐ.எஸ். செயலி மூலம் இந்தத் தகவல்கள் சரியாக இருக்கும் பட்சத்தில், எந்தவித நேரில் கள ஆய்வும் இல்லாமல் உடனடியாக விண்ணப்பம் அடுத்தகட்டத்துக்கு நகர்த்தப்பட்டு விரைவாக மின் இணைப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் அனைத்து தலைமை பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும்போது தேவையான ஆவணங்களுடன், மின்சார இணைப்பு வழங்க வேண்டிய இடத்தின் ஜி.பி.எஸ். இருப்பிட குறியீடுகளை விண்ணப்பதாரரே பதிவு செய்ய வேண்டும். ஆவணங்களின் அச்சு நகல்களை கட்டாயமாக சமர்ப்பிக்கக் கூடாது. விண்ணப்பதாரர் அளிக்கும் ஜி.பி.எஸ். தகவல்கள் (செயற்கைக்கோள்கள் மூலம் பூமியில் எங்கு இருக் கிறோம் என்பதைத் துல்லியமாகக் கண்டறியும் வழிகாட்டு அமைப்பு) புவியிட அமைப்பு வரைபடங்களுக்கான ஜி.ஐ.எஸ். செயலி மூலம் சரிபார்க்கப்படும். தகவல்கள் சரியாக இருந்தால் கள ஆய்வு இல்லாமல் விண்ணப்பம் அடுத்தகட்டத்துக்கு அனுப்பப்படும். சரிபார்ப்பில் தோல்வி ஏற்பட்டால், வழக்கமான கள ஆய்வு நடைமுறை மேற்கொள்ளப்படும். ஜி.பி.எஸ். சரிபார்ப்பு முடிந்ததும், மதிப்பீடு செய்யப்பட்டு, மின்சார இணைப்பு வழங்கும் பணியின்போது மீட்டர் பொருத்தப்படும் இடத்தின் உண்மையான ஜி.பி.எஸ். தகவலும் பதிவு செய்து சரிபார்க்கப்படும். பின்னர் மீட்டர் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு இணைப்பு வழங்கப்படும். விண்ணப்பத்தின் நிலை மற்றும் மாற்றங்கள் குறித்த தகவல்களும் விண்ணப்பதாரருக்கு குறுஞ்செய்தி, மின்னஞ்சல் அல்லது அறிவிப்பு மூலம் தெரிவிக்கப்படும். இந்தப் புதிய நடைமுறை நாளை (வெள்ளிக்கிழமை) முதல் இணையதளத்தில் பதிவு செய்யப்படும். இது புதிய விண்ணப்பங்களுக்கு மட்டும் பொருந்தும்” என்று தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகத்தின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் புதிய மின் இணைப்பு பெறுவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்தியுள்ளது. இனி விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போதே, மின் இணைப்பு தேவைப்படும் இடத்தின் ஜி.பி.எஸ் (GPS) குறியீடுகளைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
ஜி.ஐ.எஸ் (GIS) செயலி மூலம் இந்தத் தகவல்கள் சரிபார்க்கப்படும். இதன்பின்னர் நேரில் கள ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல், விண்ணப்பங்கள் விரைவாக அடுத்தகட்டத்திற்கு நகர்த்தப்பட்டு மின் இணைப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.