ஆகஸ்ட் 28-ல் நடக்கும் விண்வெளி அதிசயம்: நிலாவுக்கு என்ன ஆகப்போகுது தெரியுமா?
வானில் நிலவை ரசிப்பவர்களுக்கு ஆகஸ்ட் 28-ம் தேதி ஒரு சுவாரஸ்யமான காட்சி காத்திருக்கிறது. அன்று நிலவு பூமியின் அடர்ந்த நிழலுக்குள் ஆழமாகச் செல்லும். நிலவின் விட்டத்தில் சுமார் 93 சதவீதம் வரை பூமியின் இருண்ட நிழலான ‘அம்ப்ரா’ பகுதிக்குள் செல்லும். இவ்வளவு பெரிய பகுதி நிழலுக்குள் சென்றாலும், இது ஏன் முழு சந்திர கிரகணம் என்று அழைக்கப்படாது? அதற்குக் காரணம், நிலவின் ஒரு சிறிய பகுதி மட்டும் பூமியின் இருண்ட நிழலுக்கு வெளியே இருப்பதுதான். சந்திர கிரகணம் என்பது பூமி, சூரியன் மற்றும் நிலவுக்கு நடுவில் வரும்போது ஏற்படுகிறது. இதனால் சூரியனின் ஒளி நேரடியாக நிலவின் மீது விழுவது தடுக்கப்படுகிறது. பூமியின் நிழலில் இரண்டு முக்கிய பகுதிகள் உள்ளன. வெளிப்புறத்தில் இருக்கும் லேசான நிழல் ‘பெனும்ப்ரா’ என்றும், மிகவும் அடர்ந்த உள் நிழல் ‘அம்ப்ரா’ என்றும் அழைக்கப்படுகிறது. நிலவு முழுவதுமாக அம்ப்ரா பகுதிக்குள் சென்றால் மட்டுமே அது முழு சந்திர கிரகணம். நிலவின் ஒரு பகுதி மட்டும் அம்ப்ராவுக்குள் சென்றால் அது பகுதி சந்திர கிரகணம். ஆகஸ்ட் 28-ம் தேதி நடக்க இருப்பது இந்த இரண்டாவது வகைதான். நாசாவின் கணக்கீட்டின்படி, இந்த கிரகணத்தின் ‘அம்ப்ரல் மேக்னிடியூட்’ 0.9299 ஆக உள்ளது. எளிமையாகச் சொன்னால், அதிகபட்ச கிரகணத்தின் போது நிலவின் விட்டத்தில் சுமார் 93 சதவீதம் பூமியின் அடர்ந்த நிழலுக்குள் இருக்கும். மீதமுள்ள சுமார் 7 சதவீத பகுதி அந்த நிழலுக்கு வெளியே இருக்கும். அந்தச் சிறிய பகுதியே இந்த கிரகணத்தை முழு சந்திர கிரகணமாக மாறவிடாமல் தடுக்கிறது. அதனால், ஆகஸ்ட் 28-ம் தேதி நடைபெறுவது மிகவும் ஆழமான பகுதி சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கிரகணத்தின் பகுதி, அதாவது அம்ப்ரா கட்டம் மட்டும் சுமார் 3 மணி நேரம் 18 நிமிடங்கள் நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நிலவு பூமியின் பெனும்ப்ரா நிழல் வழியாகச் செல்லும் முழு நிகழ்வும் சுமார் 5 மணி நேரம் 38 நிமிடங்கள் நீடிக்கும். இந்த கிரகணத்தின் உச்சநிலை இந்திய நேரப்படி காலை சுமார் 9.44 மணிக்கு ஏற்படும். நிலவின் பெரும்பகுதி பூமியின் அடர்ந்த நிழலுக்குள் செல்வதால், நிழலுக்குள் இருக்கும் பகுதி சிவப்பு அல்லது செம்பு நிறத்தில் தோன்றும் வாய்ப்பு உள்ளது. இதற்குக் காரணம் பூமியின் வளிமண்டலம். வளிமண்டலத்தின் வழியாகச் செல்லும் சூரிய ஒளி வளைந்து நிலவை அடையும்போது, நிலவின் மீது சிவப்பு நிற ஒளி படுகிறது. இதனால் முழு சந்திர கிரகணத்தின் போது காணப்படும் ‘ரத்த நிலவு’ போன்ற தோற்றம் ஏற்படலாம். ஆனால் இந்தியாவில் உள்ள வானியல் ஆர்வலர்களுக்கு ஒரு ஏமாற்றம் உள்ளது. ஆகஸ்ட் 28-ம் தேதியிலான இந்த சந்திர கிரகணம் கிழக்கு பசிபிக் பெருங்கடல் பகுதிகள், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் இருந்து காணக்கூடியதாக இருக்கும். இந்தியா இந்த கிரகணத்தை நேரடியாகக் காணக்கூடிய பகுதியில் இல்லை. அதாவது, நிலவு முழு கிரகணத்திற்கு மிகவும் நெருக்கமாகச் சென்றாலும், இந்தியாவில் இருந்து அந்தக் காட்சியை வானில் நேரடியாகப் பார்க்க முடியாது. இருப்பினும், உலகின் பல பகுதிகளில் இருந்து இந்த நிகழ்வு நேரலையாக ஒளிபரப்பப்படும் என்பதால், இந்தியாவில் இருப்பவர்களும் வீட்டில் இருந்தபடியே இணையதள நேரலைகள் மூலம் இந்த அரிய வானியல் நிகழ்வைக் காண முடியும்.

ஆகஸ்ட் 28-ம் தேதி வானில் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு நடக்கவுள்ளது. அன்றைய தினம் நிலவு பூமியின் அடர்ந்த நிழலான 'அம்ப்ரா' பகுதிக்குள் சுமார் 93 சதவீதம் வரை ஆழமாகச் செல்லவிருக்கிறது.
நிலவின் பெரும்பகுதி நிழலுக்குள் மறைந்தாலும், ஒரு சிறிய பகுதி மட்டும் வெளியே இருப்பதால் இது முழு சந்திர கிரகணமாகக் கருதப்படாது. பூமி, சூரியன் மற்றும் நிலவு ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.