PulseNews
அரசியல்

விசிகவில் ஆளூர் ஷா நவாஸுக்கு எதிராக அழுத்தம்? கோபத்தில் தவெக.. திருமாவளவன் மீது வந்த சந்தேகம்.. அடுத்தது என்ன?

தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில், விசிகவுக்குள் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் தற்போது மீண்டும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி வருகின்றன. குறிப்பாக, அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் ஆளூர் ஷா நவாஸின் செயல்பாடுகள் தொடர்பாக கட்சிக்குள் சில நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளூர் ஷா நவாஸ் தொடர்ந்து தவெக அரசை விமர்சித்து வருவதும், திமுகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருவதும் விசிகவில் சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவரை கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவனிடம் சில நிர்வாகிகள் அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக ஆட்சியில் விசிகவும் இடம்பெற்றுள்ள நிலையில், கட்சியின் நீண்ட நாள் கோரிக்கையான அதிகாரப் பங்கும் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், கட்சிக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளை திருமாவளவன் எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதற்கிடையே, ஆளூர் ஷா நவாஸ் தவெக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். தமிழகத்தில் பாஜகவின் மறைமுக ஆட்சி நடைபெறுவதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். மேலும், கலைஞர் கருணாநிதியின் நினைவு நாள் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்று பேசிய கருத்துகள் விசிகவுக்குள் விவாதத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், ஷா நவாஸின் கருத்துகள் அவரது தனிப்பட்ட நிலைப்பாடா அல்லது கட்சித் தலைமையின் மறைமுக ஆதரவுடன் வெளிப்படுத்தப்படுகிறதா? என்ற கேள்வியும் தவெக தரப்பில் எழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருகட்டத்தில் ஆளூர் ஷா நவாஸ் திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால், அதன்பிறகும் அவர் விசிகவிலேயே தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். தற்போது அவரது அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து மீண்டும் பல்வேறு யூகங்கள் எழுந்துள்ளன. இந்தச் சூழலில், வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி விசிக சார்பில் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்குப் பிறகு ஷா நவாஸ் விவகாரத்தில் கட்சித் தலைமை முக்கிய முடிவு எடுக்கலாம் என விசிக வட்டாரங்களில் பேசப்படுகிறது. அதேநேரத்தில், மாநாட்டுக்குப் பிறகு ஆளூர் ஷா நவாஸும் தனது அரசியல் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவை எடுக்கலாம் என அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பேசப்படுவதாக கூறப்படுகிறது. இதனால், அவர் விசிகவில் தொடர்ந்து நீடிப்பாரா, கட்சிப் பொறுப்பில் மாற்றம் செய்யப்படுமா அல்லது திமுகவை நோக்கி நகர்வாரா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது. தற்போது விசிகவில் உருவாகியுள்ள இந்த உள்கட்சி விவகாரத்திற்கு திருமாவளவன் எவ்வாறு முற்றுப்புள்ளி வைக்கப் போகிறார் என்பதே அடுத்தகட்ட கவனமாக மாறியுள்ளது.

Seithipunal13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
விசிகவில் ஆளூர் ஷா நவாஸுக்கு எதிராக அழுத்தம்? கோபத்தில் தவெக.. திருமாவளவன் மீது வந்த சந்தேகம்.. அடுத்தது என்ன?
PulseNews சுருக்கம்

தமிழகத்தில் தவெக ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளன. அக்கட்சியின் முதன்மைச் செயலாளரான ஆளூர் ஷா நவாஸின் செயல்பாடுகள் குறித்து கட்சி நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தவெக அரசைத் தொடர்ந்து விமர்சிப்பதும், திமுகவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை ஷா நவாஸ் வெளிப்படுத்துவதும் கட்சியின் சிலருக்கு உடன்பாடு இல்லை எனக் கூறப்படுகிறது. இந்தச் சூழல் விசிக தலைவர் திருமாவளவன் மீதான சந்தேகங்களை எழுப்பியுள்ளதுடன், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் என்ன என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மூலம்: SeithipunalSeithipunal-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics