திமுகவில் அனைத்து பொறுப்புகளுக்கும் தேர்தல்? கனிமொழி பரிந்துரைக்கு தலைமை ஒப்புதல் என தகவல்
திமுகவில் அமைப்பு ரீதியான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், கட்சியில் இனி முக்கிய நிர்வாகப் பொறுப்புகளுக்கு தேர்தல் நடத்தி நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும் என கனிமொழி பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது இந்த ஆலோசனைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. திமுகவின் செயற்குழு கூட்டம் நாளை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே கட்சியின் அமைப்பு ரீதியான மாற்றங்கள் குறித்து ஆலோசனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் மாவட்ட அளவில் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ள தலைமை திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, இளைஞரணியில் செயல்பட்டு வரும் சுமார் 15 நிர்வாகிகளுக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்புகளை வழங்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அதிக எண்ணிக்கையிலான சட்டமன்றத் தொகுதிகளை ஒரே மாவட்டச் செயலாளர் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முறையை மாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அதிகபட்சமாக ஒரு மாவட்டச் செயலாளரின் கட்டுப்பாட்டில் மூன்று சட்டமன்றத் தொகுதிகள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் மாவட்ட அமைப்பை மேலும் நுணுக்கமாக பிரித்து, நிர்வாகப் பணிகளை தீவிரப்படுத்த முடியும் என கட்சி தலைமை கருதுவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, கடந்த ஐந்து ஆண்டுகளில் மாவட்டச் செயலாளர்களின் செயல்பாடுகள் குறித்த விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எந்தெந்த மாவட்டங்களில் நிர்வாக மாற்றம் தேவை, எந்த நிர்வாகிகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை, கட்சி அமைப்பில் எங்கு மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட விவரங்கள் இந்த அறிக்கையில் இடம்பெறும் என கூறப்படுகிறது. இந்தச் சூழலில், கனிமொழி தரப்பில் முக்கியமான ஒரு பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, திமுகவில் இனி நிர்வாகப் பொறுப்புகளுக்கு நியமனம் செய்வதற்கு பதிலாக, முடிந்தவரை தேர்தல் மூலம் நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும் என அவர் ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த யோசனைக்கு திமுக தலைவர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மூத்த நிர்வாகிகள் ஒத்துழைப்பு தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், மாவட்டச் செயலாளர்களை பொறுப்பில் இருந்து மாற்றுவதற்கான காரணங்கள் மற்றும் அதற்கான ஆதாரங்களை முறையாக சமர்ப்பிக்க வேண்டும் என ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், 70 வயதை கடந்துள்ள சில மாவட்டச் செயலாளர்களை நேரடி மாவட்டப் பொறுப்பில் இருந்து மாற்றி, மண்டல அளவிலான பொறுப்புகளில் பயன்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருவதாக தெரிகிறது. இதனுடன் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்கள் எண்ணிக்கையையும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், நாளை நடைபெற உள்ள செயற்குழு கூட்டத்தில் திமுகவின் அமைப்பு ரீதியான மறுசீரமைப்பு முக்கிய விவாதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இளைஞர்களுக்கு மாவட்ட அளவில் அதிக பொறுப்புகள், நிர்வாகிகளின் செயல்பாட்டுக்கு மதிப்பீடு, வயது அடிப்படையிலான பொறுப்பு மாற்றம் மற்றும் தேர்தல் மூலம் நிர்வாகிகளை தேர்வு செய்வது என திமுகவில் ஒரே நேரத்தில் பல்வேறு மாற்றங்கள் வருவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திமுகவில் அமைப்பு ரீதியான மறுசீரமைப்புப் பணிகளை தீவிரப்படுத்தும் நோக்கில், கட்சியின் முக்கிய நிர்வாகப் பொறுப்புகளுக்கு தேர்தல் மூலம் உறுப்பினர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என கனிமொழி பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது இந்த ஆலோசனையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நாளை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், இந்த முக்கிய முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கட்சி அமைப்பில் கொண்டுவரப்படவுள்ள இந்த மாற்றங்கள் குறித்த ஆலோசனைகள் கூட்டத்திற்கு முன்பாகவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.