PulseNews
அரசியல்

ஆன்மீக காரணங்களுக்காக முடி வளர்க்கும் விசாரணை கைதிகள்; முடியை வெட்ட அவசியமில்லை: ஐகோர்ட் உத்தரவு

எழுதியவர்: வினீத் உபாத்யாயா தமிழ்நாட்டில் ஆன்மீக காரணங்களுக்காக முடி வளர்த்து வரும் விசாரணை கைதி ஒருவர், தனது முடியை வெட்டுவதற்கு கட்டாயப்படுத்தப்பட மாட்டார் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தெரிவித்தது. அதைத் தொடர்ந்து, இது தொடர்பாக மாநில சிறை விதிகளை உறுதியாகப் பின்பற்றுமாறு சிறை அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தனது மகனை முடி வெட்டுமாறு வற்புறுத்துவதாகக் கூறி அவரது தாய் நீதிமன்றத்தை அணுகியதைத் தொடர்ந்து இந்த உத்தரவு வந்தது. ஆங்கிலத்தில் படிக்க: நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா மற்றும் பி.முருகேசன் ஆகியோர் அடங்கிய அமர்வு, அந்த நபர் முடி வெட்டக் கட்டாயப்படுத்தப்பட மாட்டார் என்ற அரசின் பதிலைப் பதிவு செய்து வழக்கை முடித்து வைத்தது. இருப்பினும், அவரது முடி வளர்ச்சி மற்ற கைதிகளின் சுகாதாரத்தைப் பாதித்தால் அதற்குரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படலாம் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. "மனுதாரரின் (தாய்) மனு மீது அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததாலும், எதிர்மனுதாரர்கள் (அதிகாரிகள்) இன்னமும் அவரது மகனை முடி வெட்டுமாறு வற்புறுத்தி வருவதாலும் மனுதாரர் இந்த வழக்கை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். எதிர்மனுதாரர்கள் சார்பில் ஆஜரான தமிழ்நாடு அரசின் வழக்கறிஞரின் வாதத்தைப் பதிவு செய்து கொண்டு, தமிழ்நாடு சிறை விதிகள் 2024-ன் விதி 213(3)-ஐ உறுதியாகப் பின்பற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இந்த மனு முடித்து வைக்கப்படுகிறது. செலவுத் தொகை எதுவும் இல்லை" என்று ஆகஸ்ட் 24-ல் நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியது. பாளையங்கோட்டை மத்திய சிறை கண்காணிப்பாளர் தனது மகனின் சமய நம்பிக்கை மற்றும் சிறை விதிகளைக் கருத்தில் கொண்டு, அவரது மீசையை சவரம் செய்யவோ அல்லது தலையை மொட்டை அடிக்கவோ வற்புறுத்தக்கூடாது என்றும் அந்த தாய் தனது மனுவில் கோரியிருந்தார். தாய் நீதிமன்றத்தை நாடிய பின்னணி விசாரணை கைதியான அவரது மகன் ஆன்மீக நோக்கங்களுக்காக முடி வளர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. சிறை அதிகாரிகள் அவரை முடி வெட்டுமாறு வற்புறுத்துவதே தாயின் முக்கியக் குறையாக இருந்தது. இவ்வாறு வற்புறுத்துவதைத் தவிர்க்குமாறு அதிகாரிகளிடம் ஆகஸ்ட் 13-ம் தேதி அவர் மனு அளித்தார். அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், சிறை அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்கக் கோரி அவர் உயர்நீதிமன்றத்தை அணுகினார். மாநில சிறை விதிகளின் 213(3) விதியை மிகக் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு அதிகாரிகளுக்கு நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா மற்றும் பி.முருகேசன் உத்தரவிட்டனர். மதுரை மண்டல சிறைத்துறை (சீர்திருத்தப் பணிகள்) தலைமை இயக்குநர் மற்றும் திருநெல்வேலி பாளையங்கோட்டை மத்திய சிறைக் கண்காணிப்பாளர் ஆகியோர் இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்டிருந்தனர். "மனுதாரரின் மகன் ஒரு விசாரணை கைதி என்றும், அவர் ஆன்மீக காரணங்களுக்காக முடி வளர்த்து வருகிறார் என்பதும் மனுதாரரின் வழக்காகும்," என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 14 (சமத்துவம்) மற்றும் கைதியின் கண்ணியமான வாழ்க்கை மற்றும் ஆன்மீக நம்பிக்கைக்கான உரிமையை இந்த மனு சுட்டிக்காட்டியது. மேலும், அவரை முடி வெட்ட வற்புறுத்துவது தமிழ்நாடு சிறை விதிகளுக்கு முரணானது என்றும் குற்றம் சாட்டப்பட்டது. சிறை விதிகள் கூறுவது என்ன? விசாரணையின் போது, குற்றவியல் பிரிவில் ஆஜரான தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் டி.வெங்கடேஷ், தமிழ்நாடு சிறை விதிகளின் பிரிவு 213 கைதிகளின் முடி வெட்டுவதைக் கட்டுப்படுத்துகிறது என்று வாதிட்டார். சுகாதாரத்தைப் பராமரிக்க வேண்டிய அவசியத்தின் அடிப்படையில், மருத்துவக் காரணங்களுக்காக முடி அல்லது நகங்களை வெட்டுமாறு அதிகாரிகள் வலியுறுத்தலாம் என்று அவர் கூறினார். அனைத்துக் கைதிகளும் தங்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறும் விதி 306-ஐயும் அவர் சுட்டிக்காட்டினார். ஒரு கைதி இத்தகைய விதிகளுக்குக் கீழ்ப்படிய மறுத்தால், அது சிறைச்சாலைகள் சட்டத்தின் பிரிவு 45-ன் கீழ் குற்றமாக மாறக்கூடும் என்றும் அரசு தரப்பில் சேர்க்கப்பட்டது. இருப்பினும், தற்போதைய வழக்கில், அந்த கைதியை முடி வெட்டுமாறு அதிகாரிகள் வற்புறுத்தவில்லை என்றும், ஆனால் அவரது முடி வளர்ச்சி மற்ற கைதிகளின் சுகாதாரத்தைப் பாதிக்கும் பட்சத்தில் விதி 213(3)-ன் கீழ் தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்கலாம் என்றும் அரசு தெரிவித்தது. இதையேற்றுக்கொண்ட நீதிபதிகள் அமர்வு, அந்த விதியை உறுதியாகப் பின்பற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தது.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ஆன்மீக காரணங்களுக்காக முடி வளர்க்கும் விசாரணை கைதிகள்; முடியை வெட்ட அவசியமில்லை: ஐகோர்ட் உத்தரவு
PulseNews சுருக்கம்

ஆன்மீக காரணங்களுக்காக முடி வளர்க்கும் விசாரணை கைதிகளை முடி வெட்டிக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. சிறை விதிகளின்படி கைதிகளின் மத நம்பிக்கைகளுக்கு மதிப்பளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து பேசிய நீதிமன்றம், சிறை விதிகளையும் நடைமுறைகளையும் அதிகாரிகள் முறையாகவும் உறுதியாகவும் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டது. தனது மகனை முடி வெட்ட வற்புறுத்துவதாகக் கூறி அவரது தாய் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics