PulseNews
லைஃப் ஸ்டைல்

மல்லிகைப்பூ சூடினால் மனநிலை மாறுமா? அட... இதுக்குப் பின்னாடி இப்படி ஒரு விஷயமா!

மல்லிகைப்பூ என்றாலே அதன் அழகும், மனதை மயக்கும் நறுமணமும் நினைவுக்கு வரும். வீட்டு விசேஷங்கள், பண்டிகைகள், திருமணங்கள், பூஜைகள் என மங்களகரமான நிகழ்வுகளில் மல்லிகைப்பூவுக்கு தனி இடம் உண்டு. குறிப்பாக பெண்கள் தங்கள் கூந்தலில் மல்லிகைப்பூவைச் சூடிக்கொள்வது நம் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகவே இருந்து வருகிறது. மல்லிகையின் வாசனை சுற்றுப்புறத்தையே இனிமையாக மாற்றுவதோடு, மனதுக்கும் ஒரு விதமான புத்துணர்ச்சியைத் தருவதாக பலரும் உணர்கின்றனர். ஆனால், மல்லிகைப்பூவின் நறுமணம் உண்மையிலேயே மனநிலையை மேம்படுத்த உதவுமா? இதுகுறித்து மனநல மருத்துவர் டாக்டர் ஷாரடி பல்வேறு விளக்கங்களை அளித்துள்ளார். வாசனைக்கும் மூளைக்கும் என்ன தொடர்பு? நாம் ஒரு நறுமணத்தை சுவாசிக்கும்போது, அந்த வாசனையை உணரும் மூக்கின் உணர்வு அமைப்பு மூளையின் குறிப்பிட்ட பகுதிகளுடன் தொடர்பு கொள்கிறது. குறிப்பாக வாசனை உணர்வு, உணர்ச்சிகள் மற்றும் நினைவுகளுடன் தொடர்புடைய மூளையின் பகுதிகளுடன் நெருக்கமாக இணைந்துள்ளது. இதன் காரணமாகத்தான் ஒரு குறிப்பிட்ட வாசனையை நுகரும்போது, பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்கள் கூட திடீரென நம் நினைவுக்கு வரக்கூடும். அதேபோல், சில வாசனைகள் நமக்கு அமைதி, மகிழ்ச்சி அல்லது புத்துணர்ச்சி போன்ற உணர்வுகளையும் ஏற்படுத்தலாம். மல்லிகை வாசனை ஏன் மனதுக்கு இனிமையாக இருக்கிறது? மல்லிகைப்பூவின் இயற்கையான நறுமணம் பலருக்கும் இனிமையான அனுபவத்தைத் தரக்கூடியது. ஒருவர் மல்லிகையின் வாசனையை ரசிப்பவராக இருந்தால், அந்த வாசனை அவருக்கு ஒரு நேர்மறையான உணர்வை ஏற்படுத்தலாம். குறிப்பாக மல்லிகை வாசனை என்பது அவருடைய குழந்தைப் பருவம், பாட்டி அல்லது அம்மா சூடிய பூ, கோயில் திருவிழா, திருமணம், பண்டிகை அல்லது குடும்பத்தினருடன் செலவிட்ட மகிழ்ச்சியான தருணங்கள் போன்ற நினைவுகளுடன் தொடர்புடையதாக இருந்தால், அந்த நறுமணம் மனதில் மகிழ்ச்சியான உணர்வை மீண்டும் உருவாக்கக்கூடும். மன அழுத்தத்தை குறைக்க உதவுமா? இனிமையான நறுமணத்தை ரசிப்பது சிலருக்கு தற்காலிகமாக மன அழுத்தத்திலிருந்து கவனத்தைத் திருப்பி, மனதை சற்று அமைதிப்படுத்த உதவலாம். ஒரு பரபரப்பான நாளில் மல்லிகைப்பூவின் வாசனையை ரசிப்பது, இயற்கையான ஒரு சிறிய ஓய்வு தருணமாக இருக்கலாம். கூந்தலில் மல்லிகைப்பூ சூடிக்கொள்வது, வீட்டில் இயற்கையான பூக்களை வைத்திருப்பது அல்லது அதன் நறுமணத்தை சில நிமிடங்கள் ரசிப்பது போன்றவை மனதுக்கு மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கலாம். தூக்கத்துக்கும் மல்லிகை வாசனைக்கும் தொடர்பு உள்ளதா? நறுமணத்துக்கும் தூக்கத்துக்கும் இடையிலான தொடர்பு குறித்தும் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சில நறுமணங்கள் ஓய்வான மனநிலையை உருவாக்குவதற்கு உதவக்கூடும் என்ற கருத்துகள் உள்ளன. இருப்பினும், மல்லிகைப்பூவின் வாசனையைப் பயன்படுத்தினால் தூக்கமின்மை நிச்சயமாக சரியாகிவிடும் என்று கூறுவதற்கு போதுமான மருத்துவ ஆதாரங்கள் இல்லை. தூக்கப் பிரச்சனை தொடர்ந்து இருந்தால், அதற்கான காரணத்தை கண்டறிந்து மருத்துவ ஆலோசனை பெறுவது முக்கியம். நறுமணம் ஒவ்வொருவரையும் ஒரே மாதிரி பாதிக்குமா? அவ்வாறு கூற முடியாது. ஒரு நறுமணம் ஒருவருக்கு மகிழ்ச்சியைத் தரலாம்; அதே வாசனை மற்றொருவருக்கு எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் இருக்கலாம். சிலருக்கு குறிப்பிட்ட வாசனைகள் தலைவலி, அசௌகரியம் அல்லது ஒவ்வாமை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். மேலும், ஒரு வாசனையுடன் ஒருவருக்கு இருக்கும் தனிப்பட்ட நினைவுகள் மற்றும் அனுபவங்களும் அவருடைய மனநிலையை தீர்மானிக்கலாம். எனவே, மல்லிகையின் நறுமணம் அனைவருக்கும் ஒரே விதமான மனநலப் பலனை வழங்கும் என்று பொதுவாகக் கூற முடியாது. மல்லிகை மனநோய்க்கு மருந்தா? நிச்சயமாக இல்லை. மல்லிகைப்பூவின் வாசனையை ரசிப்பது ஒரு சிறிய நேர்மறையான பழக்கமாக இருக்கலாம். ஆனால், அதை மனச்சோர்வு, பதட்டம், பீதி தாக்குதல் அல்லது பிற மனநலப் பிரச்சனைகளுக்கான சிகிச்சையாகக் கருதக்கூடாது. ஒருவரின் மன ஆரோக்கியம் என்பது ஒரு நறுமணத்தால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. மரபியல் காரணிகள், ஹார்மோன் மாற்றங்கள், தூக்கத்தின் தரம், உணவுமுறை, உடல் ஆரோக்கியம், குடும்ப மற்றும் சமூக உறவுகள், வேலை சார்ந்த அழுத்தம், வாழ்க்கைச் சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் மனநலத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மன ஆரோக்கியத்தைப் பாதுகாக்க என்ன செய்யலாம்? தினசரி வாழ்க்கையில் சில எளிய பழக்கங்களைப் பின்பற்றுவது மன ஆரோக்கியத்தைப் பேண உதவும். தினமும் உடற்பயிற்சிக்கு சிறிது நேரம் ஒதுக்குவது, போதுமான மற்றும் தரமான தூக்கத்தைப் பெறுவது, ஊட்டச்சத்து நிறைந்த சமச்சீரான உணவை எடுத்துக்கொள்வது, இயற்கையுடன் நேரம் செலவிடுவது போன்றவை பயனுள்ளதாக இருக்கலாம். அதேபோல், தியானம், மூச்சுப் பயிற்சி போன்ற தளர்வு முறைகளையும் ஒருவர் தங்களுக்குப் பொருத்தமான வகையில் முயற்சி செய்யலாம். நெருக்கமான குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் மனதில் இருப்பதைப் பகிர்ந்து கொள்வதும் மன அழுத்தத்தைக் கையாள உதவக்கூடும். எப்போது நிபுணரை அணுக வேண்டும்? சில நேரங்களில் மன அழுத்தம் அல்லது சோர்வு என்பது இயல்பானதாக இருக்கலாம். ஆனால், நீண்ட காலமாக மன உளைச்சல், அதிகப்படியான பதட்டம், காரணமில்லாத பயம், தொடர்ச்சியான சோகம், தூக்கத்தில் மாற்றம், எதிலும் ஆர்வம் இல்லாமை அல்லது அன்றாட வேலைகளைச் செய்வதில் சிரமம் போன்ற அறிகுறிகள் இருந்தால் அவற்றை அலட்சியப்படுத்தக் கூடாது. இத்தகைய சூழ்நிலையில் மல்லிகைப்பூ அல்லது வேறு எந்த நறுமணத்தையும் மட்டும் நம்பியிருக்காமல், மருத்துவர் அல்லது தகுதியான மனநல நிபுணரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம். இனிமையான ஒரு சுய பராமரிப்பு பழக்கமாக இருக்கலாம்! மொத்தத்தில், மல்லிகைப்பூவின் நறுமணம் மனநிலையை மேம்படுத்தும் என்பது சிலருக்கு தனிப்பட்ட அனுபவமாக இருக்கலாம். குறிப்பாக அந்த வாசனையுடன் மகிழ்ச்சியான நினைவுகள் இணைந்திருந்தால், அது மனதில் நேர்மறையான உணர்வுகளைத் தூண்டக்கூடும். எனவே, மல்லிகைப்பூவைச் சூடுவது அல்லது அதன் இயற்கையான நறுமணத்தை ரசிப்பது அன்றாட வாழ்க்கையில் ஒரு சிறிய, இனிமையான சுய பராமரிப்பு பழக்கமாக இருக்கலாம். ஆனால், கடுமையான அல்லது நீடித்த மனநலப் பிரச்சனைகளுக்கு இது மாற்று சிகிச்சை அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
மல்லிகைப்பூ சூடினால் மனநிலை மாறுமா? அட... இதுக்குப் பின்னாடி இப்படி ஒரு விஷயமா!
PulseNews சுருக்கம்

மல்லிகைப்பூ என்றாலே அதன் அழகும், மயக்கும் நறுமணமும் நம் நினைவுக்கு வரும். விழாக்கள், பூஜைகள் மற்றும் விசேஷ காலங்களில் மல்லிகைப்பூவைச் சூடிக்கொள்வது நமது நீண்டகால பாரம்பரியத்தின் ஒரு அங்கமாகத் திகழ்கிறது.

மல்லிகையின் வாசனை சுற்றியுள்ள சூழலை இனிமையாக்குவதோடு, மனதிற்குப் புத்துணர்ச்சி அளிப்பதாகப் பலரும் கருதுகின்றனர். இருப்பினும், இந்த நறுமணம் உண்மையில் மனநிலையை மேம்படுத்துவதில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்த தகவல்கள் பலருக்கும் ஆச்சரியத்தை அளிக்கிறது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle