உளுந்தூர்பேட்டை வி.சி.க. மாநாட்டில் கட்டுக்கடங்காத கூட்டம்..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வி.சி.க. சார்பில் நடத்தப்பட்ட மாநாட்டில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்த நிலையில், மேடையிலும் ஏராளமானோர் ஏறியதால் திருமாவளவன் மாநாட்டை முன்கூட்டியே முடித்துக்கொண்டார். தமிழ் தேசிய எழுச்சி மாநாடு என்ற பெயரில் நடத்தப்பட்ட அம்மாநாட்டிற்கு பெரும் திரளான தொண்டர்கள் சூழ திருமாவளவன் வருகை தந்தார். பின்னர் தனது வாகனத்தில் இருந்து இறங்கி போராடி மாநாட்டு மேடைக்கு சென்றார். ஏற்கனவே மாநாட்டு மேடையில் பலர் கூடியிருந்த நிலையில், திருமாவளவன் வந்ததும் மேலும் பலர் சாரைசாரையாக ஏறி மேடையை ஆக்கிரமித்தனர். இதனையடுத்து மேடைக்கு முன் அமைக்கப்பட்டிருந்த ரேம்ப் வாக்கில் கையில் சுடர் ஏந்தி திருமா நடந்து சென்றபோதும் பாதுகாவலர்களை மீறி பலர் அதில் ஏறினர். இதையடுத்து மேடைக்கு மீண்டும் வந்த திருமா, அதன் மீது ஏறியவர்களை கீழே இறங்குமாறு அதட்டி அப்புறப்படுத்த முயன்றார். நேரம் செல்ல செல்ல மேடையில் பெரும் திரளானோர் கூடியதை அடுத்து தொண்டர்களுக்கு நடுவே திருமாவளவன் சிக்கிக்கொண்டார். பெரும் கூட்டத்திற்கு நடுவே சிக்கிக்கொண்டு திணறியபடி பேசிய திருமாவளவன், விசிக தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தி என்றும், அக்கட்சி தமிழகத்தின் ஆளுங்கட்சியாக வளர வேண்டும் என்றும் கூறினார். மேலும், தமிழக அரசியல் களத்தில் வி.சி.க.வும், த.வெ.க.வும் இணைந்தே பயணிக்கும் என்றார். கூட்டம் அதிகமாக திரண்டதால் முன்கூட்டியே உரையை முடித்த திருமாவளவன், தொண்டர்கள் அனைவரும் கலைந்து செல்ல அறிவுறுத்தினார். இதனிடையே, கூட்டத்தில் சிக்கி மயக்கமடைந்த சிலர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வி.சி.க. சார்பில் நடைபெற்ற 'தமிழ் தேசிய எழுச்சி மாநாடு' பெரும் வரவேற்புடன் தொடங்கியது. திரளான தொண்டர்கள் சூழ வருகை தந்த திருமாவளவன், மிகுந்த சிரமத்திற்கு இடையே போராடி மாநாட்டு மேடையை அடைந்தார்.
ஏற்கனவே மேடை நிரம்பி வழிந்த நிலையில், மேலும் பலர் ஏறியதால் கட்டுக்கடங்காத கூட்டம் ஏற்பட்டது. இந்த அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, திருமாவளவன் தனது உரையை முடித்துக்கொண்டு மாநாட்டை முன்கூட்டியே நிறைவு செய்தார்.