வாரச் சந்தையில் காய்கறி விற்ற நடிகர் விமல்: குவிந்த பொதுமக்கள்; இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ
தமிழ் திரைப்பட நடிகர் விமல், திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள தனது சொந்த ஊரான பண்ணங்கொம்பில் புதிதாகத் தொடங்கப்பட்ட வாரச் சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அப்பகுதியில் நடந்த திரைப்படப் படப்பிடிப்பிற்காக வந்திருந்த விமல், திடீரென வார சந்தைக்கு சென்று அங்கிருந்த உள்ளூர் வியாபாரிகளுடன் இணைந்தார். வியாபாரிகளுடன் தரையில் அமர்ந்து காய்கறிகளை எடுத்துப் போட்டு, விலையைக் கூவிக்கூவி விற்று வாடிக்கையாளர்களிடம் கலகலப்பாகப் பேசினார். விமல் காய்கறி விற்கும் செய்தி பரவியதும் அங்கு பொதுமக்கள் கூட்டம் கூடியது. எனினும், எந்தப் பதற்றமும் இன்றி மக்களுடன் இயல்பாக நேரத்தைச் செலவிட்ட அவர், அங்கிருந்து புறப்படும் முன் அருகிலிருந்த சில வியாபாரிகளுக்குத் தலா 500 ரூபாயை வழங்கிச் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விமலின் இந்த சந்தை பயணம் ரூ.4.5 கோடி மதிப்பிலான காசோலை மோசடி (Cheque Bounce) வழக்கில் சென்னை சிறு வழக்குகளுக்கான நீதிமன்றம் அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்த ஒரு மாதத்திற்குள் நிகழ்ந்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு வெளியான 'மன்னர் வகையறா' படத் தயாரிப்பிற்காக ஃபைனான்சியர் கோபியிடம் விமல் கடன் வாங்கியிருந்தார். படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால், கடனைத் திருப்பிச் செலுத்த விமல் அளித்த காசோலை வங்கிக் கணக்கில் போதிய பணமில்லாமல் திரும்பியது. இந்த வழக்கில் விமல் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், முழுத் தொகையையும் திருப்பிச் செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்காக தண்டனைக்கு ஒரு மாத காலம் இடைக்காலத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 25, 1979-ல் ரமேஷ் விமல் ராமசாமியாகப் பிறந்த இவர், சந்தை விசிட் நடந்த அதே பண்ணங்கொம்பு கிராமத்தில்தான் வளர்ந்தார். 2000-களின் மத்தியில் திரையுலகில் நுழைந்த அவர், பிரியதர்ஷனின் 'காஞ்சிவரம்' படத்தில் துணை வேடத்திலும், பாண்டிராஜின் 'பசங்க' படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தார். இயக்குநர் ஏ. சற்குணம் இயக்கத்தில் வெளியான 'களவாணி' திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. ரூ.5 கோடிக்கு மேல் வசூலித்த அப்படம், விமலை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்த்தியது. தொடர்ந்து 'வாகை சூட வா', 'தூங்கா நகரம்', 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' போன்ற வெற்றிப் படங்கள் மூலம் கிராமத்துப் பின்னணி மற்றும் நகைச்சுவைத் திரைப்படங்களில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். எனினும், 2019-ல் வெளியான 'களவாணி 2' முதல் பாகத்தின் வெற்றியைப் பெறவில்லை. அண்மைக்காலமாக அவரது படங்கள் வசூல் ரீதியாகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. டி. இமான் இசையமைப்பில் வெளியான 'வாடம்' மற்றும் 'சண்டக்காரி' ஆகிய திரைப்படங்களும் போதிய வரவேற்பைப் பெறவில்லை. விமல் – அக்ஷயா தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். தற்போது விமல் பல புதிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பண்ணங்கொம்பில் புதிதாகத் தொடங்கப்பட்ட வாரச் சந்தையில், நடிகர் விமல் காய்கறி வியாபாரம் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். அப்பகுதியில் நடைபெற்ற திரைப்படப் படப்பிடிப்பிற்காக வந்திருந்த அவர், திடீரென சந்தைக்குச் சென்று உள்ளூர் வியாபாரிகளுடன் இணைந்து உற்சாகமாக விற்பனையில் ஈடுபட்டார்.
தரையில் அமர்ந்து காய்கறிகளை விற்க உதவிய விமல், விலையைக் கூவிக்கூவி வாடிக்கையாளர்களிடம் கலகலப்பாகப் பேசினார். நடிகர் ஒருவர் காய்கறி விற்கும் இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.