PulseNews
வணிகம்

பயணிகளுக்கு குட்நியூஸ்: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது திறப்பு? வெளியான முக்கிய தகவல்

சென்னையில் அதிகரித்து வரும் ரயில் பயணிகள் எண்ணிக்கையை சமாளிக்கும் வகையில், ரூ.2,100 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான 4 முக்கிய ரயில் விரிவாக்கத் திட்டங்கள் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளன. இந்தத் திட்டங்கள் நிறைவேறினால் புறநகர் ரயில் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், ரயில் பாதைகளில் ஏற்படும் நெரிசலை குறைக்கவும் முடியும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிளாம்பாக்கம் ரயில் நிலையம்: அக்டோபரில் பயன்பாட்டுக்கு வரும்? கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துடன் ரயில் இணைப்பை ஏற்படுத்தும் புதிய ரயில் நிறுத்த நிலையத்தின் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையம் அக்டோபர் மாதத்திற்குள் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிளாம்பாக்கம் ரயில் நிலையத்துக்காக தமிழ்நாடு அரசு, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மூலம் ரூ.20.82 கோடியை வழங்கியுள்ளது. முதலாவது நடைமேடை கட்டி முடிக்கப்பட்டு, அங்கு தற்காலிக பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகமும் கழிப்பறை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 2 மற்றும் 3-வது நடைமேடைகளின் பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. எனினும், ரயில் நிலையத்தையும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தையும் இணைக்கும் ஆகாய நடைபாதை அமைக்கும் பணி முடிவடைய வேண்டும். இந்த நடைபாதை பணியை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மேற்கொண்டு வருகிறது. ஆகாய நடைபாதைக்கான பெரிய உத்திரங்களை பொருத்துவது உள்ளிட்ட பணிகள் மற்றும் பயணிகளுக்கான கூடுதல் வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு அதிகாரிகளுடன் ரயில்வே நிர்வாகம் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. இதனால், கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பயன்பாட்டுக்கு வந்தால் பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்தை இணைக்கும் முக்கிய மையமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆதம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பதில் சிக்கல் இதற்கிடையில், ஆதம்பாக்கம் புறநகர் மின்சார ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்லும் சேவை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வேளச்சேரி முதல் பரங்கிமலை வரை ஆதம்பாக்கம், புழுதிவாக்கம் வழியாக செல்லும் 4.5 கி.மீ. நீளமான இரண்டாம் கட்ட பறக்கும் ரயில் திட்டம் இந்த ஆண்டு மார்ச் மாதம் திறக்கப்பட்டது. ஆனால் ஆதம்பாக்கம் நிலையத்தில் இதுவரை ரயில்கள் நிறுத்தப்படவில்லை. இதற்கு நிலையத்தில் உள்ள வளைவு காரணமாக, நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே அதிக இடைவெளி இருப்பதே முக்கிய காரணம் என சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் ஷைலேந்திர சிங் தி டைம்ஸ் ஆஃப் இண்டியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். இந்த இடைவெளியை பாதுகாப்பாக குறைப்பதற்கான வடிவமைப்பு இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அதன்பிறகே ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் அனுமதியை பெற முடியும் என அவர் கூறினார். 12 புதிய நடைமேம்பாலங்கள், 26 மின்தூக்கிகள் சென்னை ரயில்வே மண்டலத்தில் பயணிகளின் வசதிக்காக 12 நடைமேம்பாலங்கள், 26 மின்தூக்கிகள் மற்றும் 7 நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தில் புதிய நடைமேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அங்கு நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் நடப்பு நிதியாண்டுக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.2,100 கோடிக்கும் அதிகமான 4 ரயில் திட்டங்கள் சென்னை புறநகர் ரயில் போக்குவரத்து திறனை அதிகரிக்கவும் நெரிசலை குறைக்கவும் 4 முக்கிய திட்டங்களுக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் மிகப்பெரிய திட்டமாக 67.79 கி.மீ. நீளமுள்ள அரக்கோணம்–செங்கல்பட்டு இரட்டை ரயில் பாதை திட்டம் உள்ளது. இதற்கான மதிப்பீடு ரூ.926.52 கோடி. தற்போது இந்தப் பாதையில் 13 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இரண்டாவது பாதை பயன்பாட்டுக்கு வந்த பிறகு, ரயில்களின் எண்ணிக்கையை சுமார் 80 வரை அதிகரிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் திட்டம் ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், மகிந்திரா வேர்ல்டு சிட்டி போன்ற தொழில் பகுதிகளுக்கான ரயில் இணைப்பையும் மேம்படுத்தும். அடுத்ததாக, தாம்பரம்–செங்கல்பட்டு நான்காவது ரயில் பாதை திட்டம் சுமார் ரூ.713.5 கோடி செலவில் மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பணி 2030-க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தெற்கு வழித்தடத்தில் தினமும் சுமார் 500 புறநகர் மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுவதால், இந்தப் புதிய பாதை நெரிசலை குறைக்க உதவும். மேலும், ரூ.365.42 கோடி மதிப்பிலான அத்திப்பட்டு–கும்மிடிப்பூண்டி மூன்றாவது மற்றும் நான்காவது ரயில் பாதை திட்டத்திற்கும் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. அதேபோல், சுமார் ரூ.177 கோடி மதிப்பிலான பெரம்பூர்–அம்பத்தூர் ஐந்தாவது மற்றும் ஆறாவது ரயில் பாதை திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. இது 9 கி.மீ. நீளமுடையதாகும். ஒரே ஆண்டில் 47 கோடிக்கும் அதிகமான பயணிகள் 2025-26 நிதியாண்டில் தெற்கு ரயில்வேயில் 47.298 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர். முந்தைய நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 42.5 கோடியாக இருந்தது. பயணிகள் எண்ணிக்கை அதிகரித்ததால், கூடுதல் தேவையை சமாளிக்க 3,559 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. வழக்கமான ரயில்களில் 1,557 கூடுதல் பெட்டிகளும் இணைக்கப்பட்டன. பயணிகள் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் 12 மனிதர்கள் கண்காணிக்கும் ரயில்வே கடவுப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. ரயில் பாதைகளின் இருபுறமும் 300 கி.மீ. நீளத்திற்கு பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 7 மின்னணு ரயில் பாதை இணைப்பு அமைப்புகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. 18 உயர்த்தக்கூடிய தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. 186 கி.மீ. நீளமான ரயில் பாதைகளும் புதுப்பிக்கப்பட்டுள்ளன

The Indian Express16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
பயணிகளுக்கு குட்நியூஸ்: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது திறப்பு? வெளியான முக்கிய தகவல்
PulseNews சுருக்கம்

சென்னையில் அதிகரித்து வரும் ரயில் பயணிகள் நெரிசலைக் கட்டுப்படுத்த, ரூ.2,100 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் நான்கு முக்கிய ரயில் விரிவாக்கத் திட்டங்கள் அடுத்தகட்ட வளர்ச்சியை எட்டியுள்ளன. இந்தத் திட்டங்கள் முழுமையடையும் போது, புறநகர் ரயில் சேவைகளின் எண்ணிக்கை உயர்வோடு, தண்டவாளங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலும் குறையும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துடன் இணைக்கும் வகையில் அமைக்கப்படும் புதிய ரயில் நிலையம், வரும் அக்டோபர் மாதம் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#business