ரூ.75,000 வரை பயிர்க் கடன் வாங்கி இருந்தால் 100% தள்ளுபடி: விஜய் அறிவிப்பு
விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, கூட்டுறவு வங்கிகள் மூலம் பெறப்பட்ட பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்வதாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். ஆரம்பத்தில் 25.05.2026 அன்று ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்யக் கோரி கோரிக்கைகள் வந்தன. இக்கோரிக்கைகளைக் கனிவுடன் பரிசீலித்த முதலமைச்சரின் உத்தரவின்படி, கடந்த ஜூன் 15-ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் உயர்மட்ட மறுஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, நிதித்துறை மற்றும் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டு ஆலோசித்தனர். இந்த மறுஆய்வுக் கூட்டத்தின் முடிவில், கூட்டுறவு வங்கிகளில் ரூ.75,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகள் அனைவருக்கும் 100 சதவீதம் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் கடந்த நிதியாண்டில் கடன் பெற்ற விவசாயிகளுக்குக் குறைந்தபட்சம் ரூ.35,000 முதல் அதிகபட்சமாக ரூ.75,000 வரை நிதிப் பலன் கிடைக்கப்பெறும். இந்திய ரிசர்வ் வங்கி 28.11.2025 அன்று வெளியிட்ட வழிகாட்டுதல்களின்படி, கடன் தள்ளுபடிக்கான முழுத் தொகையையும் அரசு 45 முதல் 60 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். தமிழ்நாடு அரசின் தற்போதைய நிதிநிலைமை மற்றும் நிதி ஆதாரங்களைக் கருத்தில் கொண்டு, கடுமையான நிதி நெருக்கடிக்கு இடையிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 01.05.2025 முதல் 28.02.2026 வரையிலான காலத்தில் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற சுமார் 14.43 லட்சம் (14,43,504) விவசாயிகள் இதன் மூலம் நேரடியாகப் பயனடைவார்கள். இதற்காக அரசாங்கத்திற்கு சுமார் ரூ.5,932.23 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். பயனாளிகளின் விவரங்களைப் பிரித்துப் பார்க்கும்போது, 8,33,773 குறு விவசாயிகளுக்கு ரூ.3,599.67 கோடியும், 5,16,183 சிறு விவசாயிகளுக்கு ரூ.1,995.42 கோடியும், 93,548 இதர பெரு விவசாயிகளுக்கு ரூ.337.15 கோடியும் தள்ளுபடி செய்யப்படுகிறது. ஆக மொத்தம் 14,43,504 விவசாயிகளுக்கு ரூ. 5,932.23 கோடி தள்ளுபடித் தொகையாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கடன் தள்ளுபடி நடவடிக்கை, எதிர்வரும் சாகுபடி பருவத்தில் விவசாயிகள் மீண்டும் புதிய கடன்களைப் பெற்று சுலபமாக விவசாயப் பணிகளைத் தொடரப் பெருமளவில் துணையாக இருக்கும். பயிர்க்கடன் இன்றைய முதலமைச்சர் அறிவிப்பு - என்ன வித்தியாசம்? முன்பு: ரூ. 75 ஆயிரம் வரையிலான பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி ரூ. 75 ஆயிரத்துக்கு மேலான பயிர்க்கடன்களுக்கு ரூ.35 ஆயிரம் தள்ளுபடி இன்றைய அறிவிப்பு: ரூ. 75 ஆயிரம் வரையிலான பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி ரூ. 75 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரையிலான பயிர்க்கடன்களுக்கு ரூ.75 ஆயிரம் தள்ளுபடி ரூ. 1 லட்சத்துக்கு மேலான பயிர்க்கடன்களுக்கு ரூ.35 ஆயிரம் தள்ளுபடி வித்தியாசம்: ரூ.75 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை கடன் பெற்றவர்கள் ஏற்கெனவே ரூ. 35 ஆயிரம் தள்ளுபடி பெற்றிருப்பார்கள். அவர்கள் தற்போது கூடுதலாக ரூ.40 ஆயிரம் சேர்த்து ரூ. 75 ஆயிரம் தள்ளுபடி பெறுவார்கள்.

விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, கூட்டுறவு வங்கிகள் மூலம் பெறப்பட்ட ரூ. 75,000 வரையிலான பயிர்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்வதாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். முன்னதாக, 2026-ஆம் ஆண்டு மே 25-ஆம் தேதி வரை ரூ. 50,000 வரை கடன் பெற்ற குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு மட்டுமே தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், இந்தத் திட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் வந்தன. இந்தக் கோரிக்கைகளை ஏற்று, கடன் தள்ளுபடி வரம்பை உயர்த்தி முதலமைச்சர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.