மாறுகிறதா பரந்தூர் விமான நிலையம்? காஞ்சிபுரம், செங்கல்பட்டில் புதிய இடம் தேடும் தமிழக அரசு!
<p style="text-align: justify;">சென்னையின் இரண்டாவது விமான நிலைய திட்டத்திற்கு, புதிய இடம் தேர்வு செய்வது குறித்து, தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதேநேரம், காஞ்சிபுரம் பரந்தூர் விமான நிலைய திட்டம் இதுவரை கைவிடப்படவில்லை. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில், பயணிகள் மற்றும் சரக்கு கையாளுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருப்பினும், ஓடு பாதை விரிவாக்கத்தில் சிக்கல், வளர்ச்சித் திட்டங்கள் இழுத்தடிப்பு மற்றும் எதிர்கால தேவைகளைக் கருத்தில் கொண்டு, சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அமைப்பது அவசியமாகியுள்ளது. இதற்காக, நான்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில், விமான நிலையம் அமைக்க கடந்த ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது.</p> <h3 style="text-align: justify;">நிலம் கையகப்படுத்தும் பணி மற்றும் அனுமதிகள்</h3> <p style="text-align: justify;">இத்திட்டத்தை செயல்படுத்தும் முகமையாக, 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி முகமை மேற்கொள்கிறது. பரந்தூர் விமான நிலையத்திற்கு, பரந்தூர் மற்றும் அதை சுற்றிய கிராமங்களில், 5,320 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. அதில் தனியார் வசம் 3,750 ஏக்கர் உள்ளது. இந்த நிலத்தை கையகப்படுத்தும் பணியில் வருவாய்த் துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். பரந்தூர் விமான நிலையத்திற்கு இட அனுமதி, கொள்கை அளவிலான ஒப்புதல் ஆகியவற்றை மத்திய அரசு ஏற்கனவே வழங்கிவிட்டது. இனி, கட்டுமான பணியை முடித்து, இயக்குவதற்கான அனுமதியை மட்டுமே பெற வேண்டும். எனவே, இந்த ஆண்டில் கட்டுமான பணிக்கு கூட்டு நிறுவனத்தை தேர்வு செய்து, முதற்கட்ட பணிகளை தொடங்கி, ஈராண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டது.</p> <h3 style="text-align: justify;">பரந்தூர் திட்டத்தில் எழுந்த சந்தேகங்கள்</h3> <p style="text-align: justify;">கடந்த தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ளார். இவர், பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு நிலம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்களை நேரில் சென்று ஆதரவு தெரிவித்திருந்தார். இதனால், பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. த.வெ.க. அரசில் இடம்பெற்றுள்ள நிர்மல்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள், 'பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படாது' என்று கூறி வருகின்றனர். இருப்பினும், அரசு தரப்பில் இருந்து, அத்திட்டத்தின் நிலை குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையே, 'பரந்தூர் விமான நிலைய திட்டத்தை திரும்ப பெறுவது, திட்டத்தை மாற்றியமைப்பது அல்லது கைவிடுவது தொடர்பாக, தமிழக அரசிடம் இருந்து தங்களுக்கு எந்தவித கோரிக்கையோ, கடிதமோ வரவில்லை' என்று, மத்திய அரசு சமீபத்தில் தெரிவித்தது.</p> <h3 style="text-align: justify;">புதிய இடங்கள் குறித்து தீவிர ஆலோசனை</h3> <p style="text-align: justify;">இந்நிலையில், விமான நிலைய திட்டத்திற்கு புதிய இடம் தேர்வு குறித்து, முதல்வர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து, அரசு உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை புதிய விமான நிலையத்திற்கு ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட நான்கு இடங்களில், மக்கள் இருப்பிடங்கள் பாதிக்கப்படுவது என்பது, பரந்தூரில்தான் மிகவும் குறைவு. அதனால் தான், பரந்தூர் தேர்வானது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையிலும், இதுவரை பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடுவது குறித்து, அதிகாரப்பூர்வமாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இருப்பினும், புதிய விமான நிலையத்தை மாற்று இடத்தில் அமைக்க அரசு விரும்புகிறது. அதற்கு ஏற்ப காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் எந்தெந்த இடங்கள் உள்ளன, அவை சாத்தியமானதா என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதில், எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.</p>

சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்காக மாற்று இடங்களைத் தேர்வு செய்வது குறித்து, முதலமைச்சர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரத்தின் பரந்தூர் விமான நிலையத் திட்டம் இதுவரை கைவிடப்படவில்லை என்றாலும், புதிய இடங்களை ஆராயும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.
மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில், விரிவாக்கப் பணிகளில் உள்ள சிக்கல்கள் மற்றும் எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இதற்கான புதிய இடங்களைத் தேடும் பணியில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.