டால்பின் புயல் டூ எல் நினோ: மிரட்டும் பசிபிக் புயல்கள்; வங்கக்கடலில் மழை மேகங்கள் குறையக் காரணம் என்ன?
பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள தீவிர காலநிலை மாற்றங்களால், ஒருபுறம் சீனாவை பலத்த காற்றுடன் கூடிய புயல் தாக்கியுள்ள நிலையில், மற்றொரு புறம் இந்தியாவில் பருவமழை பொய்க்கும் அபாயம் உருவாகியுள்ளது. சீனாவின் கிழக்குக் கடலோரப் பகுதியான செஜியாங் (Zhejiang) மாகாணத்தில் உள்ள யுஹுவான் (Yuhuan) அருகே ஆக.9 அன்று 'டால்பின்' (Dolphin) சூறாவளிப் புயல் கரையைக் கடந்தது. மணிக்கு சுமார் 151 கி.மீ வேகத்தில் வீசிய பலத்த காற்றுடன் கனமழையும் கொட்டித்தீர்த்ததால் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டது. இதன் காரணமாக 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். இந்த ஆண்டில் சீனாவைத் தாக்கிய மிகவும் சக்திவாய்ந்த சூறாவளிப் புயலாக இது பதிவாகியுள்ளது. சீனாவில் பெய்த கனமழையை விட, பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள கொந்தளிப்பான வளிமண்டலச் சூழலே இந்தியாவிற்குப் பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. செயற்கைக்கோள் படங்களின்படி, பசிபிக் பெருங்கடலின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாகப் பல வானிலை அமைப்புகள் (Weather systems) தீவிரமடைந்து வருகின்றன. பசிபிக் பெருங்கடலில் நிலவும் இந்தத் தீவிரச் செயல்பாடுகள், இந்தியப் பருவமழையுடன் தொடர்புடைய வளிமண்டலக் காற்றுச் சுழற்சியைப் பெருமளவில் பாதிக்கக்கூடும். எல் நினோ (El Nino) போன்ற காலநிலைக் சூழலின் போது, வளிமண்டலக் காற்று மற்றும் மேகக் கூட்டங்களின் நகர்வு கிழக்குப் பக்கமாக பசிபிக் பெருங்கடலை நோக்கி நகர்கிறது. இது வாக்கர் சுழற்சியை (Walker circulation) மாற்றி அமைத்து, இந்தியப் பெருங்கடலை அடையும் வளிமண்டல அலைகளைப் பாதிக்கிறது. இதனால் இந்தியாவில் மழை தரும் வளிமண்டல அமைப்புகள் பலவீனமடைகின்றன. இந்தியப் பருவமழைக்குத் தேவையான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் உருவாகும் முக்கிய மையமாக விளங்கும் வங்கக்கடலில் இது நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பசிபிக் பெருங்கடல் எப்போதும் இந்தியப் பருவமழையை நேரடியாகப் பலவீனப்படுத்துவதில்லை. சில நேரங்களில், வடமேற்கு பசிபிக் பகுதியில் ஏற்படும் வளிமண்டலக் கோளாறுகள் மேற்கு நோக்கி நகர்ந்து, வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் உருவாகவும் வழிவகுக்கும். வரலாற்று ரீதியாக, இந்தியாவில் உருவாகும் 3-ல் ஒரு பங்கு பருவமழை அமைப்புகளுக்குப் பசிபிக் பெருங்கடலின் காற்றழுத்த மாற்றங்களே காரணமாக இருந்துள்ளன. இருப்பினும், தற்போதைய சாதகமற்ற எல் நினோ பின்னணிச் சூழலால், பசிபிக் பெருங்கடலின் இந்தத் தீவிரச் செயல்பாடுகள் இந்தியப் பகுதியில் மேகக் கூட்டங்கள் உருவாவதைத் தடுத்து மழையைக் குறைத்து வருகின்றன. இந்தியாவில் பருவமழை மேகங்களின் அடர்த்தி குறைந்துள்ளதோடு, வங்கக்கடலிலும் வழக்கமான மழை அமைப்புகள் உருவாகவில்லை. 'டால்பின்' புயல் நேரடியாக இந்தியாவின் மழையை திருடிச்செல்லவில்லை என்றாலும், பசிபிக் பெருங்கடலில் நடக்கும் பெரிய வளிமண்டல மாற்றத்தின் ஒரு அங்கமாகவே இப்புயல் திகழ்கிறது. வரவிருக்கும் நாட்களில், பசிபிக் பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தை உருவாக்கிப் பருவமழையை மீட்குமா அல்லது எல் நினோ சூழல் இந்தியப் பருவமழையை மேலும் முடக்குமா என்பதே தற்போதைய முதன்மையான கேள்வியாக உள்ளது.

பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள தீவிர காலநிலை மாற்றங்களால் சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன. ஆகஸ்ட் 9 அன்று, சீனாவின் செஜியாங் மாகாணத்தில் உள்ள யுஹுவான் அருகே மணிக்கு 151 கி.மீ வேகத்தில் 'டால்பின்' சூறாவளிப் புயல் கரையைத் தாண்டியது. இதனால் பலத்த காற்றுடன் கனமழை பெய்து, அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதே காலநிலை மாற்றத்தின் ஒரு பகுதியாக, பசிபிக் பகுதியில் உருவாகியுள்ள புயல்கள் மற்றும் 'எல் நினோ' தாக்கம் காரணமாக இந்தியாவில் பருவமழை பொய்க்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் வங்கக்கடலில் மழை மேகங்களின் வரத்து குறைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.