பிரபஞ்சத்தின் ரகசியங்களை உடைக்கப் போகும் நாசாவின் புதிய டெலஸ்கோப்: ஹப்பிள், வெப்-ஐ விட 100 மடங்கு சக்தி வாய்ந்ததா?
பிரபஞ்சத்தைப் பற்றிய மனிதர்களின் புரிதலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில், நாசாவின் புதிய தலைமுறை விண்வெளித் தொலைநோக்கி நான்சி கிரேஸ் ரோமன் விண்வெளித் தொலைநோக்கி விண்ணில் ஏவப்பட்டுள்ளது. சுமார் 20 ஆண்டுகளாக விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் இணைந்து வடிவமைத்து உருவாக்கிய இந்தத் தொலைநோக்கி, வரும் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மிகப்பெரிய அளவில் வானியல் தரவுகளை வழங்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் டைரனோசாரஸ் ரெக்ஸ் அளவுக்கு எடை கொண்டதாகவும், ஒரு பெரிய சுற்றுலாப் பேருந்தின் அளவிலும் இருக்கும் இந்தத் தொலைநோக்கி, ஆகஸ்ட் 30ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. முதல் ஐந்து ஆண்டுகளில் ரோமன் தொலைநோக்கி மேற்கொள்ளும் ஆய்வுகள் வானியல் துறையில் புதிய சகாப்தத்தை உருவாக்கும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இருண்ட பிரபஞ்சத்தின் மர்மத்துக்கு விடை கிடைக்குமா? நாம் நேரடியாகப் பார்க்கவும் உணரவும் முடியும் பொருள், பிரபஞ்சத்தின் மொத்த உள்ளடக்கத்தில் ஒரு சிறிய பகுதி மட்டுமே. பிரபஞ்சத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருப்பதாகக் கருதப்படும் இருண்ட பொருள் மற்றும் இருண்ட ஆற்றல் குறித்து விஞ்ஞானிகளிடம் இன்னும் பல கேள்விகள் உள்ளன. இருண்ட பொருளை நேரடியாகப் பார்க்க முடியாது. ஆனால் அதன் ஈர்ப்பு விசை தொலைவில் உள்ள விண்மீன் திரள்களின் தோற்றத்தைச் சிறிதளவு மாற்றுகிறது. இந்த மாற்றங்களை ரோமன் தொலைநோக்கி துல்லியமாகக் கண்காணிக்க முடியும். இதன் மூலம் பிரபஞ்சத்தில் இருண்ட பொருள் எவ்வாறு பரவியுள்ளது என்பதை விஞ்ஞானிகள் வரைபடமாக உருவாக்க முடியும். மேலும், குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த சுமார் 21 ஆயிரம் நட்சத்திர வெடிப்புகளையும் இந்தத் தொலைநோக்கி கண்டறியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வெடிப்புகளின் தன்மை நன்றாக அறியப்பட்டிருப்பதால், அவை பூமியிலிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளன என்பதையும் கணக்கிட முடியும். இதனுடன், பல கோடி விண்மீன் திரள்களையும் ரோமன் ஆய்வு செய்யும். அவை பல பில்லியன் ஆண்டுகளில் எவ்வாறு ஒன்றாகக் குவிந்தன, பின்னர் எவ்வாறு விலகின என்பதற்கான தடயங்களும் கிடைக்கும். இதன் மூலம் இருண்ட ஆற்றல் குறித்து தற்போதுள்ள அறிவியல் கருத்துகள் சரியா அல்லது அவற்றில் மாற்றம் தேவைப்படுகிறதா என்பது குறித்து முக்கியமான தகவல்கள் கிடைக்கலாம். இந்தக் கேள்விக்கான விடை பிரபஞ்சத்தின் எதிர்காலத்தைப் புரிந்துகொள்வதிலும் முக்கியமானதாக இருக்கும். ஹப்பிளை விட 100 மடங்கு பெரிய பார்வை! ரோமன் தொலைநோக்கியின் மிகப்பெரிய சிறப்புகளில் ஒன்று அதன் பரந்த பார்வைத் திறன். ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கி குறிப்பிட்ட பகுதிகளை மிகத் தெளிவாகப் படம் பிடிப்பதில் சிறந்து விளங்குகிறது. ஆனால் ரோமன் தொலைநோக்கியின் பார்வைப் பரப்பு, ஹப்பிளை விட சுமார் 100 மடங்கு பெரியது. இதனால், ஒரு குறிப்பிட்ட விண்மீன் அல்லது விண்மீன் திரளைக் குறிவைத்து மட்டுமே ஆய்வு செய்வதற்குப் பதிலாக, மிகப்பெரிய வான்பரப்பை முறையாக ஆய்வு செய்ய முடியும். இதுவே ரோமன் தொலைநோக்கியின் மிகப்பெரிய பலம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆயிரக்கணக்கான வேற்றுக்கிரகங்கள் கண்டுபிடிக்கப்படுமா? ரோமன் தொலைநோக்கியின் மற்றொரு முக்கிய இலக்கு, நமது சூரியக் குடும்பத்திற்கு வெளியே உள்ள வேற்றுக்கிரகங்களை கண்டுபிடிப்பதாகும். இதுவரை விஞ்ஞானிகள் 6,000-க்கும் மேற்பட்ட வேற்றுக்கிரகங்களை அடையாளம் கண்டுள்ளனர். அவற்றில் பெரும்பாலானவை பூமிக்கு ஒப்பீட்டளவில் அருகிலுள்ள பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டவை. ஆனால் ரோமன் தொலைநோக்கி, பால்வீதியின் மையப்பகுதிக்கு அருகில் உள்ள அடர்த்தியான விண்மீன் கூட்டங்களிலும் கிரகங்களைத் தேடும். இதற்காக இரண்டு முக்கிய முறைகள் பயன்படுத்தப்பட உள்ளன. நட்சத்திரத்தின் ஒளி குறைவதை வைத்து கண்டுபிடிப்பு ஒரு கிரகம் தனது நட்சத்திரத்துக்கு முன்னால் கடந்து செல்லும்போது, அந்த நட்சத்திரத்தின் ஒளி சிறிதளவு குறையும். இதைத் தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம் அந்த நட்சத்திரத்தைச் சுற்றி ஒரு கிரகம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிய முடியும். இந்த முறையின் மூலம் ரோமன் தொலைநோக்கி 2 லட்சம் வரை வேற்றுக்கிரகங்களை கண்டுபிடிக்கக்கூடும் என மதிப்பிடப்படுகிறது. ஈர்ப்பு விசையால் ஒளி வளையும் முறை மற்றொரு முக்கியமான முறை மைக்ரோலென்சிங் எனப்படும் ஈர்ப்பு ஒளிவிலகல் முறையாகும். இரண்டு நட்சத்திரங்கள் ரோமன் தொலைநோக்கியின் பார்வையில் சரியான கோட்டில் அமைந்தால், முன்னால் இருக்கும் நட்சத்திரத்தின் ஈர்ப்பு விசை பின்னால் இருக்கும் நட்சத்திரத்தின் ஒளியை வளைக்கச் செய்யும். இதனால் பின்னால் இருக்கும் நட்சத்திரம் தற்காலிகமாக அதிக ஒளிர்வுடன் தோன்றும். முன்னால் இருக்கும் நட்சத்திரத்தைச் சுற்றி ஒரு கிரகம் இருந்தால், அந்த கிரகம் கூடுதலாக ஒரு சிறிய ஒளிர்வை ஏற்படுத்தும். அதை வைத்து அந்தக் கிரகத்தின் அளவு மற்றும் அதன் நட்சத்திரத்திலிருந்து உள்ள தொலைவை விஞ்ஞானிகள் கணக்கிட முடியும். இந்த முறையின் மூலம் சுமார் 1,400 வேற்றுக்கிரகங்களை கண்டுபிடிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆய்வுகள் மூலம் நமது சூரியக் குடும்பம் வழக்கமான ஒன்றா அல்லது மிகவும் அரிதான அமைப்பா என்பதையும் விஞ்ஞானிகள் புரிந்துகொள்ள முடியும். கருந்துளைகள், விண்மீன்கள், சிறுகோள்களையும் ஆய்வு செய்யும் ரோமன் தொலைநோக்கியின் ஆய்வுகள் வேற்றுக்கிரகங்களோடு முடிந்துவிடாது. பிரபஞ்சத்தில் ஒளிர்ந்து மறையும் நட்சத்திரங்கள், கருந்துளைகளால் துண்டு துண்டாக இழுக்கப்படும் நட்சத்திரங்கள் உள்ளிட்ட பல நிகழ்வுகளையும் இது கண்காணிக்கும். நமது சூரியக் குடும்பத்திலும் வேகமாகச் செல்லும் சிறுகோள்களை இது கண்டறிய முடியும். இதன் மூலம் பூமிக்கு அருகில் செல்லக்கூடிய விண்கற்களால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து விஞ்ஞானிகள் கூடுதல் தகவல்களைப் பெறலாம். மேலும், பால்வீதியின் மையத்தில் இருக்கும் மிகப்பெரிய கருந்துளையைச் சுற்றியுள்ள பகுதியையும் ரோமன் தொடர்ந்து கண்காணிக்கும். பால்வீதியின் மறைந்த பகுதியை பார்க்கப் போகிறது நமது பால்வீதி விண்மீன் மண்டலத்தின் மையப்பகுதியில் ஏராளமான நட்சத்திரங்கள் உள்ளன. ஆனால் அந்தப் பகுதி தூசு மற்றும் வாயுக்களால் சூழப்பட்டிருப்பதால், பெரும்பாலான தொலைநோக்கிகளால் அதை முழுமையாக ஆய்வு செய்வது கடினம். ரோமன் தொலைநோக்கி அந்தப் பகுதியை மிக விரிவாக ஆய்வு செய்யும். இதன் மூலம் பால்வீதியின் பெரும்பகுதி எவ்வாறு உருவானது, அங்கு உள்ள நட்சத்திரங்கள் எவ்வாறு செயல்படுகின்றன, கருந்துளை அவற்றை எவ்வாறு பாதிக்கிறது போன்ற பல கேள்விகளுக்கு புதிய பதில்கள் கிடைக்கலாம். மிகப்பெரிய கண்டுபிடிப்புகள் எதிர்பாராதவையாக இருக்கலாம்! ரோமன் தொலைநோக்கி ஏவப்பட்டுவிட்டாலும் அதன் முழுமையான அறிவியல் செயல்பாடுகள் உடனடியாகத் தொடங்காது. விண்வெளியில் தொலைநோக்கியின் அனைத்து அமைப்புகளும் சரியாக விரிக்கப்பட வேண்டும். பின்னர் பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில், சூரியனுக்கு எதிர்புறத்தில் அமைந்துள்ள அதன் செயல்பாட்டு நிலையத்தை நோக்கி அது பயணிக்க வேண்டும். இந்த முழு செயல்முறைக்கும் மூன்று மாதங்களுக்கும் மேல் ஆகலாம். ஆனால் விஞ்ஞானிகளுக்கு அதிக ஆர்வத்தை ஏற்படுத்துவது அவர்கள் ஏற்கெனவே எதிர்பார்க்கும் கண்டுபிடிப்புகள் மட்டுமல்ல. இதுவரை யாரும் கணிக்க முடியாத, பெயரே இல்லாத புதிய விண்வெளி நிகழ்வுகளையும் ரோமன் கண்டுபிடிக்கலாம். அதுவே இந்தத் தொலைநோக்கியின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. இதுவரை மனிதர்கள் அறிந்திராத பிரபஞ்சத்தின் புதிய ரகசியங்களை ரோமன் வெளிப்படுத்தக்கூடும். அதன் கண்டுபிடிப்புகள் அடுத்த பல தசாப்தங்களுக்கு வானியல் ஆய்வுகளின் திசையையே மாற்றும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

பிரபஞ்சத்தின் மர்மங்களை ஆராயும் நோக்கில் நாசாவின் புதிய தலைமுறை விண்வெளித் தொலைநோக்கியான 'நான்சி கிரேஸ் ரோமன்' விண்ணில் ஏவப்பட்டுள்ளது. சுமார் 20 ஆண்டுகால உழைப்பில் உருவாக்கப்பட்ட இந்தத் தொழில்நுட்பக் கருவி, மனிதர்களின் விண்வெளி குறித்த புரிதலை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டைரனோசாரஸ் ரெக்ஸ் அளவுக்கு எடை கொண்ட இந்தத் தொலைநோக்கி, வரும் ஆண்டின் தொடக்கம் முதல் பிரம்மாண்டமான வானியல் தரவுகளை வழங்கத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹப்பிள் மற்றும் வெப் தொலைநோக்கிகளை விட இது நூறு மடங்கு அதிக திறன் கொண்டதாகக் கருதப்படுகிறது.