PulseNews
தொழில்நுட்பம்

மழை பெய்யும்போது 'மண் வாசனை' வருவது ஏன்? முதல் மழை தரும் நறுமணத்தின் பின்னணியில் உள்ள அறிவியல்

வட இந்தியாவில் சுட்டெரிக்கும் வெயிலுக்குப் பிறகு, டெல்லி முதல் ஜெய்ப்பூர் வரை பெய்த திடீர் மழையால் காற்றில் அற்புதமான நறுமணம் பரவியுள்ளது. காய்ந்த நிலத்தில் மழைத்துளிகள் விழும்போது வரும் அந்த 'மண் வாசனை'க்கு மயங்காதவர்களே இருக்க முடியாது. ஆனால், அந்த வாசனை எங்கிருந்து வருகிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அதன் பின்னால் ஒரு சுவாரசியமான அறிவியலும், மனித குலத்தின் பரிணாம வளர்ச்சியும் ஒளிந்துள்ளது. மழை பெய்யும்போது வரும் இந்த வாசனைக்கு அறிவியல் ரீதியாக 'பெட்ரிகோர்' என்று பெயர். 1964-ல் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் சூட்டிய இந்தப் பெயர் கிரேக்க மொழியில் இருந்து வந்தது. 'பெட்ரோ' (Petros) என்றால் கல், 'இகோர்' (Ichor) என்றால் கிரேக்கக் கடவுள்களின் நரம்புகளில் ஓடுவதாகக் கருதப்படும் புனித திரவம். அதாவது, "கல்லிலிருந்து கசியும் புனித நீர்" என்பதே இதன் பொருள். இந்த நறுமணத்தின் பின்னணியில் 'ஜியோஸ்மின்' (Geosmin) என்ற ஒரு வேதிப்பொருள் உள்ளது. இதை மண்ணில் வாழும் 'ஆக்டினோமைசீட்ஸ்' என்ற ஒருவகை பாக்டீரியாக்கள் உருவாக்குகின்றன. இது எப்படி காற்றில் பரவுகிறது? மழைத் துளிகள் காய்ந்த நிலத்தில் விழும்போது, மண்ணுக்குள் இருக்கும் நுணுக்கமான காற்றுக்குமிழ்களைச் சிறைபிடிக்கின்றன. அந்தக் குமிழ்கள் வெடிக்கும்போது, மண்ணில் உள்ள ஜியோஸ்மின் துகள்கள் மிகச்சிறிய நுண்துகள்களாகக் காற்றில் தெறிக்கின்றன. அதன் பிறகு காற்று அந்த வாசனையை நம் மூக்கிற்கு கொண்டு வந்து சேர்க்கிறது. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், வாசனைத் திரவியங்களை விட இந்த ஜியோஸ்மின் வாசனையை உணர்வதில் மனித மூக்கு அசாத்தியமானத் திறன் கொண்டது. உதாரணத்திற்கு சுமார் 200 ஒலிம்பிக் நீச்சல் குளங்கள் அளவுள்ள தண்ணீரில் ஒரே ஒரு துளி ஜியோஸ்மினை ஊற்றினால் கூட, அந்த நுட்பமான வாசனையை ஒரு மனிதனால் துல்லியமாக அடையாளம் காண முடியும். ஏன் நமக்கு இந்த வாசனை இவ்வளவு பிடிக்குமா? விஞ்ஞானிகளின் கருத்துப்படி, இது நமது முன்னோர்களிடமிருந்து நமக்கு வந்த ஒரு 'பரிணாமப் பண்பு'. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, மனிதர்களுக்கு மழை என்பது வெறும் தட்பவெப்பநிலை மாற்றம் அல்ல; அது குடிநீருக்கான ஆதாரம் மற்றும் விவசாயத்திற்கான அறிகுறி. எனவே, அந்த மண் வாசனையை "வாழ்வதற்கான நல்ல சூழல்" என்று நம் மூளை அடையாளப்படுத்திக் கொண்டது. அதனால்தான் இன்றும் அந்த வாசனை நமக்கு ஒருவித நிம்மதியையும், உற்சாகத்தையும் தருகிறது. மழை தொடங்குவதற்கு முன்பே ஒருவிதமான கூர்மையான வாசனை வருவதை கவனித்திருக்கிறீர்களா? தாவரங்கள் தங்களுக்குப் போட்டியாக வளரும் மற்ற செடிகளைத் தடுக்க மண்ணில் ஒருவித எண்ணெயைச் சுரக்கின்றன. மழை வருவதற்கு முன்னால் ஏற்படும் ஈரப்பதம் அந்த எண்ணெயை ஆவியாக்குவதால், மழை பெய்வதற்கு முன்பே நமக்கு அந்த 'சுத்தமான' வாசனை கிடைக்கிறது. நிலம் நீண்ட நாட்களாக காய்ந்து போயிருக்கும்போது, மண்ணுக்குள் ஜியோஸ்மின் மற்றும் தாவர எண்ணெய்கள் அதிக அளவில் தேங்கியிருக்கும். முதல் மழை பெய்தவுடன் அவை அனைத்தும் ஒரே நேரத்தில் 'வெடித்து' வெளியேறுவதால், வெயில் காலத்திற்குப் பின் வரும் மழையில் வாசனை மிகவும் தூக்கலாகத் தெரிகிறது. அடுத்த முறை மழை பெய்யும்போது, அந்த நறுமணத்தை ஆழமாகச் சுவாசியுங்கள். அது வெறும் மழை மட்டுமல்ல; அது பல கோடி பாக்டீரியாக்கள், தாவரங்களின் வேதியியல் மற்றும் நம் முன்னோர்களின் நினைவுகள் அனைத்தும் இணைந்து நமக்குத் தரும் ஒரு 'இயற்கை விருந்து'.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
மழை பெய்யும்போது 'மண் வாசனை' வருவது ஏன்? முதல் மழை தரும் நறுமணத்தின் பின்னணியில் உள்ள அறிவியல்
PulseNews சுருக்கம்

வட இந்தியாவில் நிலவிய கடும் வெப்பத்தைத் தொடர்ந்து பெய்த மழையால் காற்றில் பரவும் அந்த மண் வாசனைக்கு 'பெட்ரிகோர்' (Petrichor) என்று பெயர். கிரேக்க மொழியில் 'கல்லிலிருந்து கசியும் புனித நீர்' என்று பொருள்படும் இப்பெயர், 1964-ல் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளால் சூட்டப்பட்டது. நிலத்தில் வாழும் 'ஆக்டினோமைசீட்ஸ்' வகை பாக்டீரியாக்கள் உருவாக்கும் 'ஜியோஸ்மின்' என்ற வேதிப்பொருள் மற்றும் தாவரங்கள் சுரக்கும் எண்ணெய்களே இந்தத் தனித்துவமான நறுமணத்திற்குக் காரணமாகின்றன.

மழைத்துளிகள் காய்ந்த நிலத்தில் விழும்போது மண்ணுக்குள் இருக்கும் காற்றுக்குமிழ்கள் வெடிப்பதால், இத்துகள்கள் காற்றில் கலந்து நம் மூக்கை அடைகின்றன. மனித மூக்கு மற்ற வாசனைத் திரவியங்களை விடவும், இந்த ஜியோஸ்மின் வாசனையை மிக நுட்பமாக உணரும் திறன் கொண்டது. வறண்ட காலத்திற்குப் பிறகு பெய்யும் முதல் மழையில் இந்த வாசனை மிக அதிகமாக இருக்கும். மழையை வாழ்வாதாரமாகக் கருதிய நம் முன்னோர்களின் பரிணாம வளர்ச்சியின் காரணமாகவே, இந்த வாசனை இன்றும் மனிதர்களுக்கு நிம்மதியையும் உற்சாகத்தையும் தருகிறது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology