மகாராஷ்டிராவில் அதிரடி சோதனை; மராத்தி மொழி தெரியாத 1,268 ஆட்டோ - டாக்சி ஓட்டுநர்களுக்கு நோட்டீஸ்..!
மகாராஷ்டிராவில் வணிக ரீதியான ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் மராத்தி மொழியை ஓரளவிற்காவது பேசத் தெரிந்திருக்க வேண்டும் என்பது அம்மாநில அரசால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு கடந்த வருடம் வெளியானது. இது, ஓட்டுநர்களுக்கும், பயணிகளுக்கும் இடையிலான தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்துவதும் எளிதாக்குவதற்குமான முயற்சியின் முக்கிய நோக்கம் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த அறிவிப்பை தீவிரமாக அமல்படுத்தும் வகையில், போக்குவரத்துத் துறை நேற்று மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் சிறப்பு ஆய்வு நடவடிக்கையைத் தொடங்கியது. அதில் ஓட்டுநர்களிடம் 16 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து போக்குவரத்துத் துறை குழுக்கள் மும்பை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர சோதனைகளை நடத்தி, 3,995 ஓட்டுநர்களை ஆய்வு செய்தன. ஆய்வின் படி, மும்பை பெருநகரப் பகுதியில் மட்டும் 3,995 ஓட்டுநர்கள் சோதிக்கப்பட்டனர். இவர்களில், 604 ஓட்டுநர்களுக்கு அன்றாடப் பயன்பாட்டிற்குத் தேவையான மராத்தி மொழித் திறன் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், மும்பை பெருநகரப் பகுதியைத் தவிர்த்து, மாநிலத்தின் பிற மாவட்டங்களில் 4,222 ஓட்டுநர்கள் சோதிக்கப்பட்டதில், 664 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சேர்த்து முதல் கட்டமாக, மராத்தி மொழி குறித்த போதிய அறிவு இல்லாத மொத்தம் 1,268 ஓட்டுநர்களுக்கு மகாராஷ்டிர போக்குவரத்து துறை அலுவலகங்கள் சார்பில்நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து, மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக் விளக்கம் அளித்து கூறியுள்ளதாவது; ஓட்டுநர்களிடம் நிர்வாகம் அனுதாபத்துடனான அணுகுமுறையையே கடைப்பிடிக்கிறது என்றும், அவர்கள் மொழியைக் கற்றுக்கொள்வதற்குப் போதுமான கால அவகாசமும், வாய்ப்பும் வழங்கப்படுகின்றனஎன்று குறிப்பிட்டதோடு, இந்த ஆய்வு நடவடிக்கை வரும் செப்டம்பர் 30-ஆம் தேதிவரை வரை தொடரும் என கூறப்படுகிறது. மேலும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குப் பிறகும் விதிமுறைகளை மீறும் ஓட்டுநர்கள் மீது கடுமையான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், விதிகளைத் தவிர்ப்பதற்கோ அல்லது தப்பிப்பதற்கோ எந்தவித வாய்ப்பும் அளிக்கப்படாது என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், ஆட்டோ - டாக்சி ஓட்டுநர்களுக்கு மராத்தி மொழி பயிற்சியை, மகாராஷ்டிர அரசுடன் இணைந்து கடந்த மே 1 முதல் பல பொதுசேவை நிறுவனங்கள் இலவசமாக வழங்கி வருகின்றன. இதில், மராத்தி அல்லாத சுமார் ஒன்றரை லட்சம் ஓட்டுநர்கள் மராத்தி மொழியைக் கற்றுள்ளனர். இவர்களில் அதன் இறுதி தேர்வில் 7,750 பேரால் குறைந்தபட்ச மதிப்பெண் பெற முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மும்பையில் மட்டும் சுமார் 4.5 லட்சம் ஆட்டோக்களும், 60,000 டாக்சிகளும் ஓடுகின்றன. இவை இரண்டு ஷிப்டுகளாக செயல்படுவதால் அதன் ஓட்டுநர்கள் எண்ணிக்கை இருமடங்காகும். இவர்களில் பெரும்பாலானவர்கள் பீஹார் மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் 1.35 லட்சம் பேர் மராத்தி கற்றுக் கொள்ள விண்ணப்பித்துள்ளனர். இந்த பயிற்சிகள் அரசு பள்ளிகளில் பகுதி நேரமாக நடைபெறுகிறது.

மகாராஷ்டிராவில் வணிக ரீதியான ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் மராத்தி மொழி பேசத் தெரிந்திருக்க வேண்டும் என்ற விதிமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர்களுக்கும் பயணிகளுக்கும் இடையிலான தகவல் பரிமாற்றத்தை எளிதாக்கும் நோக்கில் இந்த அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது.
இந்த விதிமுறையை முறையாக அமல்படுத்தும் வகையில், மாநிலம் முழுவதும் போக்குவரத்துத் துறை நேற்று தீவிர ஆய்வு மேற்கொண்டது. இந்த சோதனையில் மராத்தி மொழி தெரியாத 1,268 ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.