விழுப்புரத்தில் உர விற்பனைக்கு செக்! தனியார் உர மையத்துக்கு 7 நாள் உற்பத்தி தடை
<p>விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்யவும், உர விற்பனையில் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுக்கவும் கலப்பு உர உற்பத்தி மையங்களில் வேளாண்மைத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது விதிமுறைகளை மீறியதாக கண்டறியப்பட்ட விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் கலப்பு உர உற்பத்தி மையத்துக்கு 7 நாட்கள் தற்காலிக உற்பத்தித் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p> <p>விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது விவசாயிகள் நெல், மக்காச்சோளம், மணிலா, உளுந்து, கரும்பு மற்றும் தென்னை உள்ளிட்ட பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இதற்குத் தேவையான ரசாயன உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்கள் மூலம் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.</p> <p>மாவட்டத்தில் தற்போது யூரியா 8,063 டன், டி.ஏ.பி. 2,644 மெட்ரிக் டன், பொட்டாஷ் 1,295 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் உரம் 10,473 மெட்ரிக் டன் மற்றும் சூப்பர் பாஸ்பேட் 2,099 மெட்ரிக் டன் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.</p> <h2>கலப்பு உர மையங்களில் திடீர் ஆய்வு</h2> <p>இந்நிலையில், மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து கலப்பு உர உற்பத்தி மையங்களிலும் வேளாண்மைத் துறை சார்பில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வேளாண்மை துணை இயக்குநர் (மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்) தலைமையில் குழு அமைக்கப்பட்டு, உர உற்பத்தி மையங்களில் உரங்களின் இருப்பு, கொள்முதல், உற்பத்தி, விற்பனை மற்றும் உரிமம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டன.</p> <p>ஆய்வின்போது கலப்பு உர உற்பத்தியாளர்கள் அரசின் விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.</p> <h2>பிற மாவட்டங்களுக்கு மானிய உரங்களை விற்கக் கூடாது</h2> <p>விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கலப்பு உர உற்பத்தியாளர்கள் மானிய உரங்களை பிற மாவட்டங்களுக்கு விற்பனை செய்யக்கூடாது என்றும், பிற மாவட்டங்களில் இருந்து மானிய உரங்களை கொள்முதல் செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p> <p>இத்தகைய முறைகேடுகள் ஆய்வின்போது கண்டறியப்பட்டாலோ அல்லது இதுதொடர்பாக புகார்கள் பெறப்பட்டாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.</p> <p>மேலும், உர உற்பத்தி உரிமத்தில் அனுமதி பெற்ற நிறுவனங்களிடமிருந்து மட்டுமே உரங்களை கொள்முதல் செய்ய வேண்டும். அவற்றை உரிமத்தில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே இருப்பு வைத்து உற்பத்தி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p> <p>அனுமதி பெறாமல் கலப்பு உரங்களை கொள்முதல் செய்வது மற்றும் அவற்றை விவசாயிகளுக்கு விற்பனை செய்வது முற்றிலும் கூடாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.</p> <h2>விலைப்பட்டியல் வைக்க உத்தரவு</h2> <p>உர விற்பனை நிலையங்களில் உரங்களின் இருப்பு மற்றும் விலை விவரங்கள் அடங்கிய பலகையை விவசாயிகளின் பார்வையில் தெளிவாகத் தெரியும்படி வைக்க வேண்டும். அந்த விவரங்களை தினசரி முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p> <p>மேலும், உரங்களை விற்பனை முனையக்கருவி (PoS) மூலமாக மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். விற்பனை முனையக்கருவியில் பதிவாகியுள்ள உர இருப்புக்கும், விற்பனை நிலையத்தில் உள்ள உண்மையான இருப்புக்கும் வேறுபாடு இல்லாத வகையில் இருப்பு விவரங்களை முறையாக பராமரிக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.</p> <p>விவசாயிகளுக்கு தேவையில்லாத பிற இடுபொருட்களை உரங்களுடன் கட்டாயப்படுத்தி இணைத்து விற்பனை செய்யக்கூடாது. தரமற்ற அல்லது போலியான உரங்களை விற்பனை செய்வதும் கண்டிப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது.</p> <h2>தனியார் உர உற்பத்தி மையத்துக்கு 7 நாள் தடை</h2> <p>இந்த திடீர் ஆய்வின்போது, விழுப்புரத்தில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் கலப்பு உர உற்பத்தி மையத்தில் விதிமீறல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உரக்கட்டுப்பாட்டு ஆணை, 1985-ன் கீழ் அந்த நிறுவனத்துக்கு 7 நாட்கள் தற்காலிக உற்பத்தித் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.</p> <h2>அதிக விலை, பதுக்கல் குறித்து எச்சரிக்கை</h2> <p>மாவட்டத்தில் உர ஆய்வாளர்கள் தொடர்ந்து திடீர் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர். இந்த ஆய்வுகளின்போது உரங்களை நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட அதிக விலைக்கு விற்பனை செய்வது, விவசாயம் அல்லாத தேவைகளுக்கு மானிய உரங்களை விற்பனை செய்வது, உரங்களை கடத்துவது அல்லது பதுக்கி வைப்பது போன்ற முறைகேடுகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரக்கட்டுப்பாட்டு ஆணை, 1985-ன் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மைத் துறை எச்சரித்துள்ளது.</p> <p>இதுகுறித்து வேளாண்மை இணை இயக்குநர் (பொ) பா. சுரேஷ் கூறுகையில், மாவட்டத்தில் உரங்களின் இருப்பு மற்றும் விற்பனையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உரங்கள் முறையாகவும், நிர்ணயிக்கப்பட்ட விலையிலும் கிடைப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.</p>

விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கவும், விற்பனையில் முறைகேடுகளைத் தவிர்க்கவும் வேளாண்மைத் துறை அதிகாரிகள் தனியார் உர உற்பத்தி மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது விதிமுறைகளை மீறியதாகக் கண்டறியப்பட்ட, விழுப்புரத்தைச் சேர்ந்த தனியார் கலப்பு உர உற்பத்தி மையம் ஒன்றிற்கு 7 நாட்கள் உற்பத்தி செய்ய தற்காலிகத் தடை விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.