நிதி நெருக்கடியில் கோவை சிறப்புப் பள்ளி: தமிழக அரசின் உடனடி உதவியை எதிர்பார்த்து குழந்தைகள்
போதிய நிதி ஆதரவு இல்லாததால் 87 சிறப்புக் குழந்தைகளின் இலவசக் கல்வி மற்றும் சிகிச்சைகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாகவும், இதற்குத் தீர்வுகாண வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் 'டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கனவு சிறப்புப் பள்ளி' (DADSS) நிருவாகத்தினர் தெரிவித்து உள்ளனர். இது குறித்து அப்பள்ளி நிர்வாகம் வெளியீட்டு உள்ள கோரிக்கை அறிக்கையில், "மாற்றுத் திறனாளிகளால் உருவாக்கப்பட்ட 'தார்டோ' (DARDO - Differently Abled Research & Development Organisation) அமைப்பின் சார்பில், கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் 'டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கனவு சிறப்புப் பள்ளி' (DADSS) இயங்கி வருகிறது. இங்கு 87 சிறப்புத் தேவையுடைய மற்றும் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்குக் கல்வி, பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகள், உணவு, போக்குவரத்து மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், போதிய மற்றும் தொடர்ச்சியான நிதி ஆதரவு இல்லாத காரணத்தால், தற்போது பள்ளியை நடத்துவதில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. கடந்த 3 மாதங்களாகப் பள்ளி ஆசிரியர்கள், சிறப்புக் கல்வியாளர்கள் மற்றும் சிகிச்சையாளர்களுக்குச் சம்பளம் கூட வழங்க முடியாத சூழல் நிலவுகிறது. இருப்பினும், குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். மாற்றுத் திறனாளிகளால் நடத்தப்படும் இந்த இலவசச் சிறப்புப் பள்ளியைத் தடையின்றித் தொடர்ந்து நடத்தத் தமிழக அரசு நேரடியாக நிதி உதவி வழங்க வேண்டும். அல்லது, நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதி (CSR Funds) தொடர்ச்சியாகக் கிடைப்பதற்கு மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் உரிய வழிகாட்டுதலும் ஒருங்கிணைப்பும் செய்ய வேண்டும். சிறப்புக் குழந்தைகளின் இலவசக் கல்வியும் எதிர்காலமும் நிதி நெருக்கடியால் பாதிக்கப்படுவதைத் தடுக்க வலியுறுத்தி, மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் அமைதிவழி கவன ஈர்ப்புப் போராட்டம் நடைபெற உள்ளது. இது வெறும் நிதியுதவி கோரிக்கை மட்டுமல்ல;, ஆதரவற்ற சிறப்புக் குழந்தைகளின் எதிர்காலத்தைக் காப்பாற்றுவதற்கான போராட்டம். எனவே, தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும், சமூக அக்கறை கொண்ட தனியார் நிறுவனங்களும் மனிதநேயத்துடன் பரிசீலித்து உடனடித் தீர்வு வழங்க வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டுள்ளனர். செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.

கோவை மாநகரில் இயங்கி வரும் 'டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கனவு சிறப்புப் பள்ளி', போதிய நிதி ஆதாரங்கள் இன்றி பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் அங்கு பயிலும் 87 மாற்றுத்திறனாளி குழந்தைகளின் இலவச கல்வி மற்றும் சிகிச்சை வசதிகள் தடைபடும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த நிதி நெருக்கடிக்குத் தீர்வு காண வேண்டி, தமிழக அரசு உடனடியாக தலையிட்டு உதவி வழங்க வேண்டும் என பள்ளி நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது. இக்கோரிக்கையை வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.