மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் நல்ல லாபம் ஈட்ட செய்ய வேண்டிய 3 முக்கிய விஷயங்கள்..! LD பூபாலன், Munnetram Capital
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் நல்ல லாபம் ஈட்ட செய்ய வேண்டிய 3 முக்கிய விஷயங்கள்..! LD பூபாலன் , இணை நிறுவனர், முன்னேற்றம் கேப்பிட்டல் (Munnetram Capital) மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர், காப்பீட்டு ஆலோசகர், ARN-108075 மாதம் 15000 ரூபாய் பங்குச் சந்தை ஈக்விட்டி ஃபண்டில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து விட்டால், 15 ஆண்டுகளுக்குப் பிறகு கோடிக்கணக்கில் பணம் கிடைத்துவிடும் என்று பலர் நம்புகிறார்கள். ஆனால் உண்மையில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது பணம் போட்டு மறந்து விடக்கூடிய ஒரு விஷயம் அல்ல. அது தொடர்ந்து கவனிக்கப்பட வேண்டிய ஒரு பழத் தோட்டம் போன்றது. ஒரு சிறிய செடியை நட்டு தண்ணீர் ஊற்றுவது மட்டும் போதாது. அதற்கு உரம் இட வேண்டும், காய்ந்த இலைகளை அகற்ற வேண்டும், பூக்களை, காய்களை பூச்சிகள் தாக்குகிறதா என்று கவனிக்க வேண்டும். அதுபோலவே ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டையும் அவ்வப்போது பரிசீலனை செய்து சரிசெய்தால் மட்டுமே அது நல்ல பலன் தரும். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் உண்மை: மியூச்சுவல் ஃபண்ட் என்பது வங்கிக் கணக்கு அல்ல. பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப அதன் மதிப்பு மாறும். அதனால் நீண்டகாலத்தில் நல்ல வருமானம் பெற வேண்டும் என்றால், திட்டமிட்ட முதலீடு மட்டுமல்ல, திட்டமிட்ட கண்காணிப்பும் அவசியம். முக்கிய விஷயம் ஏன் அவசியம்? தொடர்ந்து செயல்பாட்டை மதிப்பாய்வு செய்தல் குறைவான வருமானம் திரும் திட்டங்களை கண்டறிய உதவும். சொத்து ஒதுக்கீட்டை சரிசெய்தல் ரிஸ்க்கையும் வருமானத்தையும் சமநிலைப்படுத்தும். காலமுறை மறுசீரமைப்பு லாபத்தை பாதுகாத்து நிதி இலக்குகளை அடைய உதவும். 1. முதலீட்டு திட்டத்தின் செயல்பாட்டை தொடர்ந்து மதிப்பாய்வு செய்யுங்கள் ஒரு ஈக்விட்டி ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்த பிறகு, அது எப்படி செயல்படுகிறது என்பதை ஆண்டுக்கு குறைந்தது ஒரு முறை பார்ப்பது மிகவும் முக்கியம். பங்குச் சந்தை உயர்ந்தாலும், உங்கள் திட்டம் தொடர்ந்து குறைவான வருமானம் அளித்து வந்தால், அதை கவனிக்காமல் இருப்பது பெரிய தவறு. உதாரணமாக, கடந்த மூன்று ஆண்டுகளில் சந்தை சராசரியாக 13 சதவீதம் வளர்ந்திருக்கலாம். ஆனால் உங்கள் திட்டம் 7 சதவீதம் மட்டுமே வளர்ந்திருந்தால், அது ஏன் என்பதை உங்கள் நிதி ஆலோசகரை தொடர்பு கொண்டு கண்டறியுங்கள் , இல்லை என்றால் நீண்டகாலத்தில் உங்கள் செல்வ உருவாக்கத்தை பாதிக்கும். இதுபோன்ற நிலையை முன்கூட்டியே கண்டறிந்து, தேவையானால் சிறந்த திட்டத்திற்கு மாற்றுவது நல்ல முடிவாக இருக்கலாம். 2. சொத்து ஒதுக்கீட்டை சரியான விகிதத்தில் வைத்திருங்கள்: பல முதலீட்டாளர்கள் ஒரு திட்டம் அதிக லாபம் தருகிறது என்று கேள்விப்பட்டவுடன் அதில் அதிக பணத்தை போடுகிறார்கள். குறிப்பாக சிறிய நிறுவனங்களில் முதலீடு செய்யும் ஸ்மால் கேப் ஃபண்ட் திட்டங்களில் அதிக பணம் குவிக்கிறார்கள். இது ரிஸ்கை அதிகரிக்கும். உங்கள் வயது, வருமானம், குடும்ப பொறுப்புகள், ஓய்வூதியத் திட்டம் போன்றவற்றைப் பொறுத்து பங்கு சார்ந்த திட்டங்கள் (நிறுவனப் பங்குகள், ஈக்விட்டி ஃபண்டுகள்), கடன் சார்ந்த திட்டங்கள் (எஃப்.டி, கடன் பத்திரங்கள், கடன் ஃபண்டுகள்), டிஜிட்டல் தங்கம் / வெள்ளி முதலீடு போன்றவற்றில் பணத்தைப் பிரித்து வைத்திருப்பது நல்லது. உதாரணமாக, முப்பது வயதுடைய ஒருவர் நீண்டகால இலக்குகளுக்காக அதிக பங்கு சார்ந்த முதலீடு வைத்திருக்கலாம். ஆனால் ஐம்பத்தைந்து வயதுடைய ஒருவர் அதிக பாதுகாப்பு கொண்ட முதலீட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். 3. காலமுறை மறுசீரமைப்பு மிகவும் அவசியம்: சில திட்டங்கள் அதிகமாக வளரும்போது, அவற்றின் பங்கு உங்கள் மொத்த முதலீட்டில் அதிகரித்துவிடும். இதனால் ஆரம்பத்தில் இருந்த சமநிலை மாறிவிடும். உதாரணமாக, நீங்கள் 70 சதவீதம் பங்கு சார்ந்த முதலீடும் 30 சதவீதம் கடன் சார்ந்த முதலீடும் வைத்திருந்தால், சில ஆண்டுகளுக்குப் பிறகு அது 85:15 ஆக மாறியிருக்கலாம். இந்த நிலையில் சிறிது லாபத்தை பங்குச் சார்ந்த முதலீட்டிலிருந்து எடுத்துக் கொண்டு, மீண்டும் 70:30 என்ற விகிதத்திற்கு மாற்றுவது மறுசீரமைப்பு (Rebalance) எனப்படும். இது லாபத்தை பாதுகாக்கவும், பங்குச் சந்தை சரிவின் தாக்கத்தை குறைக்கவும் உதவும். முதலீட்டாளர்கள் செய்யும் பொதுவான தவறுகள்: மியூச்சுவல் ஃபண்டில் பலர் இழப்பை சந்திப்பதற்கு முக்கிய காரணம் தவறான நேரத்தில் தவறான முடிவுகளை எடுப்பதுதான். பங்குச் சந்தை சரியும்போது பயந்து முதலீட்டை நிறுத்திவிடுவது. நண்பர்கள் அல்லது சமூக ஊடக தகவல்களை மட்டும் நம்பி புதிய திட்டங்களில் முதலீடு செய்வது. ஒரே வகை திட்டங்களில் அதிக பணம் போடுவது. பல ஆண்டுகளாக முதலீட்டை மதிப்பாய்வு செய்யாமல் இருப்பது. தெளிவான நிதி இலக்கு இல்லாமல் முதலீடு செய்வது. இந்தத் தவறுகள் நீண்டகால வருமானத்தை கணிசமாகக் குறைக்கக்கூடும். ஓர் எளிய உதாரணம் ஒருவர் மாதம் ₹ 10,000 எஸ்.ஐ.பி மூலம் 20 ஆண்டுகள் முதலீடு செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். நிலை மதிப்பு மாத முதலீடு ₹ 10,000 காலம் 20 ஆண்டுகள் மொத்த முதலீடு ₹ 24,00,000 சராசரி ஆண்டு வளர்ச்சி 10% சுமார் ₹ 76 லட்சம் சராசரி ஆண்டு வளர்ச்சி 12% சுமார் ₹ 99 லட்சம் சராசரி ஆண்டு வளர்ச்சி 14% சுமார் ₹ 1.3 கோடி இங்கு இரண்டு அல்லது மூன்று சதவீதம் கூடுதல் வளர்ச்சி கூட இறுதி செல்வத்தில் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. அதற்குத்தான் சரியான மதிப்பாய்வு மற்றும் மறுசீரமைப்பு உதவுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை செய்ய வேண்டிய பரிசோதனை: உங்கள் முதலீட்டுத் திட்டத்தை ஆண்டுக்கு ஒருமுறை கீழ்க்கண்ட கேள்விகளின் அடிப்படையில் பரிசோதிக்கலாம். என் முதலீட்டு நிதி இலக்கு இன்னும் மாறாமல் உள்ளதா? என் திட்டம் அதன் வகை திட்டங்களுடன் ஒப்பிடும்போது எப்படி செயல்படுகிறது? பங்கு சார்ந்த மற்றும் கடன் சார்ந்த முதலீட்டின் விகிதம் சரியாக உள்ளதா? ஒரே வகை திட்டங்களில் அதிக முதலீடு உள்ளதா? அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்கான தேவைகளை இந்த முதலீடு பூர்த்தி செய்யுமா? இந்தக் கேள்விகளுக்கு நேர்மையாக பதில் அளித்தால், உங்கள் முதலீட்டுத் தரம் மேம்படும். உணர்ச்சியை விட முதலீட்டு ஒழுங்கு முக்கியம்: ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் வெற்றி பெறுவது எந்தத் திட்டத்தை தேர்வு செய்கிறோம் என்பதனால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. அதை எவ்வளவு காலம் (Time) தொடர்கிறோம், எவ்வளவு முறையாக மதிப்பாய்வு செய்கிறோம், தேவையான மாற்றங்களை சரியான நேரத்தில் செய்கிறோம் என்பதுதான் முக்கியம். பங்குச் சந்தை உயரும்போது பேராசையும், சரியும்போது பயமும் இயல்பானவை. ஆனால் வெற்றிகரமான முதலீட்டாளர்கள் உணர்ச்சியின் அடிப்படையில் முடிவு எடுப்பதில்லை. அவர்கள் திட்டமிட்ட முறையில் முதலீடு செய்து, காலமுறை மதிப்பாய்வு செய்து, தேவையான மாற்றங்களை அமைதியாகச் செய்கிறார்கள். ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது விதை நட்டவுடன் மரமாக மாறிவிடும் மந்திரம் அல்ல. அது பொறுமை, ஒழுங்கு, தொடர்ந்து கண்காணித்தல் ஆகிய மூன்றின் கூட்டுத்தொகை. நல்ல லாபம் பெற வேண்டுமென்றால், திட்டத்தின் செயல்பாட்டை மதிப்பாய்வு செய்யுங்கள், சொத்து ஒதுக்கீட்டை சரிசெய்யுங்கள், காலமுறை மறுசீரமைப்பை பின்பற்றுங்கள். இந்த மூன்று பழக்கங்களை தொடர்ந்து கடைப்பிடித்தால், உங்கள் முதலீடு வெறும் சேமிப்பாக இல்லாமல், உங்கள் எதிர்காலத்தை பாதுகாக்கும் வலுவான செல்வ உருவாக்க கருவியாக மாறும். கூடுதல் தகவல்கள் மற்றும் முதலீட்டுக்கு..! LD பூபாலன் , இணை நிறுவனர், முன்னேற்றம் கேப்பிட்டல் (Munnetram Capital) மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர், காப்பீட்டு ஆலோசகர் ARN-108075 Certified Financial Goal Planner அலுவலகம் : 8/16, நேரு நகர் , 2- ஆம் தெரு , கலப்பட்டி மெயின் ரோடு , கோயம்புத்தூர் – 641014. தொலைபேசி : 93440 31339, 9500 95 4849 மின்னஞ்சல் : Ld.boopalan@gmail.com / info.munnetram@gmail.com
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் அதிக லாபம் ஈட்டுவதற்கு கவனிக்க வேண்டிய மூன்று முக்கிய அம்சங்கள் குறித்து முன்னேற்றம் கேப்பிட்டல் நிறுவனத்தின் இணை நிறுவனர் எல்.டி. பூபாலன் விளக்கியுள்ளார். பங்குச்சந்தையில் மாதம் 15,000 ரூபாய் வீதம் 15 ஆண்டுகள் எஸ்.ஐ.பி (SIP) முறையில் முதலீடு செய்தால் கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும் என்று பலரும் தவறாகக் கருதுகின்றனர்.
மியூச்சுவல் ஃபண்ட் என்பது முதலீடு செய்துவிட்டு அப்படியே விட்டுவிடக்கூடிய ஒன்றல்ல என்று அவர் எச்சரிக்கிறார். முறையான திட்டமிடல் மற்றும் தொடர் கண்காணிப்பு இருந்தால் மட்டுமே மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் எதிர்பார்த்த லாபத்தைப் பெற முடியும் என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.