மெஸ்ஸி ஓய்வு..? மனம் திறந்துள்ள அர்ஜெண்டினா கால்பந்து சங்க தலைவர்..!
அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, சர்வதேச கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து அர்ஜெண்டினா கால்பந்து சங்க தலைவர் கிளாடியோ டாபியா தெரிவித்துள்ளார். 39 வயதான மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி, ஃபிபா கால்பந்து தொடரில் 2022-இல் சாம்பியன் பட்டமும், 2014 மற்றும் 2026-இல் இரண்டாம் இடமும் பிடித்தது. தன் நாட்டுக்காக 125 கோல்களை இதுவரை மெஸ்ஸி பதிவு செய்துள்ளார். அத்துடன், உலக அளவில் கால்பந்து போட்டியில் மெஸ்ஸி பல்வேறு சாதனைகளை அவர் படைத்துள்ளதோடு, கிளப் அணிக்காகவும் விளையாடி சாதனைகளை படைத்து வருகிறார். இந்நிலையில், அவரது ஓய்வு குறித்து அர்ஜெண்டினா கால்பந்து சங்க தலைவர் கிளாடியோ டாபியா, தனது கருத்தை பகிர்ந்துள்ளார். ''ஓய்வு முடிவு முற்றிலும் அவரது வசம்தான் உள்ளது. அது அவரது தனிப்பட்ட முடிவாகவே இருக்கும். இப்போது அவர் சற்று இளைப்பாற வேண்டும். 2022 ஃபிபா உலகக் கோப்பை தொடரின் போது, அவர் 2026-இல் விளையாடுவாரா என்பது எங்களுக்கு தெரியாது? அப்போது அவரிடம் கேட்ட போது ஒவ்வொரு ஆட்டமாக பார்க்கலாம் என்றார். அப்போது அந்த கட்டத்தில் அவரின் சிறந்த வெர்ஷனை நாம் பார்த்தோம். அவர் கால்பந்து விளையாட்டை அனுபவித்து விளையாட அனுமதிக்க வேண்டும். அதன் பின்னர் தனக்கு எது சரி என்பதை சரியான தருணத்தில் அவரே முடிவு செய்வார். நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதை நாம் எல்லோரும் கண்டு மகிழ்ந்தோம். அவரது செயல்பாட்டை எண்ணி பெருமை கொள்ள வேண்டும். இந்த உலகக் கோப்பையில் எங்களை பொறுத்தவரையில் அவரே சிறந்த வீரர். ஒவ்வொரு ஆட்டத்திலும் சாதனை படைத்தார்''. என்று கிளாடியோ டாபியா தெரிவித்துள்ளார். அடுத்த உலகக் கோப்பை தொடர் 2030-இல், ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் மொராக்கோவில் நடைபெறுகிறது. ஃபிபா தொடரின் நூற்றாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு அர்ஜெண்டினா, உருகுவே, பராகுவே நாட்டில் தலா ஒரு ஆட்டம் அந்தத் தொடரில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியின் ஓய்வு குறித்த தனது கருத்துக்களை கால்பந்து சங்கத் தலைவர் கிளாடியோ டாபியா பகிர்ந்துள்ளார். மெஸ்ஸியின் ஓய்வு முடிவு முற்றிலும் அவருடைய தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்தது என்று குறிப்பிட்ட அவர், வீரர் தனது விளையாட்டை முழுமையாக அனுபவிக்க அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
125 சர்வதேச கோல்களைப் பதிவு செய்துள்ள 39 வயதான மெஸ்ஸி, 2022 உலகக் கோப்பையை வென்றதுடன், 2014 மற்றும் 2026-ஆம் ஆண்டுகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்த அணியில் முக்கியப் பங்காற்றியுள்ளார். 2030-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பைத் தொடரின் சில போட்டிகள் அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகளில் நடைபெறவுள்ள நிலையில், மெஸ்ஸியின் எதிர்கால முடிவை அவரே சரியான தருணத்தில் எடுப்பார் என டாபியா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.