'இத இப்படியே விடாதீங்க'... ஜெய்ஸ்வால், சூர்யவன்ஷி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் மாஜி வீரர்
இந்திய இளம் கிரிக்கெட் வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோரின் களத்தில் நடந்த மோதல் சம்பவங்களை சுட்டிக்காட்டி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ), சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஆகியவை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வலியுறுத்தியுள்ளார். ஜெய்ஸ்வால் - அசிதா பெர்னாண்டோ மோதல் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறுள்ளது. இதில், காலே நகரில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 165 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரில் 1 - 0 என்கிற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தலைநகர் கொழும்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் முதல் நாளில் இந்திய தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கும், இலங்கை வேகப்பந்து வீச்சாளர் அசிதா பெர்னாண்டோவுக்கும் இடையே களத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்த பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் ஒருகட்டத்தில் உடல் ரீதியான மோதலாக மாறியது. இந்த சம்பவம் தொடர்பாக இருவரும் ஐசிசி விதிமுறைகளை மீறியதாக ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, இருவருக்கும் போட்டி ஊதியத்தில் 25 சதவீதம் அபராதமும், தலா ஒரு டீமெரிட் புள்ளியும் விதிக்கப்பட்டது. “கடுமையான நடவடிக்கை தேவை” இந்நிலையில், இந்த நடவடிக்கை போதுமானதாக இல்லை என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். இளம் வீரர்களின் கள நடத்தை தொடர்பாக பி.சி.சி.ஐ மற்றும் ஐ.சி.சி கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக, வீரர்களின் தவறான நடத்தையை சாதாரணமாக எடுத்துக்கொண்டால், அவர்கள் மீண்டும் அதே தவறை செய்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் கிரிக்கெட் விளையாட்டின் நற்பெயருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வைபவ் சூர்யவன்ஷி மோதல் இதேபோல் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தொடர்பான முந்தைய கள மோதல் சம்பவத்தையும் மஞ்ச்ரேக்கர் தனது கருத்தில் குறிப்பிட்டுள்ளார். இளம் வீரர்கள் சர்வதேச அளவில் வளர்ந்து வரும் நிலையில், அவர்களின் திறமைக்கு இணையாக ஒழுக்கமும், களத்தில் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வதும் முக்கியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். “தவறான முன்னுதாரணமாகிவிடும்” முன்னணி வீரர்கள் களத்தில் ஆக்ரோஷமாக விளையாடுவது கிரிக்கெட்டில் புதிதல்ல. ஆனால், ஆக்ரோஷம் என்ற பெயரில் எதிரணி வீரர்களுடன் உடல் ரீதியாக மோதுவது அல்லது எல்லை மீறிய நடத்தையில் ஈடுபடுவதை அனுமதிக்கக்கூடாது என்பதே மஞ்ச்ரேக்கரின் கருத்தாக உள்ளது. குறிப்பாக இளம் வீரர்களுக்கு ஆரம்பத்திலேயே சரியான கட்டுப்பாடுகள் விதிக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர வாய்ப்புள்ளதாக அவர் எச்சரித்துள்ளார். ஜெய்ஸ்வால் - அசிதா பெர்னாண்டோ மோதலுக்கு ஏற்கனவே ஐ.சி.சி தண்டனை வழங்கியுள்ள நிலையில், சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் இந்தக் கருத்து கிரிக்கெட் வட்டாரத்தில் மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய இளம் கிரிக்கெட் வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோரின் களத்தில் நடந்த மோதல் சம்பவங்கள் குறித்து முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார். இத்தகைய ஒழுங்கீனமான செயல்களை அப்படியே விட்டுவிடக் கூடாது என அவர் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் பி.சி.சி.ஐ மற்றும் ஐ.சி.சி ஆகிய அமைப்புகள் தலையிட்டு, சம்பந்தப்பட்ட வீரர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி குறித்த சூழலில், வீரர்களின் இத்தகைய செயல்பாடுகள் குறித்து அவர் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.