சாப்பிட மேஜை கேட்ட இந்திய பெண் விஞ்ஞானிக்கு ஜெர்மனியில் இனவெறி அவமதிப்பு வீடியோ; மன்னிப்பு கேட்ட நிர்வாகம்..!
ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் இந்தியாவைச் சேர்ந்த விஞ்ஞானியும், சமூக வலைதள வீடியோ பதிவருமான அனன்யா, கடந்த 08 மாதங்களாகத் தங்கி பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் அவர் அங்குள்ள ரோஸ்டாக் பகுதியில் அமைந்துள்ள வார்னெமுண்டே கடற்கரையில் உள்ள 'பீட்டர் பேன் பர்கர் கிரில்' என்ற பிரபல உணவகத்திற்குத் தனது தோழியுடன் சென்றுள்ளார். அங்கு இனவெறி பாகுபாட்டுடன் நடத்தப்பட்டதாகப் புகார் தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். உணவகத்தின் வரவேற்பு பகுதியில் ஊழியர் யாரும் இல்லாததால், சுமார் 05 நிமிடங்கள் காத்திருந்த பிறகு, அவர்கள் உள்ளே சென்று 02 பேருக்கு மேஜை உள்ளதா என்று ஊழியரிடம் கேட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த உணவக ஊழியர் ஒருவர், கோபத்துடன், 'உள்ளே வரக்கூடாது என்று உங்களுக்குத் தெரியாதா? அங்குதான் நிற்க வேண்டும். நீங்கள் வெறும் 10 செகண்ட்தான் காத்திருந்தீர்கள்; என்னிடம் பொய் சொல்லாதீர்கள்.' என்று சத்தமாக கத்தி ஆர்ப்பாட்டம் செய்துள்ளார். அத்துடன், மெனு கார்டை மேஜை மீது தூக்கி வீசியதுடன் மற்ற வாடிக்கையாளர்களிடம் இவர்களைப் பற்றித் தவறாகப் பேசியுள்ளார். இதனால் அதிர்ச்சியும் மன உளைச்சலும் அடைந்த அனன்யா, உணவைச் சாப்பிடாமல் அங்கிருந்து வெளியேறியுள்ளார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டார். அதையடுத்து அந்த பர்கர் உணவக நிர்வாகம், நடந்த சம்பவத்திற்கு மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். 100க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் எங்களிடம் பணியாற்றுகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணை தொடங்கப்பட்டு உள்ளது.'என்று பதிலளித்துள்ளது.

ஜெர்மனியில் கடந்த எட்டு மாதங்களாகப் பணியாற்றி வரும் இந்திய விஞ்ஞானியும், சமூக வலைதளப் பதிவருமான அனன்யா, அங்குள்ள ரோஸ்டாக் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் இனவெறி பாகுபாட்டை எதிர்கொண்டுள்ளார். தனது தோழியுடன் வார்னெமுண்டே கடற்கரையில் உள்ள அந்த உணவகத்திற்குச் சென்ற அவர், சாப்பிட மேஜை கேட்டபோது ஊழியர்களால் அவமதிக்கப்பட்டுள்ளார்.
உணவகத்தின் வரவேற்பு பகுதியில் ஊழியர் இல்லாததால் ஐந்து நிமிடங்கள் காத்திருந்ததாகக் கூறப்படும் நிலையில், இந்தச் சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, தனது ஊழியரின் செயலுக்கு அந்த உணவக நிர்வாகம் மன்னிப்பு கோரியுள்ளது.