எம்.எல்.ஏக்களுக்கு கார் வாங்க நிதி இருக்கு, விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்ய நிதி இல்லையா? கே.வீ.இளங்கீரன் கண்டனம்
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வாங்கவும் உதவியாளர்கள் நியமிக்க சம்பளம் கொடுக்கவும் நிதி இருக்கும் போது, விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய நிதி இல்லையா அல்லது மனம் இல்லையா என்று தமிழ்நாடு அரசுக்கு காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் கே.வீ.இளங்கீரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: "234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் வாங்க அரசிடம் நிதி இருக்கிறது. ஆனால், மக்கள் மற்றும் விவசாயிகள் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்தால் மட்டும் அரசு நிதி நெருக்கடியில் இருக்கிறது என்று காரணம் கூறுகிறீர்கள். முதலமைச்சரின் பாஷையிலேயே கேட்க வேண்டுமென்றால், 'ஊரான் வீட்டு நெய்யில் உங்களுக்கு ஸ்வீட்டா?' முதல்வரே! இன்றைய சூழலில் மக்களுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிதண்ணீர் இல்லை; விவசாயம் செய்யப் போதிய தண்ணீர் இல்லை. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் 10 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை வீதம், ஒரு ஆண்டிற்கு 20 தடுப்பணைகள் கட்டினால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதனால் மீன்பிடித் தொழிலும் பெருகி, லட்சக்கணக்கான விவசாயிகள் மற்றும் மீன்பிடித் தொழிலாளர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய நேர்மறையான மாற்றம் ஏற்படும். ஆட்சிக்கு வரும் முன் 'மாற்றம் மாற்றம்' என்றீர்களே, இதுதான் அந்த மாற்றமா? தமிழக முதலமைச்சரே, இது நிச்சயம் மாற்றம் இல்லை; மக்களுக்குச் செய்யப்பட்ட ஏமாற்றமே" என்று காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் கே.வீ.இளங்கீரன் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். - க.சண்முகவடிவேல்

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வாங்கவும், அவர்களின் உதவியாளர்களுக்கு ஊதியம் வழங்கவும் நிதி ஒதுக்கீடு செய்யும் தமிழ்நாடு அரசு, விவசாயிகளின் கடன் தள்ளுபடிக்கு நிதி ஒதுக்காதது ஏன் என்று காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் கே.வீ.இளங்கீரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
விவசாயிகளின் கடன் சுமையைப் போக்க அரசுக்கு நிதி இல்லையா அல்லது மனமில்லையா என அவர் கடுமையாகச் சாடியுள்ளார். 234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் வாங்கும் அரசு, விவசாயிகள் மற்றும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் மட்டும் ஏன் மெத்தனம் காட்டுகிறது என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.