புதுச்சேரி பட்ஜெட் தொடர்: மகளிர் உதவித்தொகை ரூ.2,500 ஆக உயர்வு; ஆளுநர் உரையில் முக்கிய அறிவிப்புகள்
புதுச்சேரி 16-வது சட்டப்பேரவையின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் உரையுடன் தொடங்கியது. சட்டப்பேரவைக்கு உரை நிகழ்த்த வருகை தந்த துணைநிலை ஆளுநரை சபாநாயகர் அன்பழகன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து காவல்துறையினரின் மரியாதையை ஏற்றுக்கொண்ட துணைநிலை ஆளுநரை, சபாநாயகர் அன்பழகன் சட்டப்பேரவையின் மைய மண்டபத்திற்கு அழைத்துச் சென்றார். தமிழ்க்கடவுள் வாழ்த்துடன் தொடங்கிய இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் திருக்குறள் வாசித்து தனது உரையைத் தொடங்கினார். சுமார் ஒரு மணி நேரம் பேரவையில் உரை நிகழ்த்திய அவர், அதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். துணைநிலை ஆளுநர் தனது உரையில், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் வறுமைக்ககோட்டுக்குக் கீழ் உள்ள 42,000 பேர் பயன் பெற்று வரும் நிலையில், வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ள 38,200 பேர் கூடுதலாக இதில் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி 2 கோடி ரூபாயில் இருந்து 3 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், காரைக்கால் கடற்கரையை மேம்படுத்த 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இத்துடன், முதியோர் உதவித்தொகை பெறும் திட்டத்தில் புதிதாக 15,000 பேர் இணைக்கப்பட உள்ளதாகவும், மகளிர் உதவித்தொகை 1,000 ரூபாயில் இருந்து 2,500 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் தனது உரையில் அறிவித்தார். தனது உரையை நிறைவு செய்து புறப்பட்ட துணைநிலை ஆளுநர் கைலாசநாதனை சபாநாயகர் அன்பழகன் வழிஅனுப்பி வைத்தார். அதனைத் தொடர்ந்து, பேரவை நடவடிக்கைகளைப் பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைத்த சபாநாயகர், பிற்பகல் 3 மணிக்கு நிதித்துறைப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்வார் என அறிவித்தார். புதுச்சேரி வரலாற்றிலேயே முதல் முறையாகத் தற்காலிக சபாநாயகரைக் கொண்டு நடத்தப்படும் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது. செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி

புதுச்சேரி 16-வது சட்டப்பேரவையின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர், துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் உரையுடன் இன்று தொடங்கியது. சபாநாயகர் அன்பழகன் ஆளுநரை வரவேற்று, சட்டப்பேரவையின் மைய மண்டபத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு காவல்துறையினரின் மரியாதையை ஏற்றுக்கொண்ட ஆளுநர், திருக்குறள் வாசித்து தனது உரையைத் தொடங்கினார்.
இந்தக் கூட்டத்தொடரில், பெண்களுக்கான உதவித்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை ஆளுநர் வெளியிட்டார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.