ஸ்கேன் செய்து பெண் குழந்தை எனத் தெரிந்ததும் கொடூரம்...! - சட்டவிரோதக் கருக்கலைப்பில் ஈடுபட்ட கும்பல்... நர்ஸ் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்...!
தர்மபுரி மாவட்டம் பாளையம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதிக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், அந்தப் பெண் மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளார். அப்போது கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை சட்டவிரோதமாக கண்டறியும் நோக்கில் ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. இதில் கருவில் இருப்பது பெண் சிசு என தெரியவந்ததை தொடர்ந்து, அந்தப் பெண்ணுக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.கருக்கலைப்புக்கு பின்னர் உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்தப் பெண், தர்மபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்.மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் பாரதி மற்றும் அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில், கருக்கலைப்பு செய்ததாக கூறப்படும் தர்மபுரியைச் சேர்ந்த நர்சு கற்பகம் (43), இடைத்தரகராக செயல்பட்ட பச்சியம்மாள் ஆகியோரை அதியமான் கோட்டை காவலர்கள் கடந்த 30-ந்தேதி கைது செய்தனர். விசாரணையில், கற்பகம் ஏற்கனவே கர்ப்பிணிகளுக்கு சட்டவிரோதமாக கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை கண்டறிந்து தெரிவிப்பது மற்றும் அதனைத் தொடர்ந்து கருக்கலைப்பு செய்வது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டிருந்தது தெரியவந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் கற்பகத்தின் நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு, அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்கபிலன் பரிந்துரையின் பேரில், கற்பகத்தை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் சரவணன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, கற்பகத்தை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் காவலர்கள் மீண்டும் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை சட்டவிரோதமாக கண்டறிந்து, அதன் அடிப்படையில் கருக்கலைப்பு செய்வது தொடர்பான நடவடிக்கைகளுக்கு எதிராக அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம் பாளையம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், தாய் மீண்டும் கர்ப்பமடைந்தார். இந்தச் சூழலில், கருவில் இருப்பது பெண் குழந்தை என்பதை சட்டவிரோதமாக ஸ்கேன் மூலம் கண்டறிந்த கும்பல், அதனைத் தொடர்ந்து அவருக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்துள்ளது.
கருக்கலைப்பிற்குப் பிறகு அந்தப் பெண்ணின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய செவிலியர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.