கார், வேலை இல்லாததால் காதல் தோல்வி; இப்ப ரெண்டும் இருக்கு: விஜயை திரும்பி பார்க்க வைத்த த.வெ.க எம்.எல்.ஏ
தமிழக சட்டமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களுக்கும் மக்கள் பணிகளை தொய்வின்றி தொடரவும், தொகுதி பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ளவும் அரசு சார்பில் வாகனங்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். மேலும், இந்த வாகனப் பராமரிப்பிற்காக மாதம் தோறும் ரூ.75,000 வாகனப்படியும், உதவியாளர் ஒருவரை நியமித்து ஊதியம் வழங்க மாதத்திற்கு ரூ.25,000 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சட்டமன்ற உறுப்பினர்களிடையே பெரும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு குறித்து சட்டமன்றத்தில் பேசிய பெரியகுளம் தொகுதி த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் சபரி அயங்கரன், தனக்கே உரிய நகைச்சுவையான பாணியில் தனது கல்லூரிப் பருவ நினைவுகளையும் தற்போதைய சூழலையும் பகிர்ந்து கொண்டார். அவர் பேசுகையில், "எனது கல்லூரி காலத்தில் வேலையும் இல்லை, சொந்தமாக காரும் இல்லை என்பதால் எனக்குக் காதல் தோல்வி ஏற்பட்டது. ஆனால், இப்போது எனது தலைவர் எனக்கு வேலையையும் வழங்கி இருக்கிறார். முதலமைச்சர் தற்போது காரையும் வழங்கி இருக்கிறார். நான் தேனியிலிருந்து சென்னை தலைமைச் செயலகத்திற்கு வரும்போதெல்லாம் தொடர் வண்டியில்தான் (ரயிலில்) வருகிறேன். ரயில் நிலையத்தில் இறங்கி தலைமைச் செயலகத்திற்கு ஆட்டோவில் வரும் போதெல்லாம் எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். எனது இந்தச் சிரமத்தையும் கஷ்டத்தையும் நீக்கியுள்ள முதலமைச்சருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்" எனத் தெரிவித்தார். மேலும் முதலமைச்சரின் இந்த புதிய அறிவிப்புக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிப் பணிகளைத் தடையின்றி மேற்கொள்வதற்காக, அரசு சார்பில் புதிய வாகனங்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். மேலும், இந்த வாகனங்களைப் பராமரிப்பதற்காக மாதம் 75,000 ரூபாய் படி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனுடன், பணிகளைச் சிறப்பாகச் செய்ய உதவியாளர் ஒருவரை நியமித்துக் கொள்ளும் வகையில் மாதம் 25,000 ரூபாய் ஊதியமும் வழங்கப்படவுள்ளது. முதலமைச்சரின் இந்த அறிவிப்பு சட்டமன்ற உறுப்பினர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.