செங்கோட்டையன் இதயத்தில் அம்மா இருக்காங்க; ஆனா உங்க பாக்கெட்டில் யார் படம் இருக்கு? ஓ.பி.எஸ்.க்கு ஆதவ், ராஜ்மோகன் பதிலடி
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்றைய (ஆக. 11) விவாதத்தின் போது, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்திற்கும், அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே நடைபெற்ற காரசாரமான விவாதமும், அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் ராஜ்மோகன் மற்றும் ஆதவ் அர்ஜுனா வழங்கிய பதிலடிகளும் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சட்டமன்றத்தில் அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை குறித்து பேசிய ஓ.பி.எஸ்.; ”இந்த நிதிநிலை அறிக்கை, ஒரு பட்ஜெட்டாக இல்லாமல், ஏற்கனவே உள்ள திட்டங்களின் பெயரை மாற்றும் பட்டியலாகவே உள்ளது. தேர்தலின் போது 'கஜானா காலி' என்று பிரச்சாரம் செய்த அரசு, இப்போது தாக்கல் செய்துள்ள அறிக்கையானது அந்தப் பிரச்சாரத்தையே கேள்விக்குறியாக்கிவிட்டது. அறிக்கையின் ஒவ்வொரு பக்கத்திலும் திராவிட மாடல் அரசின் பழைய சாதனைத் திட்டங்களே ஜொலிக்கின்றன. மு.க. ஸ்டாலின் உருவாக்கிய திட்டங்களே புதிய உருக்கொண்டு நிற்கின்றன. புதிய அரசின் திட்டங்களை நான் தேடிக்கொண்டே இருக்கிறேன், ஆனால் எதுவும் இல்லை. பெண்களுக்கு ஆண்டுக்கு ஆறு கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று மக்கள் நம்பியிருந்த நிலையில், அது குறித்து பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை. மாணவர்களின் இடைநிற்றலைத் தடுக்க 15,000 ரூபாய் நிதி உதவி மற்றும் அதற்கான திட்டங்கள் இந்த அறிக்கையில் இடம்பெறாதது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. அனைத்து அரசு பேருந்துகளிலும் மாநிலம் முழுவதும் பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம் என்ற திட்டத்தை விரிவுபடுத்துவார்கள் என மகளிர் நம்பியிருந்த நிலையில், அதிலும் ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது” என்று தெரிவித்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், "ஓ.பி.எஸ் இடம் மாறி இருக்கிறார், அதற்காக இவ்வளவு துதி பாடத் தேவையில்லை" என்றார். செங்கோட்டையனின் இந்தப் பேச்சுக்கு உடனடியாக எதிர்வினையாற்றிய ஓ.பி.எஸ், "முதலில் இடத்தை மாற்றியவர் செங்கோட்டையன் தான்" என்று வாதிட்டார். இதையடுத்து ஓ.பி.எஸ்.க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அமைச்சர்கள் ராஜ்மோகன் மற்றும் ஆதவ் அர்ஜுனா அவையில் கடுமையான பதிலடிகளைத் தூவினர். அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு: "அண்ணன் செங்கோட்டையன் இடம் மாறியபோதும், அவருடைய இதயத்திற்கு அருகில் இருக்கும் நிழற்படத்தை (முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம்) மாற்றவே வேண்டாம் என்று உறுதியாக இருக்கிறவர். ஆனால், அண்ணன் ஓ.பி.எஸ் அவர்களின் பாக்கெட்டைப் பார்க்கும்போது, அவர் இடமும் மாறியிருக்கிறார்; கூடவே தன் இதயத்தையும் மாற்றிவிட்டாரோ என்று தோன்றுகிறது" என விமர்சித்தார். அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு: "அண்ணன் செங்கோட்டையன் கட்சி அல்லது இடம் மாறியிருக்கலாம்; ஆனால், இன்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தைத்தான் தன் சட்டைப்பையில் பாதுகாப்பாக வைத்திருக்கிறார். ஆனால், ஜெயலலிதாவால் முதலமைச்சராக்கப்பட்டவர் நீங்கள், இன்றைக்கு உங்களுடைய சட்டைப்பையில் யாருடைய புகைப்படம் இருக்கிறது என்பது தமிழ்நாட்டு மக்கள் அறிந்ததே" என்று காரசாரமாகக் கேள்வி எழுப்பினார். இதனைத் தொடர்ந்து, அமைச்சர்களின் விமர்சனங்களுக்குப் பதிலளித்த ஓ.பி.எஸ், "அமைச்சர்களுக்குப் பதிலளிக்க எனக்குப் போதுமான நேரம் இருக்கிறது; நான் பேசி முடித்தவுடன் அவர்கள் பதிலளித்தால் நன்றாக இருக்கும்" என்று குறிப்பிட்டார். சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே நடைபெற்ற இந்த விவாதம் பெரும் கூச்சலையும் விவாதத்தையும் ஏற்படுத்தியது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 11 அன்று நடைபெற்ற விவாதத்தின் போது, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கும் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே காரசாரமான கருத்து மோதல் ஏற்பட்டது. அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் பட்ஜெட் குறித்து ஓ.பி.எஸ் விமர்சித்த நிலையில், இந்த விவாதம் அரசியல் தளத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கியது.
இந்த விவாதத்தைத் தொடர்ந்து, அமைச்சர்கள் ராஜ்மோகன் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் ஓ.பி.எஸ்ஸிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கருத்துகளைத் தெரிவித்தனர். அமைச்சர்கள் செங்கோட்டையனின் இதயத்தில் அம்மா (ஜெயலலிதா) இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர்கள், ஓ.பி.எஸ்ஸின் பாக்கெட்டில் யாருடைய படம் உள்ளது என்று கேள்வி எழுப்பினர்.