லஞ்ச வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் பாராட்டு...! - ராமநாதபுரம் நகராட்சியின் சான்றிதழால் சர்ச்சை...!
ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு பிரிவு காவலர்கள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் சிக்கியதுடன், நகராட்சி வருவாய் ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், சுதந்திர தின விழாவில் அவருக்கு சிறப்பாக பணியாற்றியதற்காக நற்சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் புகைப்படம் மற்றும் காணொலி காட்சிகள் பரவியதை தொடர்ந்து, வழங்கப்பட்ட சான்றிதழ் உடனடியாக திரும்பப் பெறப்பட்டது.கடந்த ஜூலை 3-ந் தேதி ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு பிரிவு காவலர்கள் திடீர் சோதனை மேற்கொண்டனர். லஞ்ச ஒழிப்பு துணை காவல் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த சோதனையின்போது, கணக்கில் காட்டப்படாத ரூ.3 லட்சத்து 66 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.இதனைத் தொடர்ந்து, நகராட்சி வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயனின் மின்னணு பணப்பரிமாற்ற கணக்குகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில், கடந்த 3 ஆண்டுகளில் அவரது கணக்கில் சுமார் ரூ.25 லட்சம் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.அந்த பணப்பரிமாற்றங்களுக்கு முறையான கணக்கு மற்றும் உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை என கூறப்பட்ட நிலையில், கார்த்திகேயன் மீது ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு பிரிவு காவலர்கள் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டு சுமார் ஒரு மாதம் கடந்த நிலையில், நேற்று ராமநாதபுரம் நகராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சிறப்பாக பணியாற்றியதற்காக வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயனுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.லஞ்ச ஒழிப்பு பிரிவினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த ஒருவருக்கு, நகராட்சி சார்பில் சிறப்பாக பணியாற்றியதற்கான பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்ட தகவல் வெளியானதும் சர்ச்சை மேலும் அதிகரித்தது. இதுதொடர்பான புகைப்படம் மற்றும் காணொலி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பல்வேறு கேள்விகளையும் விமர்சனங்களையும் எழுப்பின.இதுகுறித்து நகராட்சி ஆணையாளரிடம் கேட்டபோது, கார்த்திகேயன் மீது லஞ்ச ஒழிப்பு பிரிவு காவலர்கள் வழக்குப்பதிவு செய்திருப்பது பின்னர் தெரியவந்ததாகவும், இதையடுத்து அவருக்கு வழங்கப்பட்ட நற்சான்றிதழ் திரும்பப் பெறப்பட்டதாகவும் தெரிவித்தார். லஞ்ச வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அதே நபருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு பின்னர் சமூக வலைதளங்களில் சர்ச்சை எழுந்ததும் அது திரும்பப் பெறப்பட்ட சம்பவம் ராமநாதபுரம் நகராட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் கண்டெடுக்கப்பட்டு, வருவாய் ஆய்வாளர் ஒருவர் மீது லஞ்ச வழக்கு பதிவு செய்யப்பட்டது. இத்தகைய சூழலில், சுதந்திர தின விழாவில் அதே அதிகாரியிடம் சிறப்பாகப் பணியாற்றியதற்கான நற்சான்றிதழை நகராட்சி நிர்வாகம் வழங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது குறித்த புகைப்படம் மற்றும் காணொளிகள் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய அந்த நற்சான்றிதழ் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டது. ஜூலை 3-ம் தேதி நடந்த லஞ்ச ஒழிப்புச் சோதனைக்குப் பிறகும், குற்றம் சாட்டப்பட்டவருக்குப் பாராட்டு வழங்கப்பட்ட விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.