PulseNews
அரசியல்

பிரதமர் மோடி தாஷ்கண்ட் சென்றடைந்தார்!

பிரதமர் நரேந்திர மோடி உஸ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கண்ட் நகருக்கு இன்று (29.08.2026) மாலை சென்றடைந்தார். இந்த பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான உத்திப்பூர்வமாக கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்காக, பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் மிர்சியோயேவ் உடன் தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தைகளை நடத்துவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு, டிஜிட்டல் இணைப்பு, எரிசக்தி, கல்வி மற்றும் இருநாட்டு மக்களுக்கு இடையிலான உறவுகள் ஆகிய துறைகளில் உள்ள ஒத்துழைப்பை இரு நாட்டுத் தலைவர்களும் ஆய்வு செய்து, எதிர்காலத்திற்கான திட்டங்களை வகுப்பார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாகப் பிரதமர் மோடி வெளியிட்டிருந்த பதிவில், “ நான் ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 1 வரை உஸ்பெகிஸ்தான் குடியரசு மற்றும் கிர்கிஸ் குடியரசு ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்கிறேன். உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்காத் மிர்சியோயேவின் அழைப்பின் பேரில், ஆகஸ்ட் 29-30 தேதிகளில் அரசுமுறைப் பயணமாக நான் தாஷ்கண்ட் செல்கிறேன். சமீபத்திய ஆண்டுகளில், இந்தியா-உஸ்பெகிஸ்தான் இடையிலான மூலோபாய கூட்டாண்மை கணிசமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. வர்த்தகம் மற்றும் முதலீடு, டிஜிட்டல் இணைப்பு, பாதுகாப்பு, எரிசக்தி ஆகியவற்றில் நமது ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்துவது குறித்தும், 'விக்சித் பாரத்' (வளர்ச்சியடைந்த இந்தியா) மற்றும் 'யங்கி உஸ்பெகிஸ்தான்' (புதிய உஸ்பெகிஸ்தான்) ஆகிய நமது பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வைகளை முன்னோக்கி எடுத்துச் செல்வது குறித்தும் அதிபர் மிர்சியோயேவ்வுடன் கலந்துரையாட ஆவலுடன் உள்ளேன். இரு நாடுகளையும் பிணைக்கும் நெருங்கிய கலாச்சார மற்றும் மக்களுக்கு இடையிலான உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தாஷ்கண்ட் அரசு கீழை நாடுகளின் ஆய்வுப் பல்கலைக்கழகத்தில் உள்ள சாஸ்திரி நினைவுச் சின்னம் மற்றும் மகாத்மா காந்தி மையத்திற்கும் நான் செல்லவுள்ளேன். தாஷ்கண்டில் இருந்து, கிர்கிஸ் குடியரசின் அதிபர் சதிர் ஜாபரோவ்வின் அழைப்பின் பேரில், இந்த முக்கிய அமைப்பின் 25 ஆண்டுகளைக் குறிக்கும் 26வது எஸ்சிஓ (SCO - ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக நான் பிஷ்கெக் செல்கிறேன். 2017 முதல் இந்தியா எஸ்சிஓ அமைப்பில் தீவிரமான மற்றும் ஆக்கப்பூர்வமான உறுப்பினராக இருந்து வருகிறது. பாதுகாப்பு, இணைப்பு மற்றும் வாய்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பிராந்தியத்திற்கான இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை மேம்படுத்துவதையும், நமது அண்டை நாடுகளிலும் அதற்கு அப்பாலும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதம் ஆகிய தீமைகளிலிருந்து விடுபட்ட ஒரு பிராந்தியத்திற்காக சக உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்றுவதையும் நான் எதிர்நோக்குகிறேன். மேலும் அதிபர் ஜாபரோவ் மற்றும் பிற எஸ்சிஓ தலைவர்களைச் சந்திப்பதையும், மத்திய ஆசியாவின் வளமான வாழும் பாரம்பரியத்தைக் கொண்டாடும் மற்றும் இந்தியா ஆழ்ந்த மதிப்பைக் கொண்டுள்ள 6-வது உலக நாடோடி விளையாட்டுகளின் (World Nomad Games) தொடக்க விழாவில் கலந்துகொள்வதையும் நான் எதிர்நோக்குகிறேன். இந்த பயணம் மத்திய ஆசியாவில் இந்தியாவின் மூலோபாய கூட்டாண்மைகளை வலுப்படுத்தும், பிராந்தியத்துடனான நமது நாகரீக தொடர்பை ஆழப்படுத்தும், மேலும் உலகின் முன்னணி நாடாக இந்தியாவின் ஈடுபாட்டின் மையமாக இருக்கும் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றிற்கான நமது பகிரப்பட்ட தேடலை முன்னோக்கி கொண்டு செல்லும் என்று நான் நம்புகிறேன்”எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Nakkheeran14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
பிரதமர் மோடி தாஷ்கண்ட் சென்றடைந்தார்!
PulseNews சுருக்கம்

பிரதமர் நரேந்திர மோடி உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் நகருக்கு இன்று (29.08.2026) மாலை சென்று சேர்ந்தார். அங்கு உஸ்பெகிஸ்தான் அதிபர் மிர்சியோயேவுடன் அவர் தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

இந்தச் சந்திப்பில் இரு நாடுகளுக்கு இடையேயான உத்திப்பூர்வ கூட்டாண்மையை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்படும். குறிப்பாக வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, டிஜிட்டல் இணைப்பு, எரிசக்தி மற்றும் கல்வி போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics