அவையில் தகாத வார்த்தைகளுக்கு இடமில்லை...! எதிர்க்கட்சியினருக்கு அமைச்சர் ரமேஷ் காட்டம்...!
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், சட்டப்பேரவை நடவடிக்கைகள் மற்றும் எதிர்க்கட்சியினரின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார்.அவர் கூறியதாவது,"ஜனநாயக மரபுகளுக்கு உட்பட்டே சட்டப்பேரவை நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. அவையில் மரபுக்கு மாறான அல்லது தேவையற்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படும்போது, அவற்றை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது வழக்கமான நடைமுறையாகும். கடந்த ஆட்சிக் காலத்தில் ஜனநாயகத்துக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. ஆனால், தவெக ஆட்சியில் ஜனநாயக நடைமுறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் தனது பொறுப்பை முறையாக மேற்கொண்டு வருகிறார். தவெக உறுப்பினர்களும் அமைச்சர்களும் அவையின் மாண்பைக் காத்து, தங்களுக்கு வழங்கப்படும் நேரத்தில் உரிய முறையில் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். ஆனால், நாங்கள் பேசும்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள முன்னாள் அமைச்சர்கள் தேவையற்ற விவாதத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுகின்றனர். தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துவது, இருக்கைகளில் இருந்து எழுந்து முன்வரிசைக்கு வருவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் தேவையற்ற கூச்சலை எழுப்புவதுடன், இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்புகள் குறித்தும் திட்டமிட்டு தவறான தகவல்களைப் பரப்புகின்றனர். முதல்-அமைச்சரை நோக்கி கேள்விகள் எழுப்பப்படும்போது, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதிலளிப்பதில் என்ன தவறு இருக்கிறது? அமைச்சர்கள் அனைவரும் அரசின் ஓர் அங்கமாகவே செயல்படுகின்றனர்.எதிர்க்கட்சியினருக்கு அரசின் செயல்பாடுகள் மீது மாற்றுக் கருத்துகள் இருந்தால், அவற்றை அவையில் எழுந்து முறையாகத் தெரிவிக்கலாம். யாரையும் கருத்து தெரிவிக்கக் கூடாது என்று தடுக்கவில்லை. கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் உரிய பதில்களை வழங்கி வருகின்றனர்.எனவே, கேள்விகள் முறையாக உள்ளதா, அதற்கு அளிக்கப்படும் பதில்கள் சரியானதா என்பதைத்தான் கவனிக்க வேண்டும்.சட்டப்பேரவையில் உறுப்பினர் சேகர்பாபு பேசும்போது, தங்களது ஆட்சியில் எந்த தவறும் நடைபெறவில்லை என்றும், மிகவும் தூய்மையான நிர்வாகத்தை வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு கூறும் நிலையில், தற்போதைய ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறையில் வெளியாக உள்ள அறிவிப்புகள் என்ன, எந்தெந்த கோவில்களில் என்னென்ன பணிகள் நடைபெறுகின்றன, கணக்குத் தணிக்கை செய்யப்பட்ட விவரங்கள் என்ன என்பனவற்றை அதிகாரிகள் மூலம் தெரிந்துகொள்ள முயற்சிப்பது ஏன்? தவறு செய்யாதவர்கள் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய அவசியம் என்ன? அரசின் ரகசியமான தகவல்களை தெரிந்துகொண்டு, அவற்றை சட்டப்பேரவையில் வெளிப்படுத்துவது முறையான செயலா என்பதையும் சிந்திக்க வேண்டும்.இவ்வாறு அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், சட்டப்பேரவை நடவடிக்கைகள் மற்றும் எதிர்க்கட்சியினரின் செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்தார். ஜனநாயக முறைப்படியே சட்டப்பேரவை நடவடிக்கைகள் நடைபெறுவதாகத் தெரிவித்த அவர், அவையில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டால் அவற்றை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது வழக்கமான நடைமுறை என்று குறிப்பிட்டார்.
கடந்த கால ஆட்சியில் ஜனநாயகத்திற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டிய அமைச்சர், சட்டப்பேரவையில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்கு இடமில்லை என்றும் எதிர்க்கட்சியினரின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடினார்.