PulseNews
லைஃப் ஸ்டைல்

‘எங்க வீட்டுல ரெண்டு பேரும் சமம்’.. சூர்யா-ஜோதிகா உறவின் சக்சஸ் சீக்ரெட் இதுதானா?

தமிழ் திரையுலகில் மிகவும் விரும்பப்படும் நட்சத்திர ஜோடிகளில் ஒருவராக இருப்பவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. திரைத்துறையில் இணைந்து பயணித்ததுடன், திருமணத்திற்குப் பிறகும் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இணைந்து வாழ்ந்து வரும் இவர்களின் உறவு, ரசிகர்கள் மத்தியில் எப்போதும் கவனத்தை ஈர்த்து வருகிறது. சமீபத்தில் தங்கள் திருமண வாழ்க்கை மற்றும் ஒருவருக்கொருவர் அளிக்கும் ஆதரவு குறித்து இருவரும் மனம் திறந்து பேசியிருந்தனர். சூர்யா எப்போதுமே ஒரு ‘கிரீன் ஃபலாக்’ ஆக இருந்தாரா என்று ஜோதிகாவிடம் கேட்கப்பட்டபோது, அவர் சூர்யாவை மனதாரப் பாராட்டினார். “அவர் ஒரு கிரீன் ஃபலாக் தான்... நிச்சயமாக. அவர் ஒரு குறிப்பிடத்தக்கவர். ஒரு ஆணாக, ஒரு கணவனாக, ஒரு நடிகராக, நிச்சயமாக அனைவருக்கும் தெரியும். அவர் மனதில் சமத்துவம் இருக்கிறது. அது பிறவியிலேயே இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். உங்களுடன் இருக்கும் பெண் உங்களுக்கு சமமானவர் என்று நீங்கள் உணர வேண்டும். உண்மையாகவே, நாங்கள் வீட்டில் சமமாக இருக்கிறோம்” என்று ஜோதிகா கூறியிருந்தார். ஒருவருக்கொருவர் வெளிப்படையாக அளிக்கும் இந்த பாராட்டும் மரியாதையும் ஆரோக்கியமான உறவின் முக்கிய அம்சங்களைப் பற்றி பேசுவதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது. உளவியலாளரும் உறவு மேம்பாட்டுப் பயிற்சியாளருமான டெல்னா ராஜேஷ், ஒரு உறவில் சமத்துவம் என்பது வெளிப்படையாகக் காணப்படும் வேலைப் பகிர்வைத் தாண்டி, இருவரின் மனநிலையிலும் தொடங்க வேண்டிய ஒன்று என்கிறார். ஒரு உறவில் சமத்துவம் என்றால், கணவன்-மனைவி இருவரும் வீட்டில் ஒரே வேலையைச் செய்ய வேண்டும் அல்லது இருவரும் ஒரே அளவு சம்பாதிக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. ஒருவரின் பங்களிப்பு மற்றவருடையதை விட வேறுபட்டதாக இருக்கலாம். ஆனால் அந்த வேறுபாடு காரணமாக ஒருவருடைய பங்களிப்புக்கு அதிக மதிப்பும், மற்றவருடைய பங்களிப்புக்கு குறைந்த மதிப்பும் வழங்கப்படக்கூடாது என்பதே உண்மையான சமத்துவம். வீட்டில் யார் சமைக்கிறார்கள், யார் குழந்தைகளைப் பார்த்துக்கொள்கிறார்கள், யார் அதிகமாக சம்பாதிக்கிறார்கள், யார் வீட்டு வேலைகளைச் செய்கிறார்கள் போன்ற விஷயங்கள் நிச்சயமாக முக்கியமானவை. ஆனால் அவை சமத்துவத்தின் வெளிப்புற அம்சங்கள் மட்டுமே. உண்மையான சமத்துவம், ஒருவர் மற்றவரை எவ்வாறு பார்க்கிறார் என்பதில் இருந்து தொடங்குகிறது. “நீ என்னுடன் சமமானவர்” என்ற எண்ணம் மனதளவில் இருக்கும்போதுதான் அது அன்றாட வாழ்க்கையிலும் வெளிப்படும். ஒரு தம்பதியின் கருத்து வேறுபாடுகளின்போதும் இந்த சமத்துவம் வெளிப்படுகிறது. இருவருக்கும் தங்கள் கருத்தைச் சொல்ல சமமான வாய்ப்பு இருக்கிறதா? ஒருவருடைய கருத்து மட்டும் எப்போதும் இறுதி முடிவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறதா? முக்கியமான குடும்ப முடிவுகள் இருவரும் கலந்து ஆலோசித்த பிறகே எடுக்கப்படுகிறதா? இதுபோன்ற கேள்விகளுக்கான பதில்களே அந்த உறவில் உண்மையான சமத்துவம் இருக்கிறதா என்பதை வெளிப்படுத்தும். அதேபோல், ஒருவருடைய கனவுகள் மற்றவருடைய கனவுகளை விட தொடர்ந்து முக்கியமானதாகக் கருதப்படுகிறதா என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம். திருமணத்திற்குப் பிறகு ஒருவரின் தொழில், தனிப்பட்ட விருப்பங்கள் அல்லது வளர்ச்சிக்காக மற்றவர் தொடர்ந்து தியாகம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், அங்கு சமநிலை பாதிக்கப்படலாம். இருவருக்கும் தனிப்பட்ட இலக்குகள், ஆர்வங்கள் மற்றும் வளர்ச்சிக்கான இடம் இருப்பது ஆரோக்கியமான உறவுக்கு மிகவும் அவசியம். உணர்வுகளுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். ஆண் என்பதால் உணர்ச்சிகளை வெளிப்படுத்தக் கூடாது அல்லது பெண் என்பதால் அதிகமாக உணர்ச்சிவசப்படுகிறார் என்று கூறி அவர்களின் உணர்வுகளை குறைத்து மதிப்பிடுவது உறவில் இடைவெளியை உருவாக்கலாம். இருவருமே சோகமாக இருக்கும்போது அதை வெளிப்படுத்தவும், மனதில் இருப்பதைப் பகிரவும், ஆறுதல் தேடவும் பாதுகாப்பான சூழல் இருக்க வேண்டும். ஒரு உறவில் பாதுகாப்பு உணர்வு இருப்பதும் சமத்துவத்தின் முக்கிய அடையாளமாகும். துணையிடம் தனது கருத்தை வெளிப்படுத்தும்போது அவமானப்படுத்தப்படுவோம் அல்லது கோபப்படுத்தப்படுவோம் என்ற பயம் இருக்கக்கூடாது. கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும், ஒருவரை ஒருவர் மதிக்கும் விதத்தில் பேச முடிவது அவசியம். தவறு செய்துவிட்டால் அதை ஒப்புக்கொள்ளவும், மன்னிப்பு கேட்கவும் இருவருக்கும் சமமான சுதந்திரம் இருக்க வேண்டும். அதேபோல், தனிப்பட்ட வளர்ச்சிக்கும் இடம் கொடுக்கப்பட வேண்டும். திருமணம் அல்லது நீண்டகால உறவு என்பது ஒருவருடைய தனிப்பட்ட அடையாளத்தை அழித்துவிடும் ஒன்றாக இருக்கக்கூடாது. புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வது, தொழிலில் முன்னேறுவது, நண்பர்களுடன் நேரம் செலவிடுவது, தனிப்பட்ட ஆர்வங்களைத் தொடர்வது போன்றவற்றுக்கும் இருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பது உறவை மேலும் வலுப்படுத்தும். பாராட்டும் ஒருதலைப்பட்சமாக இருக்கக்கூடாது. குடும்பத்திற்காக ஒருவர் செய்யும் விஷயங்கள் இயல்பான கடமை என்று மட்டும் கருதாமல், அவற்றை கவனித்து நன்றி தெரிவிப்பதும் முக்கியம். சம்பளம் வாங்கி வருவது மட்டுமல்லாமல், வீட்டை நிர்வகிப்பது, குழந்தைகளை கவனிப்பது, துணைக்கு மனதளவில் ஆதரவாக இருப்பது என ஒவ்வொரு பங்களிப்புக்கும் மதிப்பு உண்டு. அந்த உழைப்பை அங்கீகரிப்பது உறவில் நெருக்கத்தை அதிகரிக்கும். சமத்துவம் என்பது எப்போதும் 50-50 என்ற கணக்கில் இருக்க வேண்டியதில்லை என்பதும் முக்கியமானது. வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் ஒருவர் மற்றவரைவிட அதிக பொறுப்புகளை ஏற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். உடல்நிலை, வேலைப்பளு, குழந்தைகள், குடும்பச் சூழல் போன்ற காரணங்களால் பங்களிப்புகள் மாறலாம். ஆனால் அந்த மாற்றம் இருவரின் புரிதலுடனும் பரஸ்பர மரியாதையுடனும் இருக்க வேண்டும். View this post on Instagram A post shared by The Hollywood Reporter India (@hollywoodreporterindia) மேலும், குடும்பத்தில் பெற்றோர் வெளிப்படுத்தும் உறவு முறையை குழந்தைகள் மிக நெருக்கமாக கவனிக்கிறார்கள். சமத்துவம் என்ற வார்த்தையின் அர்த்தத்தை அவர்கள் சிறு வயதிலேயே புரிந்துகொள்ளாமல் இருக்கலாம். ஆனால் யார் மன்னிப்பு கேட்கிறார்கள், யாருடைய பேச்சு கவனமாகக் கேட்கப்படுகிறது, வீட்டில் யாருடைய உழைப்பு பாராட்டப்படுகிறது, கருத்து வேறுபாடுகள் எவ்வாறு தீர்க்கப்படுகின்றன என்பதை அவர்கள் தொடர்ந்து கவனித்துக்கொண்டே இருப்பார்கள். குழந்தைகளிடம் “ஆணும் பெண்ணும் சமம்” என்று சொல்லிக் கொடுப்பதைவிட, அதை பெற்றோர் தங்கள் அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிப்பதைப் பார்ப்பது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். வீட்டில் இருவரும் ஒருவரை ஒருவர் மதித்து பேசுவதையும், முடிவுகளை இணைந்து எடுப்பதையும், தவறு செய்தால் மன்னிப்பு கேட்பதையும் குழந்தைகள் பார்க்கும்போது, அவர்களின் எதிர்கால உறவுகள் குறித்த புரிதலும் ஆரோக்கியமாக உருவாகும். இறுதியில், ஒரு ஆரோக்கியமான உறவை உருவாக்குவது பெரிய பெரிய காதல் அறிவிப்புகளால் மட்டும் அல்ல. அன்றாட வாழ்க்கையில் ஒருவருடைய குரலை மற்றவர் கேட்பது, கருத்துகளுக்கு மதிப்பளிப்பது, பொறுப்புகளை சூழ்நிலைக்கு ஏற்ப பகிர்ந்து கொள்வது, தனிப்பட்ட கனவுகளுக்கு ஆதரவாக இருப்பது, உணர்வுகளைப் புரிந்துகொள்வது, தவறுகளை மன்னிப்பது மற்றும் ஒருவரை ஒருவர் சமமான மனிதராக மதிப்பது ஆகிய சிறிய செயல்கள்தான் நீண்டகால உறவின் வலுவான அடித்தளமாக அமைகின்றன. அந்த வகையில், ஜோதிகா சூர்யாவைப் பற்றி கூறிய “எங்களுக்குள் சமத்துவம் இருக்கிறது” என்ற கருத்து, ஒரு நட்சத்திரத் தம்பதியின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய பாராட்டாக மட்டும் பார்க்கப்பட வேண்டியதில்லை. நீண்டகால உறவில் காதலுடன் சேர்ந்து மரியாதை, நம்பிக்கை, சம உரிமை மற்றும் ஒருவருக்கொருவர் வளர்ச்சிக்கான இடம் ஆகியவை எவ்வளவு முக்கியம் என்பதையும் அது நினைவூட்டுகிறது.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
‘எங்க வீட்டுல ரெண்டு பேரும் சமம்’.. சூர்யா-ஜோதிகா உறவின் சக்சஸ் சீக்ரெட் இதுதானா?
PulseNews சுருக்கம்

தமிழ் திரையுலகின் மிகவும் பிரபலமான நட்சத்திர தம்பதிகளான சூர்யா மற்றும் ஜோதிகா, திருமணத்திற்குப் பிறகும் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்மாதிரியான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் இந்த நீண்டகால வெற்றி மற்றும் பரஸ்பர ஆதரவு குறித்து சமீபத்தில் இருவரும் மனம் திறந்து பேசியுள்ளனர்.

தங்கள் இல்லற வாழ்க்கையில் இருவருக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்படுவதே இவர்களின் உறவின் ரகசியம் என்று கருதப்படுகிறது. சூர்யா எப்போதும் ஒரு சிறந்த துணையாக (Green Flag) இருந்து வருகிறாரா என்பது குறித்தும் ஜோதிகா தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle