PulseNews
லைஃப் ஸ்டைல்

ஒரு புதினா தண்டு போதும்... வீட்டுலயே புதினா செடியே வளர்க்கலாம்

சமையலுக்கு அடிக்கடி பயன்படுத்தப்படும் புதினாவை வீட்டிலேயே எளிதாக வளர்க்கலாம். குறிப்பாக, அதிக இடவசதி தேவையில்லாததால் பால்கனி, ஜன்னல் ஓரம் அல்லது மொட்டைமாடியில் சிறிய தொட்டிகளில்கூட புதினா செடியை வளர்க்க முடியும். புதிதாக விதைகளை வாங்கி விதைப்பதைவிட, ஏற்கெனவே உள்ள புதினா தண்டுத் துண்டுகளைப் பயன்படுத்தி புதிய செடிகளை உருவாக்குவது எளிமையான முறையாகக் கருதப்படுகிறது. 4 முதல் 6 அங்குல தண்டுகள் போதும்! இதற்கு முதலில் 4 முதல் 6 அங்குல நீளமுள்ள ஆரோக்கியமான, பசுமையான புதினா தண்டுகளைத் தேர்வு செய்ய வேண்டும். மிகவும் வாடிய அல்லது சேதமடைந்த தண்டுகளைத் தவிர்ப்பது நல்லது. ஒவ்வொரு தண்டையும் ஒரு இலைக் கணுவுக்குச் சற்று கீழே வெட்ட வேண்டும். பின்னர் தண்டின் கீழ்ப்பகுதியில் உள்ள இலைகளை முழுமையாக அகற்றிவிட்டு, மேல்பகுதியில் சில இலைகளை மட்டும் விட்டுவைக்கலாம். இவ்வாறு செய்வதால் தண்ணீரில் இருக்கும் இலைகள் அழுகும் வாய்ப்பு குறையும். தண்ணீரில் வேர்களை உருவாக்குவது எப்படி? இலைகள் தண்ணீருக்குள் மூழ்காத வகையில், தண்டுகளை ஒரு சுத்தமான கண்ணாடி ஜாடி, குவளை அல்லது பாட்டிலில் தண்ணீர் நிரப்பி வைக்க வேண்டும். தண்டின் கீழ்ப்பகுதி மட்டும் தண்ணீரில் மூழ்கியிருக்க வேண்டும். ஜாடியை நேரடி கடுமையான வெயில் படாத, ஆனால் போதுமான வெளிச்சம் கிடைக்கும் இடத்தில் வைக்கலாம். பொதுவாக 1 முதல் 2 வாரங்களுக்குள் தண்டுகளில் சிறிய வேர்கள் உருவாகத் தொடங்கும். 2-3 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் மாற்றுங்கள்! புதினா தண்டுகள் தண்ணீரில் இருக்கும் காலத்தில் தண்ணீரை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். 2 முதல் 3 நாட்களுக்கு ஒருமுறை பழைய தண்ணீரை அகற்றி, சுத்தமான தண்ணீரை நிரப்ப வேண்டும். ஜாடியின் உட்புறத்தில் பாசி அல்லது அழுக்கு படிந்திருந்தால், அதையும் சுத்தம் செய்து மீண்டும் தண்ணீர் நிரப்பலாம். தண்ணீரில் துர்நாற்றம் வீசினாலோ, தண்டு மென்மையாகி அழுகத் தொடங்கினாலோ அந்தத் துண்டை அகற்றிவிடுவது நல்லது. வேர்கள் வந்ததும் அடுத்த கட்டம்! வேர்கள் சுமார் 1 முதல் 2 அங்குலம் வரை வளர்ந்ததும், புதினா தண்டுகளை மண்ணில் மாற்றி நடலாம். இதற்காக நீர் நன்கு வடியக்கூடிய தொட்டி மண்ணைப் பயன்படுத்த வேண்டும். மண் மிகவும் இறுக்கமாக இல்லாமல், காற்றோட்டத்துடன் இருப்பது செடியின் வளர்ச்சிக்கு உதவும். தண்டை மண்ணில் நடும்போது, வேர்கள் முழுமையாக மண்ணுக்குள் இருக்கும் வகையில் வைத்து, சுற்றிலும் மண்ணை மெதுவாக அழுத்தி நிலைநிறுத்த வேண்டும். நேரடியாக மண்ணிலும் வளர்க்கலாம்! தண்ணீரில் வேர்களை உருவாக்காமல், புதினா தண்டுகளை நேரடியாக ஈரமான மண்ணிலும் நடலாம். இதற்கு ஆரோக்கியமான 4 முதல் 6 அங்குல தண்டுகளை எடுத்து, கீழ்ப்புற இலைகளை நீக்கிவிட்டு, தண்டின் கீழ்பகுதியை ஈரமான மண்ணுக்குள் புதைக்க வேண்டும். முதல் சில நாட்களில் மண் காய்ந்து போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில், அதிகமாக தண்ணீர் ஊற்றுவதையும் தவிர்க்க வேண்டும்; இல்லையெனில் தண்டுகள் அழுகக்கூடும். பகுதி நிழல் போதுமானது! புதினா செடிக்கு நல்ல வெளிச்சம் தேவைப்பட்டாலும், குறிப்பாக இளம் செடிகளை கடுமையான மதிய வெயிலில் வைப்பதைத் தவிர்ப்பது நல்லது. பிரகாசமான, மறைமுகமான சூரிய ஒளி கிடைக்கும் இடம் ஏற்றதாக இருக்கும். செடி வளர்ந்து நன்றாக வேரூன்றிய பிறகு, தேவைக்கேற்ப அதிக வெளிச்சம் கிடைக்கும் இடத்துக்கு மாற்றலாம். View this post on Instagram A post shared by boo garden (@boogarde_official) மண்ணை எப்போதும் ஈரமாக வைத்திருக்க வேண்டுமா? புதினாவுக்கு ஈரப்பதம் பிடிக்கும் என்றாலும், தொட்டியில் தண்ணீர் தேங்கி நிற்கக் கூடாது. மேல் மண் சற்று உலரத் தொடங்கும்போது தண்ணீர் ஊற்றலாம். தொட்டியின் அடிப்பகுதியில் தண்ணீர் வெளியேறுவதற்கான துளைகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதிகப்படியான நீர் வெளியேறாமல் தேங்கினால் வேர்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. வளர்ந்த புதினாவை எப்படி அறுவடை செய்வது? புதினா செடி நன்றாக வளரத் தொடங்கியதும், தேவையான அளவு இலைகள் மற்றும் மென்மையான தண்டுகளை அவ்வப்போது பறித்துப் பயன்படுத்தலாம். செடியின் மேல்பகுதியை மட்டும் வெட்டாமல், தண்டின் ஒரு பகுதியை விட்டு கத்தரிப்பது புதிய கிளைகள் உருவாக உதவும். தொடர்ந்து அறுவடை செய்வதன் மூலம் செடி அடர்த்தியாக வளர வாய்ப்பு உள்ளது. வீட்டில் சிறிய இடம் இருந்தால்கூட, ஒரு குவளை தண்ணீர் அல்லது சிறிய தொட்டியைப் பயன்படுத்தி புதினாவை வளர்க்க முடியும். குறிப்பாக சமையலுக்குத் தேவையான புதினாவை அவ்வப்போது வீட்டிலேயே பறித்து பயன்படுத்துவதற்கு இந்த தண்டு மூலம் இனப்பெருக்கம் செய்யும் முறை எளிமையானதாக இருக்கும்.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ஒரு புதினா தண்டு போதும்... வீட்டுலயே புதினா செடியே வளர்க்கலாம்
PulseNews சுருக்கம்

சமையலுக்குத் தேவையான புதினாவை அதிக இடவசதி இல்லாமலேயே பால்கனி அல்லது மொட்டை மாடியில் உள்ள சிறிய தொட்டிகளில் எளிதாக வளர்க்கலாம். இதற்கு விதைகளுக்குப் பதிலாக, ஆரோக்கியமான 4 முதல் 6 அங்குல புதினா தண்டுகளைப் பயன்படுத்தினால் புதிய செடிகளை உருவாக்குவது எளிது. தண்டு துண்டுகளின் கீழ்ப்பகுதியில் உள்ள இலைகளை நீக்கிவிட்டு, அவற்றை ஒரு கண்ணாடி ஜாடியில் தண்ணீர் நிரப்பி வைத்தால் ஒன்று முதல் இரண்டு வாரங்களில் வேர்கள் வளரத் தொடங்கும். இந்த காலகட்டத்தில் இரண்டொரு நாட்களுக்கு ஒருமுறை தண்ணீரை மாற்றிச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

வேர்கள் வளர்ந்த பிறகு, செடியை நீர் தேங்காதவாறு வடிகால் வசதியுள்ள தொட்டி மண்ணில் நட்டு வளர்க்கலாம். தண்ணீரில் வேர்விடச் செய்யாமலேயே ஈரமான மண்ணில் நேரடியாகவும் தண்டுகளை நடலாம், ஆனால் மண் காய்ந்துவிடாமல் பார்த்துக் கொள்வது அவசியம். செடிக்கு நேரடியாகக் கடுமையான வெயில் படாத, போதுமான வெளிச்சம் கிடைக்கும் இடங்கள் மிகவும் பொருத்தமானவை. செடி நன்கு வளர்ந்தவுடன் அதன் நுனிப்பகுதிகளைத் தொடர்ந்து அறுவடை செய்வதன் மூலம், செடி அடர்த்தியாகப் படர்ந்து புதிய கிளைகளை உருவாக்க உதவும்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle