PulseNews
லைஃப் ஸ்டைல்

விதை போட்ட 70 நாளில் கேரட் ரெடி... வீட்டுத் தோட்டத்துக்கு இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க

வீட்டுத் தோட்டத்தில் எளிதாக வளர்க்கக்கூடிய காய்கறிகளில் கேரட்டும் ஒன்று. சரியான மண், போதுமான சூரிய ஒளி மற்றும் சீரான நீர்ப்பாசனம் ஆகியவற்றை வழங்கினால், தொட்டிகளிலும் கேரட்டை நன்றாக வளர்க்க முடியும். குறிப்பாக கேரட்டின் வேர்ப்பகுதி மண்ணுக்குள் நேராகவும் தடையின்றியும் வளர வேண்டியிருப்பதால், மண் தயாரிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். கேரட் வளர்ப்பதற்கு முதலில் தளர்வான, கற்கள் மற்றும் மண் கட்டிகள் இல்லாத மண்ணைத் தேர்வு செய்ய வேண்டும். கேரட்டின் வேர் வளர்ச்சிக்கு கடினமான மண் தடையாக இருக்கும் என்பதால், பொலபொலவென்று இருக்கும் மணல் கலந்த மண் சிறந்தது. சாதாரண தோட்ட மண், மணல் மற்றும் கோக்கோ பீட் ஆகியவற்றை சம அளவில் கலந்து பயன்படுத்தலாம். மண் நன்றாக வடிகால் வசதியுடன் இருப்பதும் முக்கியம். தண்ணீர் தேங்கி நிற்கும் மண்ணில் கேரட் வேர்கள் அழுகுவதற்கான வாய்ப்பு உள்ளது. கேரட்டை தொட்டியில் வளர்க்க விரும்புபவர்கள் ஆழமான, அடிப்பகுதியில் வடிகால் துளைகள் உள்ள தொட்டியைத் தேர்வு செய்ய வேண்டும். கேரட்டின் வேர் கீழ்நோக்கி வளர்வதால், மிகவும் ஆழம் குறைந்த தொட்டிகளைத் தவிர்ப்பது நல்லது. மண்ணை நிரப்புவதற்கு முன்பு தொட்டியின் அடிப்பகுதியில் தண்ணீர் வெளியேறுவதற்கான போதுமான துளைகள் உள்ளதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும். கேரட் விதைகள் மிகவும் சிறியதாக இருப்பதால், அவற்றை நேரடியாக அடர்த்தியாகத் தூவாமல் கவனமாக விதைக்க வேண்டும். விதைகளை சிறிதளவு மணலுடன் கலந்து தூவினால், அவை ஒரே இடத்தில் குவிவதைத் தவிர்க்கலாம். விதைகளை ஆழமாகப் புதைக்காமல், சுமார் கால் இன்ச் அளவுக்கு மெல்லிய மண் அடுக்கால் மூடினால் போதுமானது. விதைத்த உடனேயே அதிக வேகத்தில் தண்ணீர் ஊற்றாமல், விதைகள் இடம் மாறாத வகையில் மெதுவாக தண்ணீர் தெளிக்க வேண்டும். விதைகள் முளைக்கும் காலத்தில் மண்ணின் ஈரப்பதம் குறையாமல் பார்த்துக்கொள்வது மிகவும் முக்கியம். அதே நேரத்தில் அதிகப்படியான தண்ணீரையும் தவிர்க்க வேண்டும். மண்ணின் மேற்பரப்பு வறண்டு வருவது தெரிந்தால், தேவையான அளவு மட்டும் தண்ணீர் தெளிக்கலாம். குறிப்பாக ஆரம்ப நிலையில் மண் முழுவதுமாக காய்ந்து போனால், சிறிய கேரட் செடிகளின் வளர்ச்சி பாதிக்கப்படலாம். விதைகள் முளைத்த பிறகு, ஒரே இடத்தில் அதிகமான செடிகள் நெருக்கமாக வளர்வதைத் தவிர்க்க வேண்டும். நெருக்கமாக இருக்கும் சிறிய செடிகளை மெதுவாக அகற்றி, ஒவ்வொரு செடிக்கும் போதுமான இடைவெளி விட வேண்டும். இதன் மூலம் கேரட்டின் வேர்ப்பகுதி மண்ணுக்குள் தடையின்றி விரிந்து வளர்ந்து, நல்ல அளவில் கிழங்கு உருவாகும். களைச்செடிகள் இருந்தாலும் அவற்றை ஆரம்பத்திலேயே அகற்றுவது நல்லது. கேரட் செடிகளுக்கு தினமும் குறைந்தது 6 மணி நேரம் நேரடி சூரிய ஒளி கிடைப்பது நல்ல வளர்ச்சிக்கு உதவும். எனவே வீட்டில் பால்கனி, மாடித்தோட்டம் அல்லது ஜன்னல் அருகிலுள்ள இடத்தைத் தேர்வு செய்யும்போது போதுமான சூரிய ஒளி கிடைக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். அதிக வெப்பம் உள்ள பகுதிகளில் மண்ணின் ஈரப்பதம் விரைவாகக் குறையக்கூடும் என்பதால், தேவைக்கேற்ப நீர்ப்பாசனத்தை சரிசெய்ய வேண்டும். கேரட் வளரும்போது அதன் மேல் பகுதி மண்ணுக்கு அருகில் தெரிந்தால், வேரின் அளவைப் பற்றி ஓரளவு தெரிந்துகொள்ள முடியும். ஆனால் அடிக்கடி மண்ணைக் கிளறிப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். வேர் நன்றாக வளர்வதற்கு மண் தளர்வாகவும் ஈரப்பதத்துடனும் இருப்பது முக்கியம். இயற்கை உரம் அல்லது நன்கு மக்கிய கம்போஸ்ட்டை மண் தயாரிக்கும் போதே சேர்ப்பது செடியின் வளர்ச்சிக்கு உதவும். அதிக அளவில் நைட்ரஜன் உரங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதும் நல்லது; அதிக இலை வளர்ச்சிக்கு பதிலாக வேரின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பொதுவாக கேரட் விதைத்ததில் இருந்து சுமார் 70 முதல் 75 நாட்களில் அறுவடைக்கு தயாராகலாம். ஆனால் கேரட் வகை, பருவநிலை, மண் மற்றும் பராமரிப்பு முறையைப் பொறுத்து இந்த கால அளவு மாறுபடலாம். அறுவடை செய்வதற்கு முன்பு கேரட்டின் மேல் தெரியும் வேர்ப்பகுதியின் அளவைப் பார்த்து, தேவையான முதிர்ச்சியை அடைந்துள்ளதா என்பதை கவனிக்கலாம். அறுவடை செய்யும்போது கேரட்டின் இலைகளை மட்டும் பலமாகப் பிடித்து இழுப்பதைத் தவிர்க்க வேண்டும். மண்ணைச் சுற்றிலும் லேசாகத் தளர்த்திவிட்டு, வேர்ப்பகுதியை மெதுவாகப் பிடித்து வெளியே எடுக்கலாம். மண் மிகவும் இறுக்கமாக இருந்தால், முதலில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மண்ணை தளர்த்திய பின்னர் அறுவடை செய்வது எளிதாக இருக்கும். வீட்டிலேயே கேரட்டை வளர்ப்பதில் பெரிய ரகசியம் எதுவும் இல்லை. கற்கள் இல்லாத தளர்வான மண், சரியான ஆழத்தில் விதைப்பு, சீரான ஈரப்பதம், போதுமான சூரிய ஒளி மற்றும் செடிகளுக்கு தேவையான இடைவெளி ஆகியவற்றை சரியாகப் பராமரித்தால், வீட்டுத் தோட்டத்திலேயே ஆரோக்கியமான கேரட்டை அறுவடை செய்ய முடியும். குறிப்பாக விதை முதல் அறுவடை வரை பொறுமையுடன் பராமரித்தால், புதிதாகப் பறித்த கேரட்டின் சுவையை வீட்டிலேயே அனுபவிக்கலாம்.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
விதை போட்ட 70 நாளில் கேரட் ரெடி... வீட்டுத் தோட்டத்துக்கு இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க
PulseNews சுருக்கம்

வீட்டுத் தோட்டத்தில் எளிதாக வளர்க்கக்கூடிய காய்கறிகளில் கேரட்டும் ஒன்று. தொட்டிகளில் கேரட் வளர்க்கும்போது சரியான மண், போதுமான சூரிய ஒளி மற்றும் சீரான நீர்ப்பாசனம் ஆகியவற்றை உறுதி செய்வது அவசியமாகும். விதை விதைத்த 70 நாட்களில் கேரட் அறுவடைக்குத் தயாராகிவிடும்.

கேரட்டின் வேர் மண்ணுக்குள் நேராக வளர வேண்டும் என்பதால், மண் தயாரிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, கற்கள் மற்றும் மண் கட்டிகள் இல்லாத, தளர்வான மண்ணைத் தேர்வு செய்வது அவசியம்; கடினமான மண் வேர் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle