PulseNews
லைஃப் ஸ்டைல்

1,300 ஆண்டுகள் பழமை... விழுப்புரத்தில் கொற்றவை சிற்பம் கண்டெடுப்பு

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டத்தில் சுமார் 1,300 ஆண்டுகள் பழமையான அரிய கொற்றவை சிற்பமும், சோழர் காலத்தைச் சேர்ந்த ஏரி தூம்புக் கல்வெட்டும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த அரிய கண்டுபிடிப்புகள் வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளன. கொடியம் கிராமத்தில் அரிய கொற்றவை சிற்பம் திண்டிவனம் வட்டத்திலுள்ள கொடியம் மற்றும் மேல்பாக்கம் கிராமங்களில் விழுப்புரத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் அண்மையில் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கொடியம் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியின் கரையில் அரிய கொற்றவை சிற்பம் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த சிற்பத்தை அப்பகுதி மக்கள் “வன துர்க்கை” என வழிபட்டு வருகின்றனர். சுமார் 7 அடி உயரம் கொண்ட பலகைக் கல்லில் இந்த சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. 8 கரங்களுடன் எருமைத் தலை மீது கொற்றவை 8 கரங்களுடன் காட்சியளிக்கும் கொற்றவை, எருமைத் தலை மீது நின்ற நிலையில் சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளார். முன் வலக்கரத்தை கீழே தொங்கவிட்டும், இடக்கரத்தில் மணியைத் தாங்கியவாறும் காட்சியளிக்கிறார். அவரது தோள்களுக்குப் பின்னால் பெரிய அம்பறாத் தூணிகள் காட்டப்பட்டுள்ளன. அவற்றில் அம்புகள் அழகாகச் சொருகப்பட்டுள்ளன. சிற்பத்தின் வலது, இடது மேல் மூலைகளிலும், இடக்கரத்தின் அருகிலும் மனித உருவங்கள் இடம்பெற்றுள்ளன. வலது கரத்தின் மீது கிளி அமர்ந்திருப்பதுடன், அதன் கீழே கொற்றவையின் வாகனமான மானும், திரிசூலமும் இடம்பெற்றுள்ளன. கொற்றவையின் காலடிக்கு வலது பக்கத்தில் பூஜை செய்யும் அடியவர் ஒருவர் அமர்ந்துள்ளார். இடது பக்கத்தில் தலைப்பலி வீரர் ஒருவர் அமர்ந்த நிலையில், தனது வலக்கரத்தில் கத்தியைப் பிடித்துள்ளார். அவரது தலை துண்டிக்கப்பட்டு, வெற்றுடல் மட்டுமே காணப்படுகிறது. விழுப்புரத்தில் இதுவரை காணாத சிறப்பு கொற்றவை சிற்பத்தில் தலைப்பலி வீரர் இடம்பெற்றிருப்பது விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள வேறு எந்த கொற்றவை சிற்பத்திலும் இடம்பெறாத அரிய காட்சியாகும். மொத்தம் 5 மனித உருவங்களுடன் காணப்படும் இந்த சிற்பம் பல்லவர் காலத்தைச் சேர்ந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சிற்பம் கி.பி. 7-ம் நூற்றாண்டு முதல் 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகவும், சுமார் 1,300 ஆண்டுகள் பழமையானதாகவும் வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் தெரிவித்துள்ளார். மேல்பாக்கம் ஏரியில் சோழர் கால கல்வெட்டு இதேபோல், மேல்பாக்கம் கிராமத்தில் மிகவும் பரந்து விரிந்து காணப்படும் ஏரியில் உள்ள தூம்பு ஒன்றில் 8 வரிகளைக் கொண்ட கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டை மூத்த கல்வெட்டு ஆய்வாளர் விஜய வேணுகோபால் வாசித்துள்ளார். இந்த கல்வெட்டு இரண்டாம் ராஜராஜ சோழனின் 4-ம் ஆட்சியாண்டைச் சேர்ந்ததாகும். அதாவது, கி.பி. 1150-ம் ஆண்டைச் சேர்ந்த இந்த கல்வெட்டு சுமார் 876 ஆண்டுகள் பழமையானது. காடவராயர் உத்தரவின் பேரில் ஏரி தூம்பு சோழப் பேரரசின் ஆளுகையின் கீழ் இருந்த காடவராய மன்னரின் உத்தரவின் பேரில் மேல்பாக்கம் ஏரிக்கு இந்த தூம்பு அமைக்கப்பட்டதாக கல்வெட்டு மூலம் தெரியவந்துள்ளது. இதை நிறைவேற்றிய படைத்தலைவரின் பெயரை அறிய முடியவில்லை என்றும், கல்வெட்டு தற்போது சிதைந்த நிலையில் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பின்னாளில் காடவராயர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு தனியாட்சி நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தப் பகுதியில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த கொற்றவை மற்றும் சண்டிகேசுவரர் சிற்பங்களும் அமைந்துள்ளதாக வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் தெரிவித்துள்ளார்.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
1,300 ஆண்டுகள் பழமை... விழுப்புரத்தில் கொற்றவை சிற்பம் கண்டெடுப்பு
PulseNews சுருக்கம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டத்தில் உள்ள கொடியம் கிராமத்தில், சுமார் 1,300 ஆண்டுகள் பழமையான அரிய கொற்றவை சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், அதே பகுதியில் சோழர் காலத்தைச் சேர்ந்த ஏரி தூம்புக் கல்வெட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் கோ. செங்குட்டுவன், கொடியம் மற்றும் மேல்பாக்கம் கிராமங்களில் மேற்கொண்ட கள ஆய்வின்போது இந்த வரலாற்றுச் சின்னங்களைக் கண்டெடுத்துள்ளார். இந்த அரிய கண்டுபிடிப்புகள் வரலாற்று ஆய்வாளர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle