காபி சாப்பிடுறேன்னு சொன்னது ஒரு குத்தமா? அதுக்காக இப்படி பண்றீங்களே... பார்த்திபன் சொன்ன சிவாஜியின் மறுபக்கம்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குறித்து நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் பகிர்ந்துள்ள பழைய நினைவுகள் தற்போது கவனம் பெற்றுள்ளன. சிவாஜி கணேசனை நேரில் சந்தித்தபோது ஏற்பட்ட அனுபவம் குறித்து அவர் சுவாரஸ்யமாகப் பேசியுள்ளார். பார்த்திபன் கூறுகையில், “இந்த நேரத்தில் ஒரு எதார்த்தமான விஷயத்தைச் சொல்கிறேன். ஏதாவது தவறாக இருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள். சிவாஜி சாருடன் எனக்கு நிறைய பழக்கம் இருந்தது. தாவணி கனவுகள் படத்தில் டப்பிங் பேசியபோது ஏற்பட்ட பழக்கம் அது. அந்த சமயத்தில் நான் இயக்குநராக அறிமுகமாகும் முயற்சியில் இருந்த காலகட்டம் அது. அந்த சமயத்தில் தயாரிப்பாளர் ஹேம்நாக் பாபுஜி அவருடன் நான் சிவாஜி சாரை சந்திக்க சென்றிருந்தேன். இந்த சந்திப்பில் நான் முன் அனுமதி வாங்காமல், அவரை பார்க்க சென்றுவிட்டேன். சிவாஜி சார் எப்போதும், எதையும் சரியாக செய்ய வேண்டும் என்று நினைப்பவர். நான் அவரிடம், என்னுடைய இயக்குநர் முயற்சி குறித்து தெரிவித்தேன். அவர் செட்டில் உள்ள ஹாலில் அமர்ந்திருந்தார். நான் அவரை நேரில் பார்த்ததும், ‘சார், நான் இயக்குநராக முதல் படம் இயக்க உள்ளேன். நீங்கள் பூஜைக்கு வர வேண்டும் என்று கூறினேன். ஆனால் இதுக்கு நான் எதற்கு, நான் வரவில்லை என்று சொன்னார். நான் ஆசீர்வாதம் வாங்கிக்கொள்கிறேன் என்றேன். அப்போது அவருடைய முகபாவனையிலேயே ஒரு விஷயம் எனக்குப் புரிந்தது. முன்னதாக எந்த நேரமும் கேட்காமல், அப்பாயின்மென்ட் எதுவும் வாங்காமல் திடீரென வந்து சந்தித்துவிட்டோமே என்ற எண்ணம் அவருக்கு இருந்தது போலத் தெரிந்தது. ஏனென்றால், அவர் ஒவ்வொரு விஷயத்தையும் மிகவும் முறையாகச் செய்யக்கூடியவர். அவர் என்னைப் பார்த்து, ‘காபி சாப்பிடுகிறீர்களா?’ என்று கேட்டார். நான், ‘இல்லை ஐயா, பரவாயில்லை’ என்றேன். ஆனால் என்னுடன் வந்தவர் சாப்பிடுகிறேன் என்று சொல்லிவிட்டார். அதை கேட்ட அவர் அதிர்ச்சியாகி ‘சரி, உட்காருங்கள்’ என்று கூறினார். பின்னர் அவர் காபி கொண்டு வரச் சொன்னார். காபி வருவதற்கு சுமார் ஐந்து நிமிடங்கள் ஆனது. அதற்குள் அவர் மீண்டும் மீண்டும், ‘காபி கொடுங்கள்... சீக்கிரம் காபி கொடுங்கள்’ பசங்க இன்வடேஷன் கொடுக்க வந்திருக்காணுங்க, காபி கொண்டு வா, நம்ம வீட்டு காப்பி இவர்கள் சாப்பிட்டது இல்லை கொடு என்று என்று கூறிக்கொண்டிருந்தார். அந்த 5 நிமிடங்களும் இவர் காபி, காபி, காபி என்று சொல்லிக்கொண்டே இருந்தார். அந்தச் சூழ்நிலையே எனக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. அவருடைய பேச்சு, உடல் மொழி, எதிரில் இருப்பவரை அணுகும் விதம் என அனைத்தையும் நான் கவனித்துக்கொண்டிருந்தேன். அதன்பிறகு காபி வந்தது சாப்பிட்டுவிட்டு வந்துவிட்டோம். உங்கள் முன்பு என்பதால் நான் கம்மியாக சொல்லி இருக்கிறேன் என்று சிவாஜியின் மகன் ராம்குமாரின் ட்ரூலி ராம் யூடியூப் சேனலில் பார்த்திபன் கூறியுள்ளார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் தமக்கு இருந்த பழக்கம் குறித்து நடிகர் பார்த்திபன் பகிர்ந்துள்ள பழைய நினைவுகள் தற்போது இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளன. 'தாவணி கனவுகள்' படத்தில் டப்பிங் பேசியபோது சிவாஜி கணேசனுடன் தமக்கு அறிமுகம் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவருடன் தாம் நேரில் சந்தித்தபோது நிகழ்ந்த ஒரு சுவாரஸ்யமான அனுபவத்தை பார்த்திபன் இதில் விவரித்துள்ளார். தான் இயக்குநராக அறிமுகமான காலகட்டத்தில் நடந்த இந்த நிகழ்வை, தவறாக ஏதேனும் இருந்தால் மன்னித்துவிடுமாறு கேட்டுக்கொண்டு அவர் பகிர்ந்துள்ளார்.