10 வயதில் பாரதிராஜா படத்தில் அறிமுகம்; இப்போ வாய்ப்பு இல்லாத காரணம் இதுதான்: மனம் திறந்த நடிகர் காஜா ஷெரிப்
தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து புகழ் பெற்ற நடிகர் காஜா ஷெரிப் தற்போ பட வாய்ப்பு இல்லாமல் இருந்து வரும் நிலையில், தனக்கு ஏன் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். 1979-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புதிய வார்ப்புகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் காஜா ஷெரிப். இந்த படத்தில் நாயகியாக ரதிக்கு தம்பியாக நடித்திருந்தார், இந்த படம் பெரிய வெற்றியை பெற்றிருந்த நிலையில், அடுத்து நீல மலர்கள், உதிரிப்பூக்கள் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த இவர், பாக்யராஜ் இயக்கிய தனது முதல் படமான சுவரில்லாத சித்திரங்கள் படத்தில் காமெடி கேரக்டரில் நடித்திருந்தார், இந்த படத்தில் டெயிலராக நடித்திருந்த கவுண்டமணிக்கு காஜா பாயாக நடித்திருந்தார். இந்த படமும் பெரிய வெற்றியை பெற்றிருந்தது. குறிப்பாக இந்த படத்தில் கவுண்டமணி – காஜா ஷெரிப் இடையேயான காமெடி இன்றைக்கும் ரசிக்கும் வகையில் உள்ளது. அதேபோல் பாக்யராஜ் இயக்கி நாயகனாக நடித்த அந்த 7 நாட்கள் படத்திலும், காஜா ஷெரிப் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படமும் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது அதன்பிறகு தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் முக்கிய மற்றும் காமெடி கேரக்டரில் நடித்த காஜா ஷெரிப், 2007-ம் ஆண்டு வெளியான கலக்குரே சந்துரு என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது வாய்ப்பு இல்லாமல் இருந்து வரும் இவர், கலைநிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். க்ளவுட் 7 சினிமா யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் தனக்கு வாய்ப்பு கிடைக்காத காரணம் என்ன என்பது குறித்து பேசியுள்ளார். 10 வயதில் பாரதிராஜா படத்தில் அறிமுகமானேன். அதன்பிறகு, பாக்யராஜ் சார் படங்களில் நடித்தேன். நான் நடித்த பல படங்கள் தேசிய விருது வாங்கியுள்ளது. ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சிறு வயது கேரக்டர்களில் நான் தான் நடித்திருந்தேன். அப்போது நான் பிஸியாக நடித்த நிலையில், பல கம்பெனிகளில் இருந்து எனக்கு கார்கள் வரும். அப்போ சம்பளமாக ரூ100 கொடுத்தார்கள். ஆனால் நிறைய இடங்களில் ஏமார்ந்து இருக்கிறேன். எனது வீட்டில் பல செக்கள் இருக்கிறது. நான் சம்பளம் அதிகமாக கொடுங்கள் என்று கேட்டால் அடுத்து கூப்பிடமாட்டார்கள். அதனால் சம்பளம் குறித்து கேட்பதே இல்லை. ஆனால் நல்ல கேரக்டர் கொடுங்கள் என்று கேட்பேன். இப்போது பாரதிராஜா, பாக்யராஜ், மனோபாலா, மணிவண்ணன் போனற இயக்குனர்கள் இல்லை. எனது இயக்குனர்கள் இருந்திருந்தால், எனக்கு கண்டிப்பாக வாய்ப்பு கிடைத்திருக்கும். அவர்கள் படம் இயக்காததால் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது இருக்கும் இயக்குனர்களுக்கு என்னை அதிகம் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

1979-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'புதிய வார்ப்புகள்' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் காஜா ஷெரிப். இப்படத்தில் ரதியின் தம்பியாக நடித்த அவர், தொடர்ந்து 'நீல மலர்கள்' மற்றும் 'உதிரிப்பூக்கள்' போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
நீண்ட காலம் தமிழ் சினிமாவில் சிறந்து விளங்கிய காஜா ஷெரிப், தற்போது தனக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருப்பதற்கான காரணத்தை சமீபத்திய நேர்காணல் ஒன்றில் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.