PulseNews
சினிமா

ஏமாற்றிய குடும்பம், கோடி கணக்கில் பணத்தை இழந்தேன்: இப்போது என்னிடம் ஒன்றுமே இல்லை: நடிகை ஷகீலா வேதனை

தென்னிந்திய சினிமாவில் பல வெற்றிப்படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர கேரக்டர்களில் நடித்துள்ள நடிகை ஷகீலா, 10 ஆண்டுகளுக்கு முன்பே தனது சுயசரிதையில், “நான் குற்றவாளி அல்ல; ஆனால் வருத்தமாக இருக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: 2000-களின் தொடக்கத்தில், மலையாள சினிமாவில் மோகன்லால் மற்றும் மம்மூட்டியைத் தவிர, திரையரங்குகளுக்கு மிகப்பெரிய கூட்டத்தை வரவழைக்கும் அளவுக்கு பிரபலமாக இருந்த ஒரே பெயர் ஷகீலா. பல முன்னணி திரைப்படங்கள் தோல்வியடைந்த நிலையில், ஷகீலா நடித்த படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. அவரது சில திரைப்படங்கள், அவற்றின் தயாரிப்பு பட்ஜெட்டைவிட பல மடங்கு வசூல் செய்தன. மென்மையான ஆபாசத் திரைப்படங்கள் மூலம் ஷகீலா வேகமாக உயர்ந்ததும், அதன்பின்னர் அதே வேகத்தில் அவரது திரையுலக வீழ்ச்சி ஏற்பட்டதும் குறுகிய காலத்திலேயே நிகழ்ந்தது. இருப்பினும், மலையாளத் திரையுலக ரசிகர்களின் மனதில் அவரது பெயர் இன்றளவும் ஆழமாகப் பதிந்துள்ளது. சமீபத்தில், ஷகீலா தனது அப்போதைய கருத்தை மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், அதற்கான காரணத்தையும் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். இதில் நான் குற்றவாளி அல்ல... நான் யாருடைய வாழ்க்கையையும் சீரழிக்கவில்லை. என்னுடைய திரைப்படங்களைப் பார்க்கும்படி யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. அதனால் நான் குற்றவாளி அல்ல. ஆனால் நான் மிகவும் வருத்தமாக இருக்கிறேன். எனக்கு சொந்தமானவர்கள் எனது பணத்தை மட்டுமே விரும்பினர்; என்னை விரும்பவில்லை என்பதுதான் எனது வருத்தத்திற்குக் காரணம்” என்று மைல்ஸ்டோன் மேக்கர்ஸ் (Milestone Makers) நிகழ்ச்சியில் அவர் தெரிவித்துள்ளார். ‘எனது மூத்த சகோதரிதான் என்னை அதிகம் ஏமாற்றினார்’: ஷகீலா 2000-களின் தொடக்கத்தில் மலையாள சினிமா தொடர்ந்து சுமார் தரமற்ற அல்லது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத திரைப்படங்களால் தடுமாறிக் கொண்டிருந்தது. அந்தக் காலகட்டத்தில் மென்மையான ஆபாசத் திரைப்படங்கள் மீண்டும் பிரபலமடையத் தொடங்கின. அவற்றில் தொடர்ந்து நடித்து வந்த நடிகைகளில் ஷகீலாதான் மிகப்பெரிய நட்சத்திரமாக உருவெடுத்தார்.ரெடிஃப் (Rediff) தகவலின்படி, வெறும் ரூ.12 லட்சம் பட்ஜெட்டில் உருவான அவரது ‘கின்னரத்தும்பிகள்’ (Kinnarathumbikal, 2000) திரைப்படம் ரூ.4 கோடி வசூல் செய்தது. மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறிய அந்தத் திரைப்படம், மலையாளத் திரையுலகில் குறுகிய காலமே நீடித்தாலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ‘ஷகீலா அலை’ (Shakeela Tharangam) தொடங்குவதற்குக் காரணமாக அமைந்தது. உரையாடல் தொடர்ந்து சென்றபோது, தனது திரையுலக வாழ்க்கையின் உச்சக்கட்டத்தில் சுமார் ரூ.4 கோடி வரை சம்பாதித்ததாக ஷகீலா தெரிவித்தார். இருப்பினும், திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் சம்பாதித்ததைவிட தான் அதிகமாக சம்பாதித்ததில்லை என்றும் அவர் கூறினார். தான் சம்பாதித்த பணம் அனைத்தும் எங்கே சென்றது என்று கேட்கப்பட்டபோது, ஷகீலா கிண்டலாக, “எனது மூத்த சகோதரியிடம் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது. அவர் மகிழ்ச்சியாக செட்டிலாகிவிட்டார்” என்று பதிலளித்தார். அதன்பின்னர், உங்களை அதிகமாக ஏமாற்றியது யார் என்று கேட்கப்பட்டபோது, “எனது மூத்த சகோதரிதான். அவர் அதன்பிறகு என்னைப் பார்க்க வரவில்லை என்பதால் முன்பு நான் வருத்தப்பட்டேன். ஆனால் இப்போது அவர் திரும்பி வரக்கூடாது என்று பிரார்த்திக்கிறேன். ஏனென்றால் அவருக்குக் கொடுப்பதற்கு என்னிடம் இனி பணம் இல்லை” என்று ஷகீலா தெரிவித்துள்ளார். ‘நான் ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை’: திரையுலகம் குறித்து ஷகீலா வாழ்க்கையில் பல்வேறு அனுபவங்களைச் சந்தித்திருந்தாலும், திரையுலகம் தன்னை ஒருபோதும் ‘பயன்படுத்திக் கொண்டது’ என்று தான் நினைத்ததில்லை என ஷகீலா தெரிவித்துள்ளார். “நான் பயன்படுத்தப்பட்டதாக மக்கள் கூறுகிறார்கள். ஆனால் நான் செய்த பணிக்கு உரிய சம்பளம் எனக்குக் கிடைத்தது. அவர்கள் எனக்கு நல்ல தொகையை வழங்கினார்கள். எனவே, அந்த வகையில் அவர்கள் என்னை ஒருபோதும் பயன்படுத்தவில்லை. யாராவது தனது திரையுலக வாழ்க்கையை வேண்டுமென்றே அழிக்க முயன்றதாகவும் தான் நம்பவில்லை. கேரளாவில் உள்ள சில முன்னணி நட்சத்திரங்கள்தான் எனது வாழ்க்கையை அழித்ததாக சிலர் கூறுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு முன்னால் நான் ஒரு சிறிய புல்லைப் போன்றவள். அவர்கள் அப்படிச் செய்ய மாட்டார்கள். அவர்கள் பெரிய மனிதர்கள்; பெரிய மனம் கொண்டவர்கள். எனது உச்சக்கட்ட காலம் என்பது ஒரு அலை, ஒரு காலகட்டத்தின் போக்கு மட்டுமே. அது ஒருநாள் முடிவுக்கு வரும் என்பதை நான் அறிந்திருந்தேன்” என்று அவர் தெரிவித்துள்ளார். ‘நான் நடித்த படங்களுக்காக இன்றும் வருத்தப்படவில்லை’ தான் நடித்த திரைப்படங்களுக்காக இன்றளவும் எந்தவித வருத்தமும் இல்லை. அதனால்தான் 26 ஆண்டுகளுக்குப் பிறகும் நீங்கள் என்னை நேர்காணல் செய்கிறீர்கள். நான் ஏன் அதற்காக வருத்தப்பட வேண்டும்?”. இருப்பினும், எனது வாழ்க்கையை மீண்டும் வாழ்வதற்கான வாய்ப்பு கிடைத்தால், அதே தொழிலைத் தேர்ந்தெடுக்க மாட்டேன், அதற்குப் பதிலாக சிறந்த கல்வியைப் பெறுவதில் கவனம் செலுத்துவேன் என்றும் ஷகீலா கூறினார். “நான் மீண்டும் சென்று, மழலையர் பள்ளியில் இருந்தே நன்றாகப் படிப்பேன். மீண்டும் வாழ்க்கையைத் தொடங்கும் வாய்ப்பு கிடைத்தால், ஒருவேளை ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்று விரும்புவேன். முன்பு எனக்குப் படிப்பதில் ஆர்வம் இல்லை. ஆசிரியர்கள் என்னை அடிப்பார்கள்; அதனால் பள்ளிக்குச் செல்வதையே வெறுத்தேன். இப்போதும்கூட படப்பிடிப்புக்காக பள்ளிகளுக்குச் செல்வதைத் தவிர்க்கிறேன். ஆனால் இப்போது எனது நினைவாற்றல் சிறப்பாக உள்ளது. எனவே, விஷயங்களை எளிதாகக் கற்றுக்கொள்வேன்” என்று ஷகீலா தெரிவித்துள்ளார்.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ஏமாற்றிய குடும்பம், கோடி கணக்கில் பணத்தை இழந்தேன்: இப்போது என்னிடம் ஒன்றுமே இல்லை: நடிகை ஷகீலா வேதனை
PulseNews சுருக்கம்

தென்னிந்திய சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை ஷகீலா, தான் ஒரு குடும்பத்தினால் ஏமாற்றப்பட்டு கோடிக்கணக்கான பணத்தை இழந்துவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளார். தற்போது தன்னிடம் ஏதுமில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே தனது சுயசரிதையில், தான் குற்றவாளி இல்லை என்றும் ஆனால் வருத்தமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். 2000-களின் தொடக்கத்தில் மலையாளத் திரையுலகில் மோகன்லால் மற்றும் மம்மூட்டிக்கு இணையாக, ரசிகர்களைத் திரையரங்குகளுக்கு வரவழைக்கும் பெரும் நட்சத்திரமாக ஷகீலா திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema