PulseNews
சினிமா

5 மொழிகள், 3 தலைமுறை நடிகர்கள்; 48 ஆண்டுகளாக தொடரும் ராதிகா சரத்குமார் திரை பயணம் வெற்றிகரமாக மாறியது எப்படி?

எழுதியவர்: யஷஸ்வினி ஸ்ரீ சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் மற்றும் சூர்யா என இந்திய சினிமாவின் வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த முன்னணி நடிகர்களுடன் திரையைப் பகிர்ந்துகொண்ட மற்றொரு நடிகரைச் சொல்ல முடியுமா? வெவ்வேறு காலகட்டங்களில் குழந்தை நட்சத்திரமாக சிறு காட்சிகளில் தோன்றியவர் அல்ல; அவர்கள் நடித்த ஒவ்வொரு படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில், தனது நடிப்பால் காட்சிகளைத் தாங்கி நிற்கும் நடிகையாக இருந்தவர். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: 48 ஆண்டுகளைக் கடந்து செல்லும் திரைப்பயணம், 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், ஐந்து மொழிகளில் நடிப்பு, தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் உருவாக்கிய தனி சாம்ராஜ்யம், தேசிய திரைப்பட விருது மற்றும் தமிழ் சினிமாவின் மூன்று தலைமுறை முன்னணி நடிகர்களுடன் பணியாற்றிய பெருமை என இந்தப் பட்டியல் தொடங்குவதும் முடிவதும் ராதிகா சரத்குமாரிடம்தான். அவரது திரைப்பயணம் எப்படி தொடங்கியது என்று நீங்கள் யோசித்தால், அது கிட்டத்தட்ட எதிர்பாராத விதமாகவே நடந்தது. லண்டனில் படித்துக்கொண்டிருந்த அவர், 1977-ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறையில் இந்தியாவுக்கு வந்தபோது, இயக்குநர் பாரதிராஜாவின் பார்வையில் பட்டார். தனது அடுத்த படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வழங்கினார். அந்தப் படம் ‘கிழக்கே போகும் ரயில்’. 1978-ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில், அப்போது வெறும் 15 வயதே ஆன ராதிகா, பாஞ்சாலி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். பல ஆண்டுகளாக அளித்த பேட்டிகளில், சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணமே தனக்கு இருந்ததில்லை என்று ராதிகா சரத்குமார் பலமுறை கூறியுள்ளார். ஆனால், முதல் படத்தில் நடித்த பிறகு சினிமா அவரை விடவில்லை. 48 ஆண்டுகள் கடந்தும் அந்தப் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. முதல் தலைமுறை: ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவாஜி கணேசன் 1970-களின் இறுதிப்பகுதியிலும், 1980-களின் முழுக் காலகட்டத்திலும் தென்னிந்திய சினிமாவின் மிகவும் பிஸியான முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த ராதிகா சரத்குமார், ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவாஜி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். 1978 முதல் 1990 வரை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். தெலுங்கில் மட்டும் 1981 முதல் 1989 வரை 120-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். ஆண், பெண் என எந்த நடிகராலும் இவ்வளவு வேகத்தில் தொடர்ந்து படங்களில் நடிப்பது அரிதான சாதனையாகவே பார்க்கப்படுகிறது. தனது சமகால நடிகைகளிடமிருந்து ராதிகாவை வேறுபடுத்திக் காட்டியது அவர் தேர்ந்தெடுத்த கேரக்டர்கள் தான். அந்தக் காலத்தில் நடிகைகளுக்கு வழங்கப்பட்ட வழக்கமான கதாநாயகி கேரக்டருக்குள் அவர் தன்னை கட்டுப்படுத்திக்கொள்ளவில்லை. தங்களுக்கென தனிப்பட்ட விருப்பங்களைக் கொண்ட பெண்கள், தங்களது கருத்துகளைத் துணிச்சலாக வெளிப்படுத்தும் பெண்கள், முக்கிய முடிவுகளை தாங்களே எடுக்கும் பெண்கள், கதாநாயகன் வந்து காப்பாற்றுவதற்காகக் காத்திருக்காத பெண்கள் என பல்வேறு கேரக்டர்களில் நடித்தார். அந்த காலகட்டத்தைப் பொறுத்தவரை இது மிகவும் துணிச்சலான தேர்வாக இருந்தது. இதன் காரணமாக அவரது கதாபாத்திரங்கள் தனித்துவமான ஆழத்தையும் இயல்பையும் பெற்றன. இயக்குநர்களும் அவரது நடிப்பை விரும்பினர்; ரசிகர்களும் அதை ஏற்றுக்கொண்டனர். இரண்டாம் தலைமுறை: விஜய், சூர்யா மற்றும் மாற்றம் 1980-கள் மற்றும் 1990-களின் தொடக்கத்தில் முன்னணி நடிகைகளாக இருந்த பெரும்பாலானவர்கள், அடுத்த தலைமுறை கதாநாயகர்கள் வரத் தொடங்கியபோது சினிமாவிலிருந்து ஓய்வு பெற்றனர் அல்லது பொது வாழ்க்கையில் இருந்து விலகினர். ஆனால் ராதிகா சரத்குமார் அப்படிச் செய்யவில்லை. அதற்குப் பதிலாக, தென்னிந்திய சினிமா வரலாற்றிலேயே மிகவும் புத்திசாலித்தனமான மாற்றங்களில் ஒன்றை மேற்கொண்டார். முன்னணி கதாநாயகியாக இருந்த நிலையிலிருந்து, சினிமாவில் மிகவும் நம்பகமான குணச்சித்திர மற்றும் துணை நடிகைகளில் ஒருவராக தன்னை மாற்றிக்கொண்டார். ‘ஜீன்ஸ்’, ‘சகுனி’, ‘நானும் ரவுடிதான்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். சில படங்களில் தாயாகவும், சில படங்களில் குறைந்த நேரமே தோன்றினாலும் கதையின் முக்கியத்துவத்தை உயர்த்தும் கதாபாத்திரங்களிலும் நடித்தார். 1980-களில் அவருடன் பயணித்த பல நடிகைகள் சினிமாவிலிருந்து முற்றிலும் விலகியோ அல்லது டிவி சீரியலுக்கு மாறியோ சென்ற நிலையில், ராதிகா டிவி சீரியலை தனது திரைப்பயணத்திலிருந்து விலகும் ஒரு படியாகப் பார்க்கவில்லை. மாறாக, தனது கலைப் பயணத்தை விரிவுபடுத்துவதற்கான புதிய வாய்ப்பாகக் கருதினார். டிவி சீரியல் சாம்ராஜ்யம் 1999-ஆம் ஆண்டு ராதிகா சரத்குமார் ராடான் மீடியாவொர்க்ஸ் இந்தியா லிமிடெட் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். தமிழ் தொலைக்காட்சி வேகமாக வளரத் தொடங்கிய காலகட்டம் அது. அந்த வளர்ச்சியின் மையப்பகுதியில் ராதிகா தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். 2000-களில் தமிழ் தொலைக்காட்சியில் மிகப் பிரபலமான மற்றும் நீண்ட காலம் ஒளிபரப்பான பல தொடர்களை ராடான் நிறுவனம் தயாரித்தது. அவற்றில் ‘சித்தி’, ‘அண்ணாமலை’, ‘செல்வி’, ‘அரசி’ உள்ளிட்ட தொடர்கள் முக்கியமானவை. தெலுங்கிலும் ‘இதி கதா காடு’ என்ற தொடரை தயாரித்ததன் மூலம் தனது நிறுவனத்தின் செயல்பாடுகளை மற்றொரு மொழிக்கும் விரிவுபடுத்தினார். குறிப்பாக ‘சித்தி’ தொடர் தமிழ்நாட்டில் மிகப்பெரிய கலாச்சார நிகழ்வாகவே மாறியது. பல ஆண்டுகள் ஒளிபரப்பான இந்தத் தொடர், ராதிகாவை திரைப்பட நட்சத்திரமாக மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நட்சத்திரமாகவும் மாற்றியது. அதன் பிரபலத்துக்கு சான்றாக, பின்னர் அந்தத் தொடர் மீண்டும் உருவாக்கப்பட்டபோது ராதிகாவும் அதில் இணைந்தார். மூன்றாம் தலைமுறை: சூர்யா மற்றும் தற்போதைய காலகட்டம் 2026-ஆம் ஆண்டில் ராதிகா சரத்குமார் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தில் சூர்யாவின் தாயாக நடித்துள்ளார். ஒருகாலத்தில் தன்னைவிட வயதில் மூத்த கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்தவர், இன்று சூர்யாவின் தாயாக நடிக்கிறார். இருந்தாலும், இந்தத் திரைப்படத்தில் அந்த தலைமுறை மாற்றம் பெரிதாகத் தெரியாத அளவுக்கு அவரது நடிப்பு இயல்பாக அமைந்துள்ளது. தாயாக அவர் வெளிப்படுத்தும் உணர்வுகளும், கதாபாத்திரத்துக்கு வழங்கும் அழுத்தமான நடிப்பும் இதற்குக் காரணம். ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்திற்கு முன்பாக ‘அன்னபெல் சேதுபதி’, ‘வானம் கொட்டட்டும்’, ‘லவ் டுடே’ உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். ஒவ்வொரு திரைப்படத்திலும் கிடைத்த திரை நேரத்தைவிட அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் துணைக் கதாபாத்திரங்களில் அவர் நடித்திருந்தார். தெலுங்கு சினிமாவிலும் தனது பயணத்தைத் தொடர்ந்து வரும் ராதிகா, ரவி தேஜாவுடன் ‘ராஜா தி கிரேட்’, ‘கிருஷ்ணா விருந்தா விஹாரி’, ‘ஆதிகேசவா’ மற்றும் ‘எஸ். சரஸ்வதி’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். மீண்டும் கதாநாயகியாக ராதிகா இந்த ஆண்டின் தொடக்கத்தில் யாரும் எதிர்பாராத மற்றொரு விஷயத்தை ராதிகா சரத்குமார் செய்தார். அவர் மீண்டும் கதாநாயகியாக திரும்பினார். அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் மற்றும் சுதன் சுந்தரம் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனங்களின் கீழ் உருவான ‘தாய் கிழவி’ திரைப்படத்தில் ராதிகா, பவுனுத்தாயி என்ற கேரக்டரில் நடித்தார். மதுரை அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும், மிகவும் சுதந்திரமான சிந்தனை கொண்ட, அச்சத்தை ஏற்படுத்தும் வயதான பணம் கடன் கொடுப்பவராக அவர் நடித்திருந்தார். இந்தப் படம் முழுமையாக ராதிகாவின் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டிருந்தது. சுமார் ரூ.10 கோடி பட்ஜெட்டில் உருவானதாகக் கூறப்படும் ‘தாய் கிழவி’, திரையரங்குகளில் ரூ.82 கோடி வசூல் செய்ததாக தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் அந்த ஆண்டின் அதிக லாபம் ஈட்டிய தமிழ் திரைப்படங்களில் ஒன்றாக இப்படம் மாறியது. 48 ஆண்டுகளாக தொடரும் வெற்றி 63 வயதிலும், 48 ஆண்டுகால திரைப்பயணத்திற்குப் பிறகும், 280-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பிறகும் ராதிகா சரத்குமார் தொடர்ந்து முக்கியத்துவம் பெறுவதற்கான காரணம் அவரது தகவமைத்துக்கொள்ளும் திறனும், சினிமாவின் மாறிவரும் தன்மையைப் புரிந்துகொள்ளும் திறனும் ஆகும். சினிமாவில் ஒரு நடிகரின் வாழ்க்கை என்பது ஒரே ஒரு பணியைச் செய்வது மட்டுமல்ல என்பதை மற்றவர்களைவிட முன்கூட்டியே ராதிகா புரிந்துகொண்டார். கதாநாயகி, குணச்சித்திர நடிகை, தாய் கதாபாத்திரம், தொலைக்காட்சி நடிகை, தயாரிப்பாளர் என காலத்துக்கு ஏற்ப தனது பயணத்தை மாற்றிக்கொண்டார். அதனால்தான் சிவாஜி கணேசன் முதல் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா என மூன்று தலைமுறைகளைக் கடந்து, இன்றும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைத் தக்க வைத்திருக்கும் அரிய நடிகையாக ராதிகா சரத்குமார் திகழ்கிறார்.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
5 மொழிகள், 3 தலைமுறை நடிகர்கள்; 48 ஆண்டுகளாக தொடரும் ராதிகா சரத்குமார் திரை பயணம் வெற்றிகரமாக மாறியது எப்படி?
PulseNews சுருக்கம்

ஐந்து மொழிகளில் நடித்து, இந்திய சினிமாவின் பல்வேறு தலைமுறை நடிகர்களான சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் மற்றும் சூர்யா ஆகியோருடன் இணைந்து ராதிகா சரத்குமார் திரைப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 48 ஆண்டுகளாக நீடிக்கும் இவரது கலைப் பயணம், பல்வேறு காலக்கட்டங்களில் முன்னணி நடிகர்களுக்கு இணையாக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துத் தனித்துவம் பெற்றுள்ளது.

குழந்தை நட்சத்திரமாக அல்லாமல், ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்புத் திறமையால் காட்சிகளை வலுப்படுத்தும் முக்கிய நடிகையாக ராதிகா திகழ்கிறார். இத்தகைய நீண்டகால திரைப்பயணத்தின் வெற்றிக்கான காரணங்கள் மற்றும் அதன் சிறப்பம்சங்களை இச்செய்தி விவரிக்கிறது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema