மூக்குத்தி அம்மன் காவிய படம் இல்லை! காப்பி அடித்து தான் மூக்குத்தி அம்மன் எடுத்தேன்: ஆர்ஜே பாலாஜி ஓபன் டாக்!
காமெடியனாக சினிமாவில் அறிமுகமாகி, பின்னர் நடிகராகவும், தற்போது இயக்குநராகவும் வலம் வருபவர் ஆர்ஜே பாலாஜி. அவர் இயக்கி சமீபத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், வசூலிலும் சிறப்பாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நடிகை நயன்தாராவுடன் இணைந்து ஆர்ஜே பாலாஜி இயக்கிய ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் குறித்த அவர் தெரிவித்துள்ள சுவாரஸ்யமான தகவல் தற்போது கவனம் பெற்றுள்ளது. 2020ஆம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தில் நயன்தாரா அம்மன் கதாபாத்திரத்திலும், ஆர்ஜே பாலாஜி செய்தியாளர் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். மூடநம்பிக்கைகள் மற்றும் போலிச் சாமியார்களை நையாண்டி செய்யும் வகையில் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் ‘மூக்குத்தி அம்மன்’ படத்திற்கான இன்ஸ்பிரேஷன் குறித்து ஆர்ஜே பாலாஜி வெளிப்படையாக பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. “மூக்குத்தி அம்மன் படம் ஒன்றும் காவியம் கிடையாது. இந்தியில் வெளியான ‘PK’ படத்தை அடிப்படையாக வைத்துதான் தமிழில் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தை எடுத்தேன். அதில் ஏலியன் கதாபாத்திரமாக இருந்ததை அம்மன் கதாபாத்திரமாக மாற்றிவிட்டேன்” என ஆர்ஜே பாலாஜி கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘PK’ படத்தில் வரும் செய்தியாளர் கதாபாத்திரத்தின் சாயலில் தனது கதாபாத்திரத்தை உருவாக்கியதாகவும், தனது சொந்த குடும்பத்தைப் போலவே கதையில் மூன்று தங்கைகளை இணைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். “அதில் வரும் ரிப்போர்ட்டர் கதாபாத்திரத்தில் நானே நடித்தேன். என்னுடைய குடும்பத்தில் இருப்பது போல மூன்று தங்கைகளை கதைக்குள் சேர்த்துவிட்டேன். இப்படித்தான் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தை எடுத்து முடித்தேன்” என அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் தனித்துவமான தமிழ் படமாக ரசிகர்களால் பார்க்கப்பட்ட ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் கதைக்கருவில் ‘PK’ படத்தின் தாக்கம் இருந்ததை ஆர்ஜே பாலாஜியே வெளிப்படையாக தெரிவித்திருப்பது தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

நடிகர் மற்றும் இயக்குநரான ஆர்.ஜே. பாலாஜி, நயன்தாரா நடிப்பில் வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் குறித்து வெளிப்படையான தகவலைப் பகிர்ந்துள்ளார். இந்தப் படம் ஒரு காவியம் அல்ல என்றும், இந்தியில் வெளியான ‘PK’ திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டே இதனை உருவாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.
‘PK’ படத்தில் ஏலியனாக இருந்த கதாபாத்திரத்தை ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் அம்மன் கதாபாத்திரமாக மாற்றி அமைத்ததாக பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும், அந்தப் படத்தில் வரும் செய்தியாளர் கதாபாத்திரத்தின் சாயலில் தனது பாத்திரத்தை உருவாக்கியதுடன், தனது சொந்தக் குடும்பத்தைப் போலவே கதையில் மூன்று தங்கைகளை இணைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.