PulseNews
சினிமா

தமிழக அரசியலில் நடிகர்கள்: விஜய்யை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்தியது எது? விஷால் விளக்கம்

தமிழகத்தில் நடிகர்கள் அரசியலுக்குள் நுழைவது புதிதல்ல. எம்.ஜி.ஆர். முதல் ஜெயலலிதா வரை, தற்போது விஜய் வரையிலும், திரைத்துறையில் இருந்து அரசியலுக்குள் நுழைந்து ஆட்சி செய்தவர்களின் நீண்ட வரலாறு தமிழகத்திற்கு உள்ளது. ஆனால், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்கள் அரசியலில் வெற்றி பெற்றிருந்தாலும், அவர்களைப் போலவே அரசியலுக்கு வந்து தோல்வியடைந்த நடிகர்களும் பலர் உள்ளனர். அப்படியிருக்க, விஜய்யை மட்டும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தியது என்ன? இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: விஜய் திரைத்துறையில் அறிமுகமான காலத்திலிருந்தே அவரை அறிந்திருக்கும் நடிகர் விஷால், இதற்கான காரணம் விஜய்யின் நட்சத்திர அந்தஸ்துடன் மட்டுமே தொடர்புடையது அல்ல. சரியான நேரம், மக்கள் வைத்த நம்பிக்கை மற்றும் புதிதாக ஏதாவது மாற்றம் வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பே விஜய்யின் அரசியல் வெற்றிக்கு முக்கிய காரணங்கள் என அவர் தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் ஏன் நடிகர்களை ஆட்சி செய்ய நம்புகிறார்கள் என்று கேட்கப்பட்டபோது, இந்த ஆண்டு தொடக்கத்தில் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய் தலைமையிலான அரசின் பல்வேறு முடிவுகளுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துவரும் விஷால், பல நடிகர்களின் அரசியல் முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், விஜய்யின் அரசியல் பிரவேசம் மட்டும் வெற்றி பெற்றதற்கான காரணங்களை விரிவாக விளக்கினார். இது நடிகர்களைப் பற்றியது மட்டுமல்ல. மக்களிடம் மிகப்பெரிய செல்வாக்கு கொண்ட நடிகர்கள் இதற்கு முன்பும் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். ஆனால், நாம் குறிப்பிடாமல் விட்ட பல உதாரணங்களும் உள்ளன. அவர்கள் தோல்வியடைந்திருக்கிறார்கள். சிவாஜி கணேசன் கட்சி தொடங்கினார். பழம்பெரும் இயக்குநர் பாக்யராஜும் கட்சி தொடங்கினார். திரைத்துறையில் இதுபோன்ற பல உதாரணங்கள் இருக்கின்றன. அமிதாப் பச்சன் நினைத்திருந்தால் ஒரு கட்சியைத் தொடங்கியிருக்கலாம். மிதுன் சக்ரவர்த்தி மிகவும் பிரபலமானவர். அவர் மேற்கு வங்கத்தின் அரசியல் முகமாக இருந்திருக்கவும் முடியும். ஆனால், விஜய்யின் விஷயம் வேறுபட்டது. அது ஒரு அழைப்பு போன்றது. ஒருவர் விஜய் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார் என்றால், அவர் ஒரு நடிகர் அரசியல்வாதியாக மாறியிருக்கிறார் என்பதற்காக மட்டும் அல்ல. அவர்களுக்கு ஒரு மாற்றம் தேவைப்பட்டதால்தான். அதுவும் சாதாரண மாற்றம் அல்ல; மிக மிக அவசரமாக ஒரு மாற்றத்தை அவர்கள் விரும்பினார்கள். அதோடு, மக்களுடன் அவர் ஏற்படுத்திய தொடர்பும் முக்கியமானது. அவர் பேசும் விதத்திலேயே ஒரு வித்தியாசம் இருந்தது. அதனால்தான் முதல் முறையாக வாக்களிக்க இருக்கும் இளைஞர்கள் உட்பட பலரும் மாற்றத்தைத் தேர்வு செய்ய முடிவு செய்திருக்கலாம். ஏனென்றால், அவர்கள் முன்னால் வேறு எந்த மாற்று வாய்ப்பையும் பார்க்கவில்லை” என்று விஷால் தெரிவித்தார். 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் விஜய்க்கு சாதகமாக அமைந்ததாக தான் கருதும் ஒரு முக்கியமான தருணத்தையும் விஷால் சுட்டிக்காட்டினார். பிரசாரம் முடிவடைவதற்கு முன்பு அவர் ஆற்றிய கடைசி நாள் பேச்சு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ‘உங்கள் பெற்றோரிடமும், தாத்தா-பாட்டிகளிடமும், உங்கள் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பெரியவரிடமும் சென்று, ஒருமுறை எனக்கு வாக்களிக்கச் சொல்லுங்கள்’ என்று அவர் கேட்டுக்கொண்டார். அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு நீதிபதி வெளிப்படையாகப் பேசியதை நான் பார்த்திருக்கிறேன். தனது பேத்தி, தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிக்குமாறு கூறியதால்தான் தான் வாக்களித்ததாக அவர் தெரிவித்தார். இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன” என்று விஷால் நினைவுகூர்ந்தார். விஜய் தனது அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை (TVK) 2024 பிப்ரவரி 2ஆம் தேதி தொடங்கினார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராகவும் தன்னை அறிவித்தார். 234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழக சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களைப் பெறத் தவறிய போதிலும், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. இதையடுத்து சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் விஜய் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார். அவர் (விஜய்) எப்படி செயல்படுகிறார் என்பதைப் பார்ப்போம். அதைத்தான் நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதுதான் மிகவும் முக்கியமான விஷயம். பொறுப்பு இப்போது அவருடைய தோள்களில் இருக்கிறது. எங்களுக்கு அவர் அளித்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றப் போகிறார் என்பதைப் பார்க்க நாங்கள் ஆவலுடன் இருக்கிறோம்” என்று விஷால் கூறினார். விஜய் முதலமைச்சரான பிறகு அவரைச் சந்தித்த அனுபவத்தையும் விஷால் பகிர்ந்துகொண்டார். “சமீபத்தில் நான் விஜய்யை சந்தித்தபோதும் அவர் அதே விஜய்யாகத்தான் இருந்தார். நான் பூங்கொத்து எதுவும் எடுத்துச் செல்லவில்லை. பொதுவாகவே நான் பூங்கொத்து வாங்குவதில்லை. அவர் அப்படியேதான் இருக்கிறார். மாறியிருப்பது பதவி மட்டும்தான்” என்று விஷால் தெரிவித்தார். அரசியலுக்கு வருவதற்கு முன்பிருந்த விஜய்யின் திரைப்பயணத்தை நினைவுகூர்ந்த விஷால், நடிகர் விஜய் தனக்கு தனிப்பட்ட முறையில் ஒரு உந்துசக்தியாக இருந்ததாகக் கூறினார். விஜய்யின் முதல் படத்திலிருந்தே எனக்கு அவரைத் தெரியும். வாழ்க்கையில் அவர் எல்லாவற்றையும் பார்த்திருக்கிறார். வெற்றி, தோல்வி, விமர்சனம், மிகக் கடுமையான விமர்சனம், தனிப்பட்ட முறையில் காயப்படுத்தும் வகையிலான விமர்சனங்கள் என அனைத்தையும் எப்படி எதிர்கொள்வது என்பதில் அவர் எனக்கு ஒரு உத்வேகம். உடல் தோற்றத்தைப் பற்றிய விமர்சனம், முகத்தைப் பற்றிய விமர்சனம் என எல்லாவற்றையும் அவர் சந்தித்திருக்கிறார். இவற்றை எப்படி எதிர்கொள்வது என்பதில் விஜய் எனக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கிறார். அதைத்தான் நான் உங்களிடம் சொல்ல விரும்புகிறேன்” என்று விஷால் கூறினார். ஒரு காலத்தில் ரோகிணி திரையரங்கில் ரசிகராக இருந்து விஜய்யின் படத்தைப் பார்த்து உற்சாகமாகக் கொண்டாடினேன். இப்போது எனது மகுடம் படத்தை அது மாதிரி அதே தியேட்டரில் கொண்டாட உள்ளேன் என விஷால் கூறியுள்ளார். விஷால் இயக்குநராக அறிமுகமாகும் அவரது அடுத்த திரைப்படமான ‘மகுடம்’, ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
தமிழக அரசியலில் நடிகர்கள்: விஜய்யை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்தியது எது? விஷால் விளக்கம்
PulseNews சுருக்கம்

தமிழகத்தில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா போன்ற பல நடிகர்கள் அரசியலில் வெற்றி பெற்றுள்ளனர், அதே நேரத்தில் பலர் தோல்வியையும் சந்தித்துள்ளனர். இந்நிலையில், நடிகர் விஜய் மற்றவர்களிடம் இருந்து தனித்துவமாக வெற்றியடைந்து முதலமைச்சராகப் பொறுப்பேற்றதற்கு, சரியான நேரம், மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து அவர் மீது வைத்த நம்பிக்கை மற்றும் அவருடன் மக்கள் கொண்டிருந்த தொடர்பு ஆகியவையே முக்கிய காரணங்கள் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். குறிப்பாக, தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளில் விஜய் ஆற்றிய பேச்சும், இளைஞர்கள் உள்ளிட்ட மக்களிடம் அவர் ஏற்படுத்திய தாக்கமும் அவரது வெற்றிக்கு வித்திட்டதாக விஷால் குறிப்பிட்டுள்ளார்.

பிப்ரவரி 2, 2024 அன்று தனது தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கிய விஜய், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தார். தற்போது முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், தனக்கு அளித்த வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்றப் போகிறார் என்பதைப் பொறுத்தே பார்க்க வேண்டும் என்று விஷால் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், திரைத்துறையில் தொடக்க காலத்தில் இருந்தே கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு முன்னேறிய விஜய்யின் விடாமுயற்சி, தனக்கு ஒரு முன்மாதிரியாகவும் உந்துசக்தியாகவும் இருப்பதாக அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema