நீலகிரியில் பரபரப்பு...! 61 தேயிலை தொழிற்சாலைகளுக்கு அதிரடி நோட்டீஸ் அனுப்பியது தேயிலை வாரியம்...!
நீலகிரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான சிறு தேயிலை விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள தொகையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 61 தேயிலை தொழிற்சாலைகளுக்கு இந்திய தேயிலை வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நடவடிக்கை சிறு தேயிலை விவசாயிகள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் முக்கிய வாழ்வாதாரமாக சிறு தேயிலை சாகுபடி விளங்கி வருகிறது. இருப்பினும், பசுந்தேயிலைக்கு உரிய குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்காததுடன், தொழிற்சாலைகளிடம் இருந்து நிலுவைத் தொகை கிடைக்காமல் பல ஆண்டுகளாக விவசாயிகள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். குன்னூரில் செயல்பட்டு வரும் இந்திய தேயிலை வாரியம், கடந்த 2017-ம் ஆண்டு விவசாயிகளுக்கு உரிய தொகையை வழங்காத தொழிற்சாலைகளிடம் இருந்து நிலுவைத் தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுத்தது. அப்போது தேயிலை வாரிய இயக்குநராக இருந்த பால்ராஜ், ஏலத் தொகையில் இருந்து பணத்தை வசூலிக்கும் வகையில் புரோக்கர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.இந்த நடவடிக்கையை எதிர்த்து 61 தேயிலை தொழிற்சாலைகள் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி தடை உத்தரவு பெற்றன. இதற்கிடையே, கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளைச் சேர்ந்த 16 தொழிற்சாலைகள் தொடர்பான வழக்கில், கடந்த 2019-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்தது.அதில், 2015 முதல் 2019-ம் ஆண்டு வரையிலான நிலுவைத் தொகையை கணக்கிட்டு ஒரு மாதத்திற்குள் தொழிற்சாலைகளுக்கு தேயிலை வாரியம் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும், நிலுவைத் தொகையில் 50 சதவீதத்தை மூன்று மாதங்களுக்குள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, 61 தொழிற்சாலைகள் தொடர்ந்த மற்றொரு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கடந்த ஜூன் 25-ந்தேதி 2019-ம் ஆண்டு வகுக்கப்பட்ட அதே நடைமுறையை பின்பற்றுமாறு மீண்டும் உத்தரவிட்டது.அதன்படி, சிறு தேயிலை விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு 61 தொழிற்சாலைகளுக்கும் தேயிலை வாரியம் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து தேயிலை வாரிய செயல் இயக்குநர் பரணிகுமார் கூறுகையில், 2019-ம் ஆண்டு நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை வழங்கியதாக தெரிவித்தார்.கடந்த ஜூன் மாதம் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தற்போது 61 தொழிற்சாலைகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றம் வழங்கிய மூன்று மாத கால அவகாசம் இன்னும் நிறைவடையாததால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பின்னர் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார். சில தொழிற்சாலைகள் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்துள்ளதால் மொத்த நிலுவைத் தொகையை துல்லியமாக கணக்கிட முடியாத நிலை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.இருப்பினும், ‘இன்கோ’ தொழிற்சாலைகளில் அதிகளவு நிலுவைத் தொகை இருப்பதாகவும், தனியார் தொழிற்சாலைகளில் அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரையிலும், பல தொழிற்சாலைகளில் ரூ.4 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரையிலும் விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்று பல்வேறு சிறு தேயிலை விவசாய சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், நீதிமன்றம் நிர்ணயித்துள்ள காலக்கெடு நிறைவடைந்த பிறகு முழுமையான விவரங்கள் வெளியிடப்படும் என்று தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான சிறு தேயிலை விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, 61 தேயிலை தொழிற்சாலைகளுக்கு இந்திய தேயிலை வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரியில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரமாகத் திகழும் சிறு தேயிலை விவசாயிகளுக்கு, தகுந்த விலை கிடைக்காத சூழலில் இந்த உத்தரவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நிலுவைத் தொகையை விரைந்து பெற்றுத்தருவதற்கான இந்த முயற்சியை விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.